Sunday, September 11, 2016

செப்டம்பர் 11, 2001 தாக்குதல்....



Image may contain: cloud, sky and outdoor


2001 செப்டம்பர் 11 வழக்கம்போலத்தான் அமெரிக்காவில் விடிந்தது, அந்த 19 பேரும் காலை எழுந்து குளித்து பிரார்த்தித்து,கொஞ்சம் கூட பதற்றமின்றி இயல்பாய் நடந்தார்கள், கோவிலுக்கு நேர்ந்த ஆடு போல.


தமிழக பஸ்டாண்ட் மினிபஸ் போல அடிக்கடி பறக்கும் அமெரிக்க விமானங்களில் ஏறிகொண்டார்கள், காலை 8.30 மணிக்கு 4 விமானங்களில் குளறுபடி ஆரம்பித்தது, விமான நிலைய கட்டுபாட்டு அறையுடன் தகவல் அறுந்தது.


திடீரென் 9 மணிவாக்கில் உலக வர்த்தக மைய கட்டத்தின் உச்சியில் தீ எழும்பியது ஏதோ விபத்தாக கருதி செய்தியாளர்களும் குவிந்தனர், மீட்பு மற்றும் தீயணைக்கும் படையும் விரைந்தது, (அந்நாளில் முகநூல் மற்றும் வாட்ஸஅப் எல்லாம் இல்லை, இருந்தால் இன்னமும் பலி எண்ணிக்கை கூடியிருக்கும்).


அப்பொழுதுதான் கண்டார்கள், ஒரு விமானம் மற்றொரு கட்டடத்தில் மோதியது, ஒரு கணம் திகைத்துதான் போனார்கள், புகை எழும்ப எழும்ப திகில் பரவிற்று, இதற்கிடையில் பெண்டகன் மீது ஒரு விமானம் மோதிற்று, உலக மாபெரும் ராணுவத்தின் தலமையகம், தாங்குமா?


மொத்த தேசமும் முதல்முறையாக கலங்கிற்று.


இன்னொரு விமானம் காணவில்லை, பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஏதோ புரிந்தது, டெக்ஸாசில் இருந்த அதிபரை அவரசமாக அலாக்காக பிரத்யோக விமானத்தில் ஏற்றி 40,000 அடி உயரத்தில் நிறுத்தினார்கள்.


அதை தவிர எல்லா விமானமும் தரையிரக்கபட்டது, நியூ யார்க் முழுக்க புகை. 3000 பேர் உயிரிழந்தனர், அவை உயிர்கள் என்று சொல்வதை விட பொருளாதார மூளைகள், உலகின் பல பாகத்திலிருந்தும் அமெரிக்கா "வாங்கியிருந்த" சொத்துக்கள்.


4வது விமானம் எங்கும் தாக்காமல் தரையில் விழுந்தது, அதன் இலக்கு வெள்ளை மாளிகை அல்லது சி.ஐ.ஏ அலுவலகமாக இருக்கலாம். கொஞ்சம் அமைதி திரும்பியது.


மற்றபடி மகா பீதி, பெரும் பயம்.


உலகப்போர் முதல் உலகமூலைபோர் வரை நடத்திய நாடுதான் அமெரிக்கா, ஆபத்தை எதிர்நோக்கிய நாடுதான், அது ஏவுகனையோ அல்லது விமானதாக்குதலோ அல்லது நீர்மூழ்கி கப்பலோ என்றுதான் பாதுகாப்பினை செய்திருந்தார்கள்.ஆனால் இது யாரும் எதிர்பார்க்காத மரண அடி.


முப்படைகளும் முழு வீச்சில் தயாராயின, 40க்கும் மேலான செயற்கை கோள் அமெரிக்காவை கண்காணித்தது, புஷ் பத்திரமாக தரையிரக்கபட்டார், ஆனால் இந்த கொடூரத்தினை செய்தது யார் என்பது மட்டும் குழப்பம்.


