ஒரு வழியாக பழைய ரீமேக் படங்கள் சரிவராது என தமிழ் திரையுலகம் ஒதுங்கி கொண்டது தெரிகின்றது, முதலில் கதை திருடினார்கள், பின் அப்படியே எடுத்துபார்த்தார்கள் எல்லாம் தோல்வி.
தில்லுமுல்லு, இன்றுபோய் நாளை வா என இதிலே சறுக்கிவிட்டாகள், இவர்களை 1960 போன்ற காவியங்களை செய்ய சொன்னால் முடியுமா? ஒரு காலும் முடியாது.
பணத்தில் தமிழ்சினிமா வளர்ந்திருக்கலாமே ஒழிய நல்ல நடிகர்களை உருவாக்க அது தவறிவிட்டது. கமல் போன்றவர்களை தவிர..
இதோ ரத்த கண்ணீர் பார்த்துகொண்டிருக்கின்றேன், இதனை ரீமேக் செய்ய இன்றைய நிலையில் எந்த நடிகன் தயார்? மன்மத லீலை காலத்து கமல் தயார் எனினும் அதனை நெருங்க முடியுமா? பிரகாஷ் ராஜ் ஒரே தேர்வு எனினும் எம்.ஆர் ராதாவினை நெருங்க முடியாது
பாலும் பழமும், மனோகரா என சில வரிசை படங்களை பார்க்கின்றேன், ரீமேக் செய்யலாம். சரோஜா தேவியின் இடத்தினை அனுஷ்கா அழகாக நிரப்புவார், சவுகார் ஜாணகி வேடத்தினை நிரப்ப இன்னொரு நடிகை தேட்வேண்டி இருக்கும், அவர் அளவிற்க்கு இல்லை என்றாலும் ரித்விகா போன்றவர்கள் நடிப்பார்கள்.
சந்தேகமில்லை. கண்ணாப்பாள் வேடத்திற்கு ராதிகாவினை அழைத்து "ஆக்ஷ்ன்" என சொன்னால் முடிந்தது விஷயம்.
ஆனால் சிவாஜிக்கு மாற்று யார்? முடியுமா?
கலைஞர் அப்படியே இருக்கின்றார், காலம் தந்த வரம். அவரின் தமிழ் அப்படியே இருக்கின்றது. ஆனால் நடிக்க? ஒருவருமில்லை
நல்ல நடிகர்களை உருவாக்க தவறிவிட்டது திரையுலகம்.
கவுரவம் படத்தின் கோர்ட் சீனை பார்த்துவிட்டு மனிதன் படத்தில் உதயநிதியினை பார்க்கும்பொழுது எப்படி இருக்கின்றது. ஒப்பிட்டு பாராய் மனமே என சொல்லிகொள்ளவேண்டி இருக்கின்றது.

கமலும், நாசரும், பிரகாஷ்ராஜும் நல்ல நடிகர்கள். ரஜினி ஒரு அபாரமான வில்லன் நடிகர். ஆனால் திரையுலகம் அவரை கெடுத்துவிட்டது, நல்ல சம்பளம் என்றதால் அவரும் அதனை தாண்டவில்லை.
தங்கபதக்கத்தில் அரசியலை அற்புதமான கிண்டலால் சொன்னவர் சோ ராமசாமி. கலைஞரை அதனை விட யாரும் கலாய்த்துவிட முடியாது. மோதிரத்தை உருட்டும் ஒரு சீனிலே சோ தனித்து நின்றார். அந்நாளைய கலைஞரின் மேனரிசம் அது.
மணிவண்ணன், சத்யராஜ் போன்றோர் வந்தாலும் சோ வின் தைரியம் அவர்களுக்கு இல்லை. என்ன நடந்துவிடும்? இதோ கலைஞரும் சோ ராமசாமியும் அடிக்கடி சந்தித்து கொள்கின்றார்கள்.
நடிகைகளில் சாவித்ரி, பத்மினி, மனோரமா போன்றோர் இடங்களும் அப்படியே இருக்கின்றன. ஆனால் இக்கால ராதிகா, அனுஷ்கா அதனை நிரப்பலாம். ஆனால் மனோரமாவின் இடம் வெற்றிடமே.
சில நடிகர்களின் இடங்கள் நிரப்பாமலே கிடக்கின்றன.
தங்கவேலு, நாகேஷ் கொஞ்சம் சுருளிராஜன் கலந்த கலவைதான் வடிவேலு அற்புதமான கலைஞன். ஆனால் அரசியல் சுழலில் சிக்கி காணாமல் போய்விட்டான், யாரேனும் மீட்டுவந்தால் அது பெரும் கலை தொண்டு.
ராமசந்திரன் எனும் நடிகன் படங்களை பார்க்கின்றேன், அசால்ட்டாக விஜயோ, அஜித்தோ வாய்ப்பு கிடைத்தால் பவர்ஸ்டாரோ அழகாக அந்த ரீமேக் படங்களில் அசத்திவிடுவார்கள். அவ்வளவு ஏன் வடிவேலு கூட இம்சை அரசனில் போராளி வீரனாக ராமச்சந்திரனை விட அழகாக நடித்திருந்தார்.
அதனால் தைரியமாக சொல்லலாம், சினிமா எனும் மாயையினை காட்டி தமிழக மக்களை ஏமாற்றி கட்டிபோட்டதில் ராமசந்திரன் வென்றிருக்கலாம்.
ஆனால் இன்றைக்கும் பழைய தன் பழைய பாத்திரங்களை ரீமேக் செய்து நடித்துவிட முடியுமா என சவால் விடுவதில் சிவாஜியும், எம்.ஆர் ராதாவும் தனித்து நிற்கின்றார்கள்.
எவரின் இடத்தை ஒருவன் எளிதாக நிரப்பிவிடலாமோ அவன் விஷயமே அல்ல.
யாருடைய இடத்தை நிரப்ப மகா சிரமமோ அவனே வெற்றிபெற்றவன்.
அப்படி நடிப்புலகில் சிவாஜியும், எம்.ஆர் ராதாவும் பெரும் வெற்றி பெற்று வரலாற்றில் நிலைத்துவிட்டவர்கள். ராமச்சந்திரனுக்கு அதில் படு தோல்வியே.
வரலாறு அதனைத்தான் சொல்கின்றது.

எல்லாம் நீரும் நெருப்பும் என்ற முழுநீள நகைச்சுவை சித்திரத்தை கண்டதால் வந்த சிந்தனை, ஒரு ராமச்சந்திரனையே பார்க்கமுடியவில்லை இதில் இரண்டு வேறு
கொடுமை என்னவென்றால் அது அக்கால வெற்றி படமாம், அப்படி ஒரு ரசனை மிக்க மாநிலத்தில் என்ன மாற்றம் விரைவில் வந்துவிடமுடியும்?
அவன் மெதுவாத்தான் வருவான், மெதுவாகத்தான் இதனை விட்டு வெளி வருவான்...
கொசுறு
பாகிஸ்தானைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் போயிங்-777 விமானத்தை 5 மணி நேரம் ஓட்டிய முதல் சகோதரிகள் என்ற பெருமையை பெற்றுள்ளனர்.
இது என்ன சாதனை? இங்கே இரு சகோதரிகள் 16 வருடமாக ஒரு மாநில அரசினையே ஓட்டிகொண்டிருக்கின்றார்கள், இவ்வளவிற்கும் உடன் பிறவா சகோதரிகள், அது அல்லவா சாதனை?
No comments:
Post a Comment