Sunday, September 4, 2016

ராஜபக்சே மலேசியப் பயணம்...

ராஜபக்சே மலேசியா வந்ததும், அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது பெரும் செய்திகளாக்கபட்டுவிட்டன, அக்கோஷ்டிக்கு மகிழ்ச்சி தாளவில்லை, என்னை அழைத்தார் ஒரு நண்பர்


பார்த்தாயா எப்படி ராஜபக்சேவினை அலற வைக்கின்றோம், விட மாட்டோம், அவன் எங்கு சென்றாலும் விட மாட்டோம்


அவர் ஆப்ரிக்கா சென்றார், சீனா சென்றார், அப்படித்தான் இங்கும் வந்தார், அவ்வளவுதானே


உனக்கு தெரியாது, அவனை தமிழர்கள் வாழும் நாட்டில் எல்லாம் கால்பதிக்கவிட கூடாது, அவன் சாதாரணமானவன் அல்ல, தமிழர்களை கொல்வதை சொல்லிகொடுக்கவே எல்லா நாட்டிற்கும் போகிறான், ஒரு தமிழனும் உலகில் உயிரோடு இருக்க கூடாது என்பது அவன் எண்ணம்.


ஓஓ, தெரியவில்லை, ஆனால் 2009 மே மாதம் பிறகும் இலங்கையில் தமிழர்கள் வாழ்கின்றார்கள், எதிர்கட்சி தலைவரே தமிழர்தான், அங்கெல்லாம் ராஜபக்சேக்கும் தமிழர்பகுதியில் வாக்கு வங்கி இருக்கின்றது தெரியுமல்லவா?


அப்படி அல்ல அவன் ஒரு கொலைகாரன், லட்சகணக்கான தமிழர்களை கொன்ற கொலைக்காரன், தமிழனாக கூட பார்க்காதே ஒரு மனித குல எதிரியாக பார். அவனை விடலாமா? அதற்குதான் இன உணர்வு மிக்க, மானிட நேயம் உள்ள மக்கள் கொந்தளிக்கின்றார்கள், அவர்கள் மனித தன்மை உள்ளவர்கள்.


ஓ அப்ப்படியா


ஆமாம்


அதாவது கொலைகுற்றச்சாட்டு உள்ளவன் வரகூடாது


ஆம், வந்தால் யாராக இருந்தாலும் எதிர்ப்பார்கள், எதிர்க்க வைப்போம்


சரி கொஞ்ச நாளைக்கு முன்பு மோடி வந்தாரே, குஜராத்தில் அவர் நிகழ்த்தியதாக கூறப்படும் பெரும் மானிட அவலம் உண்டே, கொல்லபட்டோர் இஸ்லாமியர், அவர் வரும்பொழுது ஒரு சர்ச்சை இல்லையே


அது... ஹலோ..ஹலோ கேட்குதா


கேட்கிறது, மோடிக்கு ஒரு சர்ச்சையில்லை, ராஜபக்சே வந்தால் மட்டும் சத்தமா? இவ்வளவிற்கும் பெரும்பான்மை இஸ்லாமிய மக்களை கொண்ட நாடு இது, அவர்கள் ஏதாவது கொடி பிடித்தார்களா? பிடித்தால் நாடு தாங்குமா? மோடி ஏதும் ஒரு நாட்டுக்கு செல்ல முடியுமா? தமிழனுக்கு ஒரு நீதி? இஸ்லாமியனுக்கு ஒரு நீதியா?


ஹலோ..ஹலோ... லைன் சரியாக கேட்கவில்லை


ராஜபக்சே உலகெல்லாம் போய் தமிழர்களை கொல்லுங்கள் என்பாரானால்..மோடி உலகெல்லாம் போய்......


ஹலோ...சுத்தமாக ஒன்றும் கேட்கவில்லை, ஆனால் நான் உணர்வாளன் உணர்ச்சி உள்ள தமிழன், தமிழர்கள் இருக்கும் இடமெல்லாம் தமிழர்களின் எதிரிகளுக்கு குரல் கொடுப்போம்


அவ்வளவு உணர்வாளரா நீங்கள், நல்லது ஆனால் புலி என பிடிபட்டோர், அல்லது புலிகளுக்கு பணம் பிரித்தோரை உடனே பிடித்து இலங்கைக்கு பார்சல் செய்தது இதே மலேசியாதானே?, , அப்படி புலிகள் நாடுகடத்தும்போது என்ன செய்தீர்கள்? ஆனால் புலிகளுடன் யுத்தம் நடத்தியவர் ராஜபக்சே, அவர் வந்திருக்கின்றார், விசா பெற்று வந்திருக்கின்றார் குதிக்கின்றீர்கள்.


ஹலோ..ஹலோ....கின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்


அதன் பிறகு அவரை அழைத்தாலும் "போன் சுவிட்ச் ஆப் செய்யபட்டிருக்கிறது" என ஒரு தமிழ்பெண் சொல்லிகொண்டே இருக்கின்றாள். அந்த தமிழ் சுத்தமான தமிழ் அல்ல.


வேறு இனத்தவர் பேசும் தமிழ் போலவே இருக்கின்றது.

No comments:

Post a Comment