Monday, August 8, 2016

இந்த ஆகஸ்டு 8ம் நாள்தான்...



இந்தியாவினை வெள்ளையன் ஆக்கிரமிக்க தொடங்கியதிலிருந்தே எதிர்ப்பு கிளம்பிகொண்டே தான் இருந்தது, அது சிப்பாய் புரட்சி, வேலூர் கலகம் , பகத்சிங் காலம், சென்பகராமன் காலம் என பல இருந்தாலும் பெரும் முன்னேற்றமில்லை


காரணம் அன்றைய 40 கோடி மக்களுக்கும் ஒரே தலைவர் இல்லை, பஞ்சாப் முதல் குமரி வரை, பலுசிஸ்தானில் இருந்து டாக்கா வரை பரந்திருந்த இந்த பெரும் நாட்டிற்கு ஒன்றுபட்ட தலைவர் இல்லை, ஒவ்வொரு மூலையிலும் ஒரு குரல் கேட்கும் எளிதாக அடக்கினான் வெள்ளையன், இன்னொன்று நவாப், சுல்தான், அரசன் என பல மன்னர்களை வைத்தே ஆண்டுகொண்டும் இருந்தான், அவர்களை மீறி மக்கள் வாய்திறப்பதில்லை


Stanley Rajan's photo.


ஒரு நல்ல தலைவன், எல்லா மக்களையும் இணைக்கும் தலைவன் எனும் காலம் காந்தி வந்து போராட்ட தலைவராக சேர்ந்த பின்புதான் அது வாய்த்தது, தென்னாப்ரிக்காவில் அவர் பெற்ற வெற்றி மக்களுக்கு அப்படி நம்பிக்கையும் அளித்தது.


அவர் பின்னால் இம்மாபெரும் தேசம் அணிதிரண்டது, அவர் சொன்ன சொல்லுக்கு கட்டுபட்டது. காரணம் அவரின் எளிமை, அஹிம்சை, மனிதநேயமெல்லாம் அம்மக்களுக்கு மாமருந்தாய் அமைந்தன, அதுவரை டாம்பீக ஆடை கிரீடம் அல்லது கோட் சூட் என தலைவர்களை பார்த்த மக்களுக்கு, அரைவேட்டியுடன் வந்து நின்ற காந்தி ஒரு அபூர்வமாக தெரிந்தார்.


அவரது சிந்தனை எளிமையானது, அதாவது இந்த 40 கோடி மக்களை வெறும் 1 லட்சம் கூட எண்ணிக்கையில்லா வெள்ளை அதிகாரிகள் ஆள்கின்றனர், எப்படி?


எல்லாம் நாம் கொடுக்கும் ஒத்துழைப்பு, நாம் கொடுக்கும் வரி, அவன் சட்டத்தை நாம் மதிப்பது இதுதான் காரணம்


வன்முறை ஆபத்தானது அப்படித்தான் இத்தேசம் இந்த சிக்கலில் சிக்கியது, வன்முறை மூலம் வெள்ளையன் விரட்டபட்டாலும் நாளை நாமே அதே வன்முறையில் சிக்கும் ஆபத்தும் உண்டு,


போராடுவோம், அஹிம்சையில் போராடுவோம். நமது உப்பிற்கு ஏன் வெள்ளையனுக்கு வரி? நம் உப்பு நம் உரிமை


Stanley Rajan's photo.


ஏன் அவனிடம் துணி வாங்கவேண்டும்? எமது பருத்தி எமது நெசவு, அவனிடம் எந்திரம் இருந்தால் இருக்கட்டும் எமக்கு முழம் வேட்டி போதும், அவன் துணிகளை நிலாவிற்கு வேண்டுமானாலும் கொண்டு விற்கட்டும். இப்படியாக போராடுவோம், எதிர்ப்பினை தெரிவிப்போம்


சாலை விதிகளை மதிக்கின்றோம் 1 காவலர் நிற்கின்றான், மதிக்காமல் மந்தைகளாய் சாடினால் 1 காவலர் 10 ஆவார், முடியுமா? முடியாது. ஜெயிலில் போடுவார்கள், ஜெயிலை நிரப்புவோம், அடித்தால் வாங்கிகொள்வோம், அவனாய் வருந்தட்டும். குரல் எழுப்பிகொண்டே இருப்போம்.


சரியான வாய்ப்ப்ய் கிடைக்கும் பொழுது அடித்து ஆடுவோம். அதுவரை வெற்றியோ தோல்வியோ ஒருபுறம் கிடக்கட்டும், மக்கள் ஒரே கோட்டில் நிற்பார்கள், ஒன்றாக சேர்வார்கள், கலையமாட்டார்கள்.