காரணம் உலகிலே அமெரிக்காவிற்கு எதிரிகள் அதிகம், அணுகுண்டு தாக்குதலுக்கு ஜப்பானின் பதிலடி, வடகொரியா திட்டம், இல்லை இது ஈரானின் கைங்கரியம் என எல்லா எதிரிகளையும் போட்டு 2 நாளைக்கு குழம்பினார்கள்.


ஆனால் எப்பொழுது ஒருவருக்கொருவர் முறைக்கும் சி.ஐ.ஏ மற்றும் எப்.பி.ஐ ஆகிய இரு அமைப்புக்களும் ஒன்றாக களத்தில் குதித்தன, சத்தியமிட்டு சொன்னது இது அல்கய்தாவின் தாக்குதல்.


ஆனால் அவர்கள் மனதில் இருந்த பெயர் "இமாத் முக்கினியே". அந்த அரேபியர் விமான கடத்தலில் பிரசித்தி பெற்றவர், அவர் செய்திருக்கலாம் என ஒரு அனுமானம் இருந்தது.


ஆனால் ஒரு விஷயம் பாராட்டதக்கது, பின்பற்றதக்கதும் கூட அவ்வளவு பெரிய இழப்பிலும் அமெரிக்கர்கள் அமைதிகாத்தனர், ஒருவர் கூட ஜார்ஜ்புஷ்ஷை "பதவி விலகு" என்றோ, "ஓடிப்போ" என்றோ முணகல் கூட இல்லை.


எதிர்கட்சி கிளிண்டன் ஓடிவந்து சொன்னார் "பின்லேடனை கொல்ல தவறியது நான்தான், மக்களே மன்னித்துகொள்ளுங்கள்".


ஒரு பத்திரிகை கூட , ஒரு மீடியா கூட தவறாக ஒருவார்த்தை எழுதவில்லை, தேச ஒற்றுமை என்றால் என்ன என்பதை அட்டகாசமாக உலகிற்கு காட்டினார்கள்.


இம்மாதிரி காலங்களில் வதந்தி இறக்கை கட்டி பறக்கும், பத்திரிகையில் மாய்ந்து மாய்ந்து எழுதுவார்கள். ராஜிவ் கொலையில் கூட தமிழகத்தில் எழுதினார்கள். பூகூடையில் குண்டு இருந்தது, கூடைக்குள் எட்டிபார்த்தது யார்? சொல்லமாட்டார்கள்.


ராஜிவின் பின்புறம் இருந்து முன்புறம் குண்டு வீசினார்கள் என்பதும் செய்தி, அந்த காட்சியை கண்டது யார்? அதெல்லாம் தேவையே இல்லை. ராஜிவ் வரும் பாதையில் குண்டு வைத்தார்கள், கடப்பாரை கொடுத்து குழிதோண்டியவர் யார்? சொல்லமாட்டார்கள், அவர்களாக எழுதுவார்கள், அது உண்மையா? என்றெல்லாம் கவலை இல்லை.


ஆனால் அமெரிக்க ஊடகங்கள் பொறுப்புடன் நடந்துகொண்டது, அல்கய்தாவின் பெயர் வந்த பொழுதும் ஒரு கலவரம் கூட நடக்கவில்லை,நிறைய இஸ்லாமியர் வாழும் நாடுதான், ஆனால் அமைதி, அமைதி, சர்வ அமைதி.


ஆனால் அடுத்து செய்யவேண்டிய அவசரவேலைகள்.


இங்கோ இந்திய பத்திரிககைகள் போட்டு தாக்கின, அமெரிக்காவே எரிகின்றது என்றது ஒரு பத்திரிகை, எங்கிருந்து எங்கு வரை எரிகிறது என்று மட்டும் சொல்லவில்லை.


