ஒரு சரித்திரம் சாய்ந்திருக்கின்றது, ஒரு பெரும் சகாப்தம் முடிந்திருக்கின்றது
லெனின், மாவோ, ஹோ சி மின் வரிசையில் வந்த காஸ்ட்ரோ எனும் மாமனிதன் காலமாகிவிட்டார்
ஸ்பெயின் தென்னமெரிக்காவினை பிடித்த காலத்திலிருந்தே சுரண்டல் தொடங்கியது, பின் நாடுகள் சுதந்திரமானாலும் ஒரு வகை அரசியல் நிலவியது, அது ஐரோப்பாவில் நடந்த மோதல்களில் தொடர்ச்சியாக அமெரிக்க கண்டத்திலும் தொடர்ந்தது
வட அமெரிக்க ஐக்கிய மாகானம், கன்டா எல்லாம் ஒரு கட்சி என்றால் தென் அமெரிக்க லத்தீன் நாடுகள் இன்னொரு வகை மத பிரிவு இனம் உட்பட பல மோதல்கள், அமெரிக்காவும் ஐரோப்ப்பாவும் என்ன செய்யும்?
தன் கையாட்களை வைத்து, தென் அமெரிக்காவினை சுரண்டும், நன்றாக சுரன்டும். பெரும் வளமான அந்நாடுகளின் கனிமம் முதல் எல்லா வளத்தையும் சுரண்டும், ஏதும் பிரச்சினை என்றால் அந்நாட்டு அதிபர்கள் நல்ல சொத்துக்களுடன் ஐரோப்பாவில் குடியேறுவார்கள்
அடுத்த அதிபர் வந்து சுரண்டுவார், சுருக்கமாக சொன்னால் இன்றைய தமிழக அரசியல்வாதிகளை நினைத்துகொள்ளுங்கள்
இந்நிலையினை மாற்ற பலர் போராட கிளம்பினர், ஜோசப் மாத்தி என்பவர்தான் முதல் நபர், அவர் ஏற்றி வைத்த தீ ஆங்காங்கு எரிந்தது, அதில் எரிய தொடங்கியர் காஸ்ட்ரோ
காஸ்ட்ரோ காலத்தில் கியூபா பாடிஸ்டுவா என்பவன் ஆட்சியில் இருந்தது, அமெரிக்க பிரதிநிதி போலவே நடந்தான் அவன், கியுபா அறிவிக்கபடா அமெரிக்க அடிமை மாநிலம் போல இருந்தது
போராட கிளம்பிய காஸ்ட்ரோவினை முதலில் கைது செய்து விடுவித்தான் பாடிஸ்டுவா, ஆனால் சே குவேரா எனும் மாமனிதனோடு சேர்ந்தபின் காஸ்ட்ரோ தூள்பறத்தினார், பாடிஸ்டுவாவினை விரட்டி கியூபாவினை கம்யூனிச நாடாக்கினார்
உலகம் அதிர்ந்தது , உலகின் சகல மூலையிலும் கம்யூனிசத்தை வேறறுத்துகொண்டிருந்த அமெரிக்கா தன் காலடியில் ஒரு பொதுவுடமை நாடு உருவாவதை பொறுக்குமா?
பெரும் வன்மத்தோடு அது களமிறங்கியது, காஸ்ட்ரோ அபாரமாக ஆடினார். உலகின் சர்க்கரை கிண்ணம் எனப்படும் அளவு சர்க்கரை வளம் கொண்ட கியூபாவின் சர்க்கரைக்கு தடை விதித்தது அமெரிக்கா
அவ்வளவுதான் கியூபாவில் இருந்த அமெரிக்க நிறுவணங்கள் இனி அரசுடமை என அவர் அறிவிக்க, உலகளவில் அமெரிக்கா மீது கரி பூசிய அவமானம், சிறிய போர் தொடுத்தும் அமெரிக்காவால் காஸ்டோர்வினை தொட முடியவில்லை,
பெரும் போரென்றால் களமிறங்க சோவியத் தயாராக இருந்தது.