இதுதான் காந்தி, மக்கள் அப்படித்தான் நின்றார்கள்


அப்படி உப்பு சத்தியா கிரகம், ஒத்துழையாமை இயக்கம், வட்ட மேஜை சதுர மேஜை என எதனையோ செய்து கொண்டிருந்தவர் , மிக சரியான வாய்ப்பாக பயன்படுத்தியது ஆகஸ்டு புரட்சி


வருடம் தோறும் வரும் ஆகஸ்டிற்கும் அந்த ஆகஸ்டிற்கும் வித்தியாசம் உண்டு, காரணம் அது வெள்ளையன் கலங்கி நின்ற ஆகஸ்டு, கலங்க வைத்தவன் ஹிட்லர்


முதலாம் உலகப்போரிலே இந்தியரை நம்ப வைத்து ஏமாற்றியது பிரிட்டன், போரில் கலந்துகொள்ளுங்கள் உங்களை விடுவிப்போம் என்றது, அப்படியே இந்தியரும் கலந்து கொண்டு போராடினர், ராஜ்புத் வீரர்களும், சீக்கிய வீரர்களும் அதில் மகா முக்கியம். அவர்களால்தான் முதல் உலகப்போரில் பிரிட்டன் வெற்றி சாத்தியம் இல்லாவிட்டால் ஆஸ்திரிய ஹங்கேரி அல்லது கெய்சரின் ஜெர்மன் பிரிட்டனை துடைத்தெரிந்திருக்கும்


ஆனால் வெற்றிபெற்ற பிரிட்டன் பெப்பே காட்டியது, ஆனால் விதி ஹிட்லர் உருவத்தில் கொஞ்சநாளில் வந்தது. ஹிட்லரின் எழுச்சி கடவுளை தவிர யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது, அது இன்று வரை ஆச்சர்யம்.


பிரிட்டனுக்கு அமெரிக்கா அதே வலையினை வீச சொன்னது, காரணம் இந்தியாவில் மக்கள் தொகை அதிகம், பெரும் ராணுவம் திரட்டலாம் எனும் தந்திரம், பிரிட்டனும் அழைத்தது வாருங்கள் வந்து யுத்தத்தில் கலந்துகொள்ளுங்கள், ஹிட்லர் செத்ததும் நாடு உங்களுக்கு என பேசதொடங்கியது


நயவஞ்சகமாக அது இன்னொரு திட்டத்தை தீட்டிற்று, இரு இந்தியாவாக பிரித்து (மத ரீதியாக அல்ல) ஒன்றிற்ற்கு டொமினியன் எனும் சுயாட்சி அந்தஸ்தும், இன்னொரு பகுதியினை மக்கள் விருப்பம் எனும் பெயரில் குழப்பிவிடவும் திட்டம் தீட்டிற்று, காந்தி சிந்தித்தார் இதனை ஏற்றால் இந்தியாவே வருங்காலத்தில் இருக்காது, இந்த திட்டம் வேண்டாம்


இன்னொரு வகையில் இந்தியாவினை மிரட்டிய ஜப்பானையும் கணக்கில் கொண்டார் காந்தி, காரணம் சீனா, பிலிப்பைன்ஸ், மலேயா, பர்மா என விழுங்கி வேகமாக வந்தது அது, இந்தியாவினை விழுங்கலாம், ஆனால் நேதாஜியினை விரட்டிவிட்டு சீனா போல இங்கும் அத்துமீற எவ்வளவு நேரமாகும்


புலிக்கு தப்பி நரியிடம் வீழ்ந்த கதை ஆகிவிட கூடாது, இதுதான் காந்தி நேதாஜிக்கு மறைமுகமாக சொன்னார்.


எப்படியோ ஜப்பான் வேண்டாம், பிரிட்டன் தானாக இறங்கி வருகின்றது, ஹிட்லர் எனும் சூறாவளியில் அவர்கள் சிக்கபோவது உறுதி, முதலாம் உலகப்போரிலே அவர்கள் வல்லரசு பட்டம் காற்றில் பறந்தது, அமெரிக்கா புதிய சக்தியாக மாறுகின்றது, ரஷ்ய புரட்சிக்கு பின்னால் இனி மன்னராட்சி உலகில் சாத்தியமில்லை, காலணிகளும் காணமல் போகும் என அவர் கணித்தார்


இந்த நேரத்தில் அதாவது பிரிட்டன் உலகத்தில் சிக்கி இருக்கும் இந்த நேரத்தில் தனது மொத்த முயற்சியினையும் செய்தார், இதுதான் தருணம் என அழகாக கணித்தார், அறிவித்தார்


இதே ஆகஸ்ட் 8, பம்பாய் மாநாடு


இந்தியா விட்டு வெளியேறு எனும் பெரும் "Quit India Movement" புரட்சியினை தொடங்கினார், அவர் எடுத்த போராட்டங்களில் அதுதான் மிக பெரிது. அவர் அழைத்ததும் இந்தியா பொங்கிற்று அந்த பரந்த இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் அவர் அழைப்பு எதிரொலித்தது


சற்றும் எதிர்பாரா வெள்ளையன் அவரை சிறையில் அடைத்தான், நாடு போர்களமானது 76பேர் உயிரிழந்தனர், ஏற்கனவே போர், நிதி தள்ளாட்டம் என சிக்கி இருந்த வெள்ளையனுக்கு அதனை சமாளிப்பது பெரும் சிக்கலானது, அரச ஆட்சிகள் வீழ, இங்கிலாந்திலே இந்தியாவிற்கு ஆதரவு பெருகிற்று, காரணம் காந்தி எனும் ஒற்றை மனிதர்


அதன் தொடர்ச்சிதான் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