இனி அமெரிக்கா முடிந்தது என்றது இன்னொன்று இரு கட்டத்தில்தான் மொத்த அமெரிக்காவும் இருந்ததாக அது நினைத்துகொண்டது.


இன்னொன்று இங்கிருந்தே புலனாய்வு செய்து சொன்னது, விமானத்தை கடத்தி 2 டன் வெடிமருந்தை ஏற்றி மறுபடியும் பறந்து மோதினர், இவ்வாறாக பல பல ஹேஸ்யங்கள்.


யானைக்கும் அடிசறுக்கும், கழுகுக்கும் குறி தவறும், நிச்சயமாக பெருத்த அடிதான், ஆனால் கொஞ்சம் கூட அசரவில்லை அமெரிக்கா, பொதுவாக அமெரிக்க அதிபர் உலகவிவகாரங்களைத்தானே கவனிப்பார், அவருக்காக பெரும் அறிக்கை தயாரிக்கபட்டது, உள்துறை உளவுதுறை எல்லா துறைகளும் சேர்ந்து தயாரித்த ரிப்போர்ட் அது, நன்கு ஆலோசித்து கவனமாக பேசினார் புஷ்.


"தீவிரவாதத்திற்கெதிரான பெரும் போர் தொடங்கிவிட்டது, இந்த கொடுமைக்கு காரணமானவர்களுக்கு அமெரிக்க நீதி என்றால் என்ன என்பதை காட்டுவோம்".


செய்தது அல்கய்தாவின் வேலை என நிரூபிக்கபட்டது, முதலில் மறுத்த பின்லேடன் அதன்பின் மவுனமானர், அவர் வேறுமாதிரியான போராளி.


சவுதி தூய்மையான இஸ்லாமிய மண், இஸ்லாம் வாழும் அரேபிய தேசமெல்லாம் அமைதி வளமாக இஸ்லாமிய அடியொற்றி நடக்கவேண்டும் என சிந்தை இருந்தது, உச்சமாக உலக இஸ்லாமியரை எல்லாம் தன் சொந்த சகோதரனாக பாவிக்கும் மனம் அவருக்கு இருந்தது.


அதனால்தான் ஆப்கனில் இஸ்லாமியரே சோவியத்திற்கு எதிராக ஒன்று கூடுங்கள் என அமெரிக்கா அழைத்தபோது ஓடினார், போரிட்டார். சோவியத் எனும் யானையே பின்லேடனால் திரும்பி ஆடியது. வரலாறு.


அதோடு பின்லேடனை அமைதியாக சொன்னது அமெரிக்கா, அவரோ பாலஸ்தீன விடுதலை, இன்னும் பல இஸ்லாமிய தேசவிடுதலைகளில் அக்கறை காட்ட அமெரிக்கா பொங்கியது.


அதன் பின் ஆடினார்கள், பல வகையான ஆட்டம். ஆனால் பின்லேடனுக்கு பெரும் ஆதரவு இருந்தும், அவர் பெரும் தலைவராக உருவாகாமல் பார்த்துகொண்டன உலக நாடுகள், வலை வீசி தேடின, அவரோ முடிந்தமட்டும் போராடிகொண்டிருந்தார்.


நன்றாக தெரியும் பின்லேடனுக்கு, அமெரிக்காவினை ஒரு முறைதான் அடிக்க முடியும், கலைஞர் இந்துமதத்தினை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அடிப்பது போலவோ, அம்மா பக்தர்கள் வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் கவிதை புனைவது போல சாத்தியமில்லை.


ஒரே அடிதன் முடியும், அடித்தார் மரண அடிதான். குண்டு வீச்சி கட்டட இடிப்பு என அனுதினமும் அரேபியால் அமெரிக்கா செய்துகொண்டிருந்த அழிச்சாட்டியத்தை அமெரிக்க மண்ணிலே திருப்பி கொடுத்தார்.


