கண்ணதாசன் பேசுவதே கவிதை போலத்தான் இருக்கும், மிக சில படங்களில் நடித்திருப்பார், பராசக்தி கிளைமேக்ஸ் காட்சி நீதிபதி அவர்தான், ஒரு கோப்பையிலே , பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது, போல சில பாடல்கள், சில படங்களில் நாகேசுடன் சில காட்சிகள் என வந்துபோவார்.
ஆனால் அவர் முழுவதுமாக நடித்தபடம் "கறுப்பு பணம்".
கதையில் அவர் கல்விதந்தை, ஆனால் கறுப்புபணம் வைத்திருப்பவர்களின் பணத்தை திருடி கல்வி கொடுக்கும் நாயகன் அவர், கோர்ட்டில் நிறுத்தி இருப்பார்கள், அவர் பேசும் காட்சி, பராசக்தி சிவாஜி போல இல்லாவிட்டாலும் ஒரு கவிதையாய் அப்படி கொட்டும்
இந்த படத்தைதான் ஜெண்டில்மேன், சிவாஜி என இட்லியும், தோசையாக சுட்டார் ஷங்கர் எனும் சினிமாக்காரர்
நிச்சயம் கண்ணதாசனின் குடும்பத்தார் யாராவது கோர்ட் படி மிதித்திருந்தால் சிக்கல்தான், அப்பட்டமான காப்பி
ஆனால் அவர் குடும்பத்தார் அவரைபோலவே பெருந்தன்மைகாரர்களாக இருந்திருக்கின்றார்கள்
தன் சுயசரிதையில் சொல்வார், சென்னை அய்யனாவரம் கிராமத்தில் எங்களுக்கு சொத்து உண்டு, யார் யாரோ கொண்டு சென்றார்கள்
அப்படியே அவரின் கதைகளையும் யார் யாரோ திருடியிருக்கின்றார்கள், ஒரு நாடகத்தை "கலை" நண்பர் அன்றே திருடினாராம், அதன் பின் ஷங்கரும் திருடியிருக்கின்றார், சரி டைட்டிலில் நன்றி என்றொரு வார்த்தையாவது போட்டாரா? இல்லை
பல கவிஞர்கள் அவரின் பாடல்களை திருடினார்கள், இப்படி
"பாதி மனதில் தெய்வம் இருந்து
பார்த்துகொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து
ஆட்டி வைத்ததடா" : கண்ணதாசன்
"கடவுள் பாதி மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்" : வைரமுத்து
இன்னும் யார் யார் என்னவெல்லாம் திருடினார்களோ?
அப்படியே அவரின் மதுபாட்டில்களை அன்றே திருடி சென்றிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்
No comments:
Post a Comment