Friday, June 17, 2016

கப்போஸ்தலரனா சனியன் சைமன் எழுதிய சுவிஷேசம் 05



என்தேவனே மனிதன் உயிர்வாழ்வது போஜனத்தினால் மட்டுமன்றி உம்முடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் என்று எழுதப்பட்டிருக்கிறதே” என்றாள். பரமபிதாவிற்கு எரிச்சல் உண்ணடாயிற்று. “அப்படியே உனக்கில்லடி உபதேசம் ஊருக்குத்தாண்டி” பரமபிதா உறுமினார். அதே கணப்பொழுதில் வானத்திலிருந்து வந்த அந்த இடியோசை கொத்தளங்களாலான அந்த கூரையை பிய்த்துக்கொண்டு தீச்சுவாலையாக வீழ்ந்தது. பரமபிதாவின் மனைவியும் குமாரத்தியும் அவ்விடத்திலேயே மாண்டார்கள். பரமபிதா விறைத்துப்போய் நின்றார்.

அவரது சீடர்கள் பரமபிதாவின் கரங்களை பற்றி ஆறுதல் சொன்னார்கள். பரமபிதாவின் நெஞ்சிலும் ஈரம் இருப்பதை அவரது சீடர்கள் முதன்முறையாகக் கண்டார்கள். அவரது கண்கள் கலங்கின.பரமபிதா தனது இராச்சியத்தின் பட்டணங்கள் ஒவ்வொன்றாக தோற்றுபோன போதும் கலங்காதவர், அவரது ஜனங்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டபோதும் கலங்காதவர், வெட்டி வீழ்த்தப்பட்ட சுடுகாடு போல் வெந்து தணியாத அந்தசுடுமணல் தரையெங்கும் ஒன்றின்மேல் ஒன்றாக பிணங்கள் வீழந்தபோதும் கலங்காதவர், ஆயிரமாயிரம் ஆண்களும் பெண்களும் வீழ்ந்து கிடக்க அநாதரவான குழந்தைகள் பிணங்களின் மேல் தவழ்ந்து திரிந்த காட்சியை கண்டும் கலங்காதவர்,

Kulasekara Pandiyan's photo.

சாவு அவரது அரண்மனை வாசற்படியை மிதித்தபோது கலங்கினார். “ஐயகோ என் வம்சம் அழிகிறதே” பரமபிதா பீறிட்டு கதறினார். அவரது கையாலேயே அவரது மனைவியையும் குமாரத்தியையும் புதைக்க சீடர்கள் ஏற்பாடு செய்தனர். தூரதேசத்தின் ஊடாக சமாதானம் கோரி அனுப்பிய செய்திகளுக்கு தகுந்த பதில் எதுவும் எட்டவில்லை. அதன் நிமித்தம் மீண்டும் தூரதேசத்தில் இருந்து சமாதானம் பண்ணுபவர்களுக்கும் இப்பூமியின் நீதிமான்கள் அனைவருக்கும் அவசரமாக சமாதானம் கோரி செய்தி அனுப்புமாறு பரமபிதா கர்ச்சித்தார்.

துன்மார்க்கர் செய்யும் இடுக்கத்தின் நிமித்தமும் அறிவற்ற அக்கிரமக்காரனின் இரத்தவெறிகொண்ட சூதுகளின் நிமித்தமும் எம்ஜனங்கள் அழிகின்றார்கள். இதனை தடுத்து நிறுத்த இறுதியாக இம்முறையீட்டைச் செய்கின்றோம். அவர்கள் எம்மேல் பழிசாட்டி குரோதம் கொண்டு எங்கள் பிராணனை வாங்க விரும்பி எமது காலடிக்குள் வந்துவிட்டார்கள். எங்கள் இருதயங்கள் இயங்க மறுக்கின்றன. பரமபிதாவின் மேல் மரணத்தின் திகில் விழுகின்றது. பயமும் நடுக்கமும் அவரைப் பீடித்துவிட்டது. பலநாட்களாக நாங்கள் பாதாளத்துக்குள்ளேயே ஒழிந்துகிடக்கின்றோம். எங்கள் ஆத்மாக்கள் கொடிய சிங்கங்களின் நடுவே சிக்கித் தவிக்கும் ஆடுகள் போல் சஞ்சலப்படுகின்றன” என்று அவர்களுக்கு சொல்லக்கடவீர்கள் என்றார்.

இறுதியாக குளிர்தேசத்தில் இருந்து சமாதானம் பேசும் அந்த வெள்ளைச் சம்மனசு அவர்களோடு நேரடியாகப் பேசியது. தென்தேசத்து பட்டாளத்தின் அதிபதிகளுடன் பேசியாயிற்று. அவர்கள் உங்கள் அனைவருக்கும் மன்னிப்பளித்து உயிர்ப்பிச்சை தர சித்தம் கொண்டுள்ளனர். அதற்காக உங்கள் நிமித்தம் நிறைவேற்ற வேண்டிய காரியம் ஒன்றுள்ளது. அதாவது நீங்கள் உங்களிடமிருக்கும் படைக்கலங்கள் அனைத்தையும் கைவிட்டு கைகளை உயர்த்தியவண்ணம் பாதாளக்குழிகளை விட்டு வெளியே வாருங்கள். எல்லாம் நல்லபடியே நடக்கும் என்றது.