பெரும் கரும்புள்ளிதான் அமெரிக்காவிற்கு, பெரும் வல்லரசே அஞ்சிய அமெரிக்காவினை சாதாரணமாக அலறவிட்டார் பின்லேட்ன், பயிற்சி கொடுத்தது அதே அமெரிக்கா அல்லவா? அப்படித்தான்.


ஆனால் அமெரிக்கா போர் முரசு கொட்டும்,அமெரிக்கா இப்படி கிளம்பும் என்று பின்லேடனுக்கு தெரியாதா? நிச்சயமாக தெரியும், போர் என்பது பெரும் செலவு பிடிப்பது.


போர் என்ற சகதிக்குள் அமெரிக்க யானையை இழுத்து விடவேண்டும், அதிலே சிக்கி சிக்கி அந்த யானை மடங்குமட்டும் அடிக்கவேண்டும், ஒரு கட்டத்தில் அரபு அரசியலை விட்டே அமெரிக்கா ஓடவேண்டும், அமெரிக்காவே ஓடிவிட்டால் வேறு யார் எதிரி?


ஆப்கன் காட்டுக்குள் தாடிவைத்த கூட்டம் அப்படி யோசிக்கும் பொழுது அமெரிக்க மூளை வேறு ஆட்டத்திற்கு தயாரானாது, ஆப்கானோடு மட்டும் நாம் நிற்கபோவதில்லை, பின்லேடனை கொன்றால் ஆயிரம் பின்லேடன்கள் உருவாவார்கள்.


அல்கய்தாவின் நிதிமூலத்தை அடிக்கவேண்டும், இன்னொருபக்கம் இதனை வைத்தே அரேபிய எண்ணெய் வளத்தினை சுரண்ட வேண்டும், ஆயிரக் கோபுரம் கட்டலாம், செத்து போல பிசினஸ் மூளைகளை உலகில் எங்கிருந்தும் கொண்டுவரலாம், விசா வினை அள்ளி எரிந்தால் ஆயிரம் காக்கைகள், கழுகுகள் அல்லது புறாக்கள்.


இஸ்ரேலுக்கோ வருடமுழுக்க விடுமுறை அளித்து கொண்டாடும் அளவிற்கு சந்தோஷம்.


முதலில் ஆப்கானில் தொடங்கிய போரில் அல்கய்தாவை கட்டுபடுத்தினார்கள்,இல்லை என்றால் பின்லேடன் விஷ்கிருமி குண்டு தயாரிப்பில் வெற்றிபெற்றிருப்பார், ஆப்கனை விட்டு வெளியேறிய பின்லேடனை உலகம் வலைவீசி தேடியது.


தனது வீட்டில் வைத்துகொண்டே பாகிஸ்தானும் தேடியது, பாகிஸ்தான் வேறு எங்கு தேடும்? இந்திய காஷ்மீரில் இருப்பதாக கதைவிட்டு இந்திய அமைதியை வழக்கம் போல கெடுக்க நினைத்தது.


ஆனால் அமெரிக்காவிற்கோ செலவு அதிகமாகிறது, அமெரிக்க வருமானத்தை கொட்டி நாசமாய் போகவா?, பின்னர் பின்லேடன் சிரிக்கமாட்டாரா? , சதாமை அடித்தார்கள், பாக்ததாத் போகவேண்டிய அமெரிக்க படை முதன் முதலில் ருமைலா எண்ணெய் வயலுக்குத்தான் சென்றது.


குற்றமிழைத்தது பின்லேடன், ஆனால் கழுத்து கயிறு சதாம் உசேனுக்கு எல்லாம் எண்ணெய் வினை.


ஒரு கட்டத்தில் சதாமும் விரட்டபட்டார், ஆனால் பின்லேடன் ஆடிகொண்டுதான் இருந்தார், மற்ற இயக்கங்களுக்கும் அல்கய்தாவிற்கும் பெரிய வேறுபாடு உண்டு, அதன் பலம் அதுதான், புலிகள் இலங்கையில், அராபத் பாலஸ்தீனத்தில் மட்டும்தான்.


