Sunday, June 5, 2016

குத்துச்சண்டை வீரர் முகமது அலி




அமெரிக்க இனவெறியினை சாடியதாகட்டும், குத்துசண்டைக்கு இலக்கணம் எழுதியதாகட்டும், தன்னை தோற்கடித்தவர்களை மறுமுறை ஒரே குத்தில் வாய்ப்புகொடுக்காமல் வீழ்த்தியதாகட்டும், அவருக்கு நிகர் அவரே தான்.

இனவெறி கொண்டிருக்கும் அமெரிக்க‌ கிறிஸ்துவத்தை விட, சமத்துவம் பேணும் இஸ்லாம் சிறந்தது என சொல்லி மதம் மாறி அதன் பின்னும் ஜெயித்து காட்டியதாக இருக்கட்டும்,

தன் சொந்தநாட்டு ராணுவம் வியட்நாமில் நடத்திகொண்டிருந்த யுத்தத்தை சாடிய அந்த தைரியம்தான், அந்த மனிதாபிமானம்தான் முகமது அலியின் இன்னொரு முகம்.


Stanley Rajan's photo.களத்தில் நேருக்கு நேராக எதிரிகளை சந்தித்தவர், இறுதிசுற்று செங்கிஸ்கான் பாணி எல்லாம் அவருக்கு பிடிக்காது, அதனை கண்டித்த வீரர் அவர். இறுதிவரை எத்தனை குத்துக்களை வாங்கினாலும் இறுதிவரை போராடுவது அவரின் குணம்.

அப்படித்தான் இனவாத அமெரிக்க அரசுடன் போராடியே குத்துசண்டையினை தொடர்ந்தார், அவர் வெள்ளையனாக மட்டும் இருந்திருந்தால் இந்நேரம் வெள்ளையர் அவரை கொண்டாடியிருக்கும் விதமே தனி, ஆயினும் திறமையினை வெல்ல வெள்ளையனால் முடியவில்லை

அலியில் தலையில் சண்டையில் வாங்கிய அந்த குத்துக்கள்தான் அவரை பக்கவாத நோயில் தள்ளியது.

இனவெறி அமெரிக்க அரசாங்கமும் பின்னாளில் அவருக்கு செய்த துரோகத்தை நினைத்து, ஒலிம்பிக் ஜோதியேற்றும் மரியாதையினை அவருக்கு கொடுத்தது, பக்கவாத நோயில் நடுங்கும் கரங்களோடு அவர் ஏற்றிய ஜோதி, இனவாத அமெரிக்காவிற்கு எதிராக அவருக்கு கிடைத்த வெற்றி.

வெகு சில போட்டிகளில் தோற்றுவிட்டு, மறுபடி வந்து ஒரே குத்தில் எதிராளியினை வீழ்த்துவிட்டு இடது தோளினை தட்டி ஆக்ரோஷமாக சொல்வார் அலி " I am the greatest ", அவர் பாணியில் இன்று உலகமே கண்ணீரோடு சொல்லி கொண்டிருக்கின்றது "He was the greatest"

நிச்சயமாக குத்துசண்டையோடும், அமெரிக்க இனவெறியோடும் போராடி வென்ற‌ அவரை நிச்சயம் இப்படித்தான் சொல்லலாம்,

சென்னையில் ஒரு காட்சிபோட்டியில் முகமது அலி கலந்து கொண்டார், அப்போது எம்ஜிஆர் முதல்வர், சென்னையில் அலி மோதிய நிகழ்ச்சி மிக எதிர்ப்பார்ப்பானது, ஆயினும் எம்ஜிஆர் ரசிகர்கள் சொல்லிகொண்டனர்

"எவனோ கருப்பனாம் அமெரிக்காலருந்து வந்துக்கீனாம், நம்ம வாத்தியார் ஒரு குத்துவுட்டா பீச் பக்கமே போய் வுழுவாம்பா, ஆனா வாத்தியார் இப்போ முதலமைச்சரு ஆயிட்டார்ப்பா, அதாம்பா சண்டைக்கெல்லாம் போ மாட்டாரு,

இல்லாண்னு வச்சிக்க இந்த அலி எல்லாம் கீமாதான், வாத்தியார்ப்பா ஆக்காங்"













No comments:

Post a Comment