இச்செய்தியை அறிந்த பரமபிதா தன்முதன்மைச் சீடன் ஒருவனை அழைத்து அப்படியே ஆகட்டும். சம்மனசு தெரிவித்ததைப்போலவே ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்றார். அதன்படியே அவன் எழுந்துநின்று மற்றய சீடர்களையும், அவர்களது குடும்ப உறவினர்களையும், மற்றும் எழுநூறுபேரடங்கிய பரமபிதாவின் விசுவாசச் சேனையையும் பார்த்துக் கூறியதாவது

“நம் தேவனாகிய பரமபிதா தம்முடையை மகிமையையும், தம்முடைய மகத்துவத்தையும் காண்பிக்கும் வண்ணம் நம் அனைவருக்கும் கட்டளையிடுகின்றார். அவரது தீர்க்கதரிசனம் நம் எல்லோரையும் இரட்சிக்கும் என்று நம்புவோமாக. அப்படியே நாமெல்லாம் எழுந்து படைக்கலங்களை வீசி எறிந்துவிட்டு வெள்ளைக்கொடிகளை உயர்த்திப்பிடித்தவண்ணம் பரமபிதாவை பின்தொடர்வோம். ஆமேன்.

பரமபிதா தம் மூத்த சீடனின் மனைவியாகிய அந்த ஸ்திரீயை நோக்கி இவ்வாறு சொன்னார். “நீ வேற்று மொழி பேசுகிறவளாய் இருப்பதனால் நாம் பாக்கியசாலிகளானோம். உன் நிமித்தம் எங்களுக்கு நன்மை உண்டாகும் படிக்கும், உன்னாலேயே எங்கள் உயிர் பிழைக்கும் படிக்கும் நீயே வெள்ளைக்கொடியுடன் முன்னே செல்லக்கடவாய் என்றார். அத்தோடு பரமபிதாவின் சீடர்களின் ஒருவன் எம்முடன் இருக்கும் தென் தேசத்து யுத்தகைதிகள் நால்வரையும் உன்னுடனேயே முன்னே கூட்டிச் செல்வாய் என்று அந்த ஸ்திரீக்கு மேலும் ஒரு கட்டளையிட்டார். அதன்படியே அந்த ஸ்திரீ வெள்ளைக் கொடியுடன் முன்னே செல்ல பரமபிதாவும் அவரது சீடர்களும் அவர்களைப் பின்தொடர்ந்தனர்.

தென்தேச சேனைகள் இவர்களின் வருகைக்காகக் காத்திருந்தனர். பரமபிதாவும் சீடர்களும் அவர்களை நெருங்கின மாத்திரத்திலயே தென்தேச சேனைகள் அவர்களை மகா சத்தமாய்க் கூப்பிட்டு உங்கள் படைக்கலங்களை மட்டுமல்ல வஸ்திரங்களையும் களைந்துவிட்டு வாருங்கள் என்றனர். பரமபிதா தன்னைத்தானே ஒப்புக்கொடுக்கும் நாள் நெருங்கிற்று.

தென்சேனைகள் அவர்களைச் சுற்றிவளைத்து அவர்கள் கரங்களில் விலங்கிட்டனர். பின்னர் தங்களுக்கு முன்பாக முழந்தாள் படியிட்டு நிற்குமாறு பரமபிதாவுக்கு கட்டளையிட்டனர். பரமபிதா தன் வாழ்நாளில் முதற்தடவையாக முழந்தாளிட்டு நின்றார். அவரது வலது பாரிசத்தில் அவரது மூத்த குமாரனும், இடது பாரிசத்தில் முதன்மைச் சீடன் ஒருவனுமாய் அவ்வாறே முழந்தாளிட்டு நின்றனர். அப்போது தென்சேனைகளின் அதிபதி அவர்களைக் கொல்ல மனமின்றி நச்சுக்குப்பிகளை அவர்களிடம் கொடுத்து நீங்கள் இதனைப் புசியுங்கள், இது உங்களுக்காகவே உங்களால் தயார் செய்யப்பட்டவைதான் என்றான். அவர்கள் அதை புசிக்க மனமின்றி தலைகவிழ்ந்து நின்றனர்.

அதன் பின்னர் அவர்கள் மீதான பரியாசமும், ஆக்கினையும் அரங்கேறிற்று. சிலர் பரமபிதாவின் முகத்திலே துப்பினார்கள். சிலர் அவரது சிரசிலே குத்தினார்கள். வேறுசிலலோ அவரை கன்னத்தில் அறைந்தார்கள். பரமபிதா கடற்கரை மண்ணில் ஓடுமாறு கட்டளையிடப்பட்டார். வஸ்திரமற்ற அவரது உடம்புடன் தொந்தியைத் தூக்கிக்கொண்டு ஓட அவரால் முடியவில்லை. கடலோரத்து ஏரியின் கரை ஒன்றில் கால் இடறி பரமபிதா விழுந்தார். அப்போது தென்சேனையில் இருந்து ஒருவன் புறப்பட்டு ஓடிவந்து பரமபிதாவின் சிரசிலே கோடரியால் கொத்தினான். பரமபிதா நீலநிறக் கோவணத்துடன் மல்லாந்து கிடந்தார்.

அவரது வாயில் இருந்து “சர்வதேசமே சர்வதேசமே ஏன் என்னைக் கைவிட்டாய் என்ற முணுமுணுப்புடன் பரமபிதாவின் ஆவி பிரிந்தது.

அப்போது வட கிழக்கு தேசத்தின் எந்தவொரு ஆலையத்திலும் திரைச்சீலை ஏதும் மேலிருந்து கீழ்வரை இரண்டாக கிழியவில்லை.

முற்றும்










1 comment:

  1. இதுக்கு கொலை மிரட்டல் நிச்சயமாக வந்து இருக்கும்

    ReplyDelete