ஆனால் அல்கய்தா உலகெங்கும் பரவிய இயக்கம், எங்கும் எப்படியும் தாக்கும் வல்லமை கொண்டது.
லண்டன்,ஸ்பெயின் ரயில் நிலையத்தை தாக்கினார்கள், அமைதியான கிழக்காசியாவின் பாலிதீவில் தாக்கினார்கள், ஆனால் அமெரிக்காவோ ஈராக்கை துவைத்து காயபோட்டது, பின்லேடனை விட அவர்கள் இன்னொருவரை தேடினார்கள் அது "இமாத் முக்னியே",


அமெரிக்க கூற்றுபடி அவர் பின்லேடனை விட ஆபத்தானவர், கொடூரமானவர் செப்டம்பர் தாக்குதலுக்கு அவரே மூலம், முந்திகொண்டது மொசாத் ஒரு கார்குண்டுவெடிப்பில் முக்னியே முக்தி அடைந்தார்.


ஒரு வழியாக பாகிஸ்தானில் பின்லேடனை கண்டுபிடித்து இரவோடு இரவாக பாகிஸ்தானுக்கு தெரியாமல் தூக்கினாலும் ஐ.எஸ்.ஐ க்கு தெரியாமல் சாத்தியமில்லை.


பின்லேடன் இல்லாத அல்கய்தா இயங்கத்தான் செய்கிறது, ஆனால் பழைய தெம்பு இல்லை, கடந்த 10 வருடமாக பெருந்தாக்குதல் செய்யவில்லை.


ரஷ்யாவை அடக்க பின்லேடனை வளர்த்து, மாபெரும் பொருட்செலவில் அவரை அழித்து, அதே போல பெரிய கோபுரங்களை அமெரிக்காவில் எழுப்பிவிட்டார்கள், எல்லாம் சுபம்.


ஆனால் அதன் பின் அவர்கள் எப்படி சும்மா இருப்பார்கள்? ஏதாவது ஒருவன் அரேபியாவில் அட்டகாசம் செய்யவேண்டும் அல்லது செய்கிறான் என உருவாக்கபடவேண்டும், இல்லாவிட்டால் அமெரிக்க ராணுவம் அங்கே இருக்க முடியாது.


முதலில் கர்ணர் நாசர், பின் லெபனான், பின் கோமேனி, பின் பின்லேடன் என ஏதனையோ சொல்லி அரேபியாவினை விட்டு கிளம்பமாட்டோம் என அடம்பிடிப்பவர்கள் எதிரி இல்லாவிடால் என்ன செய்வார்கள்.


திடீரென முளைத்தது ஐ.எஸ். வெறும் கையால் பிடித்துவிடும் கூட்டத்தை பெரும் பயங்கரமான இயக்கமாக காட்டி, அமெரிக்கா இல்லாவிட்டால் அரேபியாவில் அமைதி இல்லை என ஒரு பிம்பத்தை உருவாக்கி இன்றும் அதே அரேபியாவில் அடிப்பொடிகளோடு அமர்ந்திருக்கின்றது அமெரிக்கா.


ரஷ்யா இல்லை என்றால் சிரியாவினையும், ஈரானையும் நசுக்கி இருப்பார்கள்.


கவனியுங்கள் 5 முறை அணுகுண்டு சோதனை செய்த வடகொரியாவிற்கு கண்டனமும் தடையுமாம், ஆனால் பிஸ்கோத்து இயக்கமான ஐ.எஸ் இயக்கத்திற்கு எதிராக உலக நாடுகள் படையெடுப்பாம்.


இதுதான் சர்வதேச அரசியல்.