அதன் பின் அமெரிக்காவிற்கு கியூபாவிற்கும் தூதரக உறவு கூட இல்லை
இதனை பற்றி எந்த கவலையுமின்றி நாட்டை வழிநடத்தினார் காஸ்ட்ரோ, மக்களுக்கு எல்லா வசதிகளும் கிடைத்தன, உலகின் மிகசிறந்த மருத்துவ வசதிகளும், வாழ்க்கை வசதிகளும் கொண்ட நாடாக கியூபா திகழ்ந்தது
பொதுவாக முதலாளித்துவ நாடுகள் இந்த கம்யூனிச நாடுகளின் மக்கள் வாழ்வினை பற்றி மிக சோகமாக எழுதும்படி பத்திரிகைகளை தூண்டும், காரணம் அம்மாதிரி மக்களில் சமத்துவ வாழ்க்கையினை, நிறைவான வாழ்க்கையினை தன் மக்களும் கேட்டு புரட்சி என இறங்கி விடுவார்களோ என்ற அச்சம்
அப்படி சோவியத்தின் மக்கள் சொர்க்கலோக வாழ்க்கையினை எப்படி மாற்றி எழுதினார்களோ அப்படி கியூப நல்லாட்சியினையும் மறைத்தார்கள்
ஆனால் தென் அமெரிக்காவில் மிக சிறந்த நாடாக கியூபா திகழ்ந்தது, இன்னும் திகழ்கின்றது
பொறுக்குமா அமெரிக்காவிற்கு தன் உளவுதுறையினை ஏவி விட்டது, சிஐஏ எனும் பெரும் சக்தி ஒரு மனிதனிடம் தோற்றது என்றால் அது காஸ்ட்ரோவிடம்
ஒன்றல்ல, இரண்டல்ல கிட்டதட்ட 700 முறை தோற்றது, குண்டு வைப்பார்கள், சாப்பாட்டில் விஷம் வைப்பார்கள், ஊசி போட முயல்வார்கள், சுருட்டில் விஷம் தடவுவார்கள்
காஸ்ட்ரோ தப்பிகொண்டே வந்தார், இடையிடையே சே வினை கொன்றது காஸ்ட்ரோ எனும் பெரும் வதந்தி வருமாறும் பார்த்துகொள்வார்கள்.
கியூப மக்கள் காஸ்ட்ரோவினை கடவுளுக்கும் ஒரு படி மேலாக பார்த்த்தால் எல்லா வதந்திகளையும் கடந்து சென்றார்கள்.
உலகெல்லாம் போர்களையும், குழப்பங்களையும் சர்வ சாதரணமாக விதைக்கும் அமெரிக்காவால் கியூபாவினை நெருங்க கூட முடியவில்லை, ஒரு குழப்பத்தையும் அவர்களால் விதைக்க முடியவில்லை
அமெரிக்காவின் பெரும் ஆயுதமான பொருளாதார தடை கூட கியூபாவினை அசைக்க முடியவில்லை
நாசர், சதாம், , கடாபி என பெரும் ஜாம்பவன்களை துரத்திய அமெரிக்கா, ஓடவிட்டு அடித்த அமெரிக்கா. எத்தனையோ வெற்றிகளை பெற்ற அமெரிக்கா காஸ்ட்ரோ எனும் மனிதனிடம் தோற்றிருக்கின்றது
அதனை ஒப்புகொள்ளத்தான் வேண்டும், அமெரிக்கா தோற்ற வெகுசில இடங்களில் முதலிடம் நிச்சயம் காஸ்ட்ரோவிற்கு, இதனை விட ஒரு போராளிக்கு என்ன பெருமை வேண்டும்
இதுதான் பிடல் காஸ்ட்ரோ எனும் பெருமகனின் அசைக்கமுடியாத புகழ்.
பெரும் நீண்ட வரிசையினை கண்டவர் காஸ்ட்ரோ, இரண்டாம் உலகப்போர் காலத்திலிருந்து எல்லா அமெரிக்க அதிபர்களை கண்டிருக்கின்றார், சோவியத் அதிபர்கள், சீன மாவோ , வியட்நாம் ஹோ என பெரும் சிகரங்கள் காலத்தில் வாழ்ந்தவர்
தென் அமெரிக்காவிற்கும் வட அமெரிக்காவிற்கும் இடையே நடக்கும் மர்ம யுத்ததிற்கு காரணத்தை அன்றே சொன்னவர்.அவர்கள் பிரிவினை கிறிஸ்தவர்கள், நாங்கள் பாரம்பரிய கத்தோலிக்கர்கள்
உலக பொருளாதாரம் பிரிவினை கிறிஸ்தவர்களிடம் இருக்கின்றது, ஐரோப்பிய சக்தி வாய்ந்த போப் பதவி ஐரோப்பியர்களிடம் இருக்கின்றது, அவர்கள் எங்களை சுரண்டுவார்களே தவிர உதவமாட்டார்கள்.
தென் அமெரிக்க நாடுகளில் நல்ல அரசு அமைய அவர்கள் உதவ மாட்டார்கள், நல்ல அரசு அமைந்தால் எங்களை சுரண்ட முடியாது அல்லவா?
சே குவேரா தென் அமெரிக்க நாடுகளில் பெரும் புரட்சியினை செய்துவிடுவான் என்றுதான் கொன்றார்கள், என்னையும் கொல்லபார்த்தார்கள், கியூபாவினை தவிர எந்த தென்னமெரிக்க நாட்டிலாவது புரட்சி வெடித்திருக்கின்றதா? வெடிக்காது
போதை கும்பல்கள், ரவுடிகள் என அந்த தேசங்களை குழப்பம் நிறைந்தவைகளாக அவை ஆக்கி வைத்திருக்கின்றன எம்மக்களை நான் காத்து கொண்டேன் அவ்வளவுதான்
ஒரு நாள் அமெரிக்காவில் ஒரு கறுப்பின அதிபரும் , வாட்டிக்கனில் ஒரு லத்தீன் அமெரிக்க போப்பாண்டவரும் அமரும்பொழுது எங்களை தேடி வருவார்கள்
எங்கள் வலி அவர்களுக்குத்தான் புரியும் என்றார்,
அவர் சொன்னபடி ஒபாமா அமெரிக்க அதிபராகவும், அர்ஜெண்டினாவின் ஒருவர் போப்பாண்டவராகவும் வந்தபின் அமெரிக்க கியூப உறவுகள் துளிர்விட்டன.
இருமாதத்திற்கு முன்புதான் 50 வருடங்களுக்கு பின் கியுப தூதரகமே அமெரிக்காவில் தொடங்கபட்டது, கியூப விமானம் அமெரிக்கா சென்றது.
உலகினை, அது எப்படி மாறினால் எது நடக்கும் என்பதை மிக தீர்கமாக சிந்தித்ததில் காஸ்ட்ரோவினை தவிர யாரும் இருக்கமுடியாது
தனது கணிப்பு மிக சரியாக நிறைவேறியதை அறிந்த காஸ்ட்ரோ அதன் பின்னேதான் தன் முதிர்ந்த வயதில் தன் தம்பியிடம் பொறுப்பினை ஒப்படைத்தார்
இன்று வானுறையும் தெய்வத்தில் ஒருவர் ஆனார்
ஒரு போராளி, தன் மக்களையும் மண்ணையும் மனதார நேசித்து , எல்லா மக்களையும் ஒருங்கிணைத்து போராடினால் எத்தனை பெரிய வல்லரசையும் தூக்கி எறியலாம் என உலகிற்கே சொல்லி காட்டியவர் காஸ்ட்ரோ
அமெரிக்க காலடியில் சுமார் அரைநூற்றாண்டு காலம் செங்கொடியினை பறக்கவிடுவது என்பது சிங்கத்தின் மீது சவாரி செய்ததற்கு சமம்
அவர்களையும் சமாளித்து , தன் மக்களையும் காத்து, நாட்டையும் வளர்பது என்பது சாதாரணம் அல்ல,
காஸ்ட்ரோ அந்த பெரும் சாதனையினை செய்தார். ஒரு போராளி எப்படி இருக்கவேண்டும், எப்படி போரட வேண்டும், எப்படி மக்களை காக்க வேண்டும் என்பதற்கு காஸ்ட்ரொ பெரும் எடுத்துகாட்டு
ஈழபோராட்டத்தில் இந்த காஸ்ட்ரோ வழியில் போராடியவர் பத்மநாபா, அவரின் அணுகுமுறை காஸ்ட்ரோ போலவே இருந்தது, அவர் வழியில் ஈழப்போராட்டம் தொடர்ந்திருக்குமானால் இன்று சே, காஸ்ட்ரோவின் தொடர்ச்சியாக பத்மநாபாவும் வாழ்ந்துகொண்டிருப்பார்
கம்யூனிச பத்மநாபாவினை கொன்றவர்கள் யாரின் முகவர்களாக செயல்பட்டிருப்பார்கள் என்பதை நீங்களே யூகிக்கலாம்
இந்த காஸ்ட்ரோ வழியினை விட்டுவிட்டு , கண்ணில் பட்டவனை எல்லாம் கொன்றொழிக்க போகிறேன் என கிளம்பினால் ஈழம் கிடைக்குமா? அல்லது ஈமசடங்கு செய்ய பிணம் கிடைக்குமா?