எல்லா பெரியநாடுகளும் தீவிரவாதத்தினை வளர்த்து கையை சுட்டுகொண்டவைகள் தான், பிந்திரன் வாலே முதல் ஈழபோராளிகள் வரை அப்படித்தான் உருவாக்கபட்டார்கள், அவர்கள் அடியாளாக இருக்கும்வரை பிரச்சினை இல்லை, நாங்களும் ஆளப்போகிறோம் என்பதில்தான் பிரச்சினை தொடங்கி பற்றி எரியும்.


ஐஎஸ்ஐஎஸ் சின் மூலம் யார்?, யாருமல்ல சாட்சாத அமெரிக்காவே தான், அவர்களும் அந்நாளைய ஈழ இயக்கங்கள் இந்தியா சொல்பேச்சு கேட்டது போல கவனமாக கேட்டுகொண்டிருக்கின்றார்கள்.


2001 செப்டம்பர் 11 சம்பவம் நடந்து இன்றோடு 15 வருடங்கள் முடிவு பெற்றுவிட்டன‌.


என்ன நடந்தது?


உலகில் இனி சுயேச்சையான தீவிரவாத இயக்கம் இருக்க கூடாதென முடிவெடித்த அமெரிக்கா உலகில் அதனை செய்தது, பின்லேடன் ஒழிக்கபட்டபின் அல்கைதா பழைய மாதிரி அல்ல, அல்மான் ஜவஹரி எல்லாம் ஜாங்கிரிக்கும் லாயக்கில்லை, எல்லோரும் பின்லேடன் ஆக முடியாது.


அராபத் அதிரடியாக வீட்டுகாவலிலே நோயுற்று உயிரழிந்தார், பாலஸ்தீன் எனும் நாடு இன்றும் உதிக்காமலே கிடக்கின்றது.


அமெரிக்க மிரட்டலாளரான கடாபி ஒழிக்கபட்டார், அதன் வளம் சுரண்டபட்டது.


உலக அரசியல் புரியாமல் எல்லாம் தன்னால்தான் என்ற குருட்டு கனவில் வாழ்ந்த பிரபாகரனுக்கும் நார்வே மூலம் எச்சரிக்கை விடபட்டது, அவரோ தான் வீரதமிழன் என என்னவெல்லாமோ சொல்லி போராட்டம் தொடர்ந்தார்.


பின் அவரின் கதையும் முடிக்கபட்டது.


எல்லா அதி தீவிரமான தீவிரவாதிகளும் முடிக்கபட்டனர். ஆப்கனில் அமெரிக்க தளம் நங்கூரமானது.


ஈராக்கிய எண்ணெய் வளத்தை சுரண்டியதில் அமெரிக்கா பல கோபுரங்களை கட்டி கொண்டது, இன்னும் கட்டிகொண்டிருக்கின்றது.


நிச்சயமாக செப்டம்பர் 11 அமெரிக்காவிற்கு அடிதான், அவமானம்தான் ஆனால் அதனை வைத்து அவர்கள் சம்பாதித்துகொண்டது ஏராளம்.


அடிக்கவிட்டு அடிப்பது, இழந்து விட்டு மொத்தமாக மீட்டுகொள்வது ஒரு தந்திரம், பகவான் கிருஷ்ணன் பாரதத்தில் சொன்ன தந்திரம், அதனை செய்து காட்டிவிட்டது அமெரிக்கா.


உச்சமாக ஐஎஸ் எனும் இயக்கத்தை அடக்குகின்றேன் என அதே அரேபியாவில் டேரா போட்டு அமர்ந்துவிட்டது.


அவர்களுக்கென்ன சதாம் இல்லை என்றால் பின்லேடன் அவனும் இல்லை என்றால் ஐ.எஸ் அட அதுவும் இல்லை என்றால் இன்னொரு குழு உருவாக்க முடியாதா?


தமிழக அரசியல்வாதிகளுக்கு இந்தி எதிர்ப்பு, ஈழம், சாதி, காவேரி போல ஏதாவது ஒன்று சிக்குவது போல‌.














No comments:

Post a Comment