அவரை பின்பற்றாததன் விளைவே ஈழ அழிவு. ஒரு தலைவன் தன் பின் திரளும் கூட்டத்தை, மக்கள் திரளை நல் வழியில் பயன்படுத்தி விடுதலை பெற்றுகொடுப்பான், அம்மாதிரி புரட்சிகளே வென்றிருக்கின்றன
நான் சொன்னபடியெல்லாம் சாவுங்கள் என சொன்ன தலைவனின் போராட்டம் உலகில் எங்கும் வெற்றிபெற்றதில்லை, ஈழத்திலும் அதுவே நடந்தது
இப்போதைக்கு உலகில் எந்த புரட்சியும் சாத்தியமில்லை, மாறிவிட்ட உலகிது. வசதியான வாழ்க்கைக்கு பழகிவிட்ட மக்கள் இப்பொழுதெல்லாம் போராட்டம், புரட்சி என்பதை எல்லாம் மறந்துவிட்டு, ஏதும் பேசினால் இருப்பது போகுமோ? பேசாமல் இப்படியே சகித்துகொண்டிருக்கலாம் என சிந்திக்க தொடங்கிவிட்டார்கள்
இந்த புரட்சிகள், விடுதலைகள் எல்லாம் இனி கொஞ்ச காலத்திற்கு வாய்ப்பே இல்லை. வறுமையும், பசியும் இறுக்கும் இடத்தில் மக்கள் ஒன்றாய் திரள்வார்கள், நல்ல தலைவன் கிடைக்கும் பட்சத்தில் அது புரட்சியாய் வெடிக்கும்
வசதியான மக்கள் இருக்கும் இடத்தில் புரட்சி வெடிக்காது, ஈழத்தில் சிங்கள கொடுமையில் 15 லட்சம் தமிழர்கள் வாழ்ந்தாலும் போராட கிளம்பியது எத்தனைபேர்?
பெரும் இயக்கம் என தன்னை சொல்லும் புலிகளிலே 8 ஆயிரம் பேர் கூட தேரவில்லை என்கிறது கணக்கு, அதாவது விடுதலை, புரட்சி என்பதெல்லாம் மக்கள் திரண்டு வருவதை பொறுத்தது,
"நான் போராளியாகிவிட்டேன் நீனும் வரவேண்டும், இல்லாவிட்டால் கையில் இருப்பதை கொடுக்கவேண்டும், இல்லை சாவுதான்
நாடு அடைந்தால் நானே அதிபர், அரசன். என்னை பின்பற்றி மட்டுமே போராட வேண்டும், வேறு யார் தனியாக போராடினாலும் தொலைத்துவிடுவேன்
நான் கேட்பதை கொடுத்து, பிழைத்து வாழுங்கள் காரணம் நான் போராடுவது உங்கள் விடுதலைக்காக, அதாவது உங்களை நான் ஆளபோகும் அந்த விடுதலைக்காக.
இங்கே இரண்டே வகை என்னை பின்பற்றினால் நீ தியாகி, மாவீரன் இல்லாவிட்டால் துரோகி உன்னை கொல்வேன்,
எவனும் பேசவந்தால் அவனை கொல்வேன், எதிரியினை கொல்வேன், என்னுடன் இருப்பவனை கொல்வேன்.." என்பது போராட்டம் ஆகாது,
அது தாவூத் இப்ராகிமின் கடத்தல் கும்பல் போன்றது
ஈழத்தில் அப்படி நடந்து நாசமாய் போயிற்று
அதனால் இனி இந்த உலகில் இப்போதைக்கு போராட்டம், புரட்சி, விடுதலை எல்லாம் சாத்தியமில்லை, சோவியத் யுனியன் இருந்தவரை அப்படி ஒரு பின்புலம் இருந்தவரை புரட்சி வெடித்தது, இனி அப்படி அல்ல
ஆக நம் தலைமுறையில் வாழ்ந்த ஒரு பெரும் விடுதலை வீரன், புரட்சியாளன் காஸ்ட்ரோ மட்டுமே
அவருக்கு வரலாற்றை படித்தவர்கள் எனும் முறையில், வரலாற்றை உருவாக்கியவருக்கு ஆழ்ந்த அஞ்சலி செலுத்துவோம்.
வீர வணக்கம் எனும் அர்த்தமுள்ள வணக்கத்திற்கு பொருத்தமானவர் காஸ்ட்ரோ.
பொதுவாக அம்மானிதனை நினைக்கும் பொழுது கண்களில் சில சொட்டு நீர் வடியும்,
ஈழத்திற்கு அப்படி ஒரு தலைவன் கிடைத்திருந்தால் எப்படி இருக்கும் என நெஞ்சு விம்மும். கியூபாவில் வழிகாட்டிய தலைவன் இருந்தும் ஈழம் ஏன் ரத்தகாடானது என ஆயிரம் சிந்தனை வரும்
இன்று காஸ்ட்ரோ காலமானார் என்றவுடன் கண்களில் பெரும் கண்ணீர் பெருக்த்தான் செய்கின்றது
இனி உலகில் பார்க்கவே முடியாத அபூர்வ மனிதல்லவா, அதனால்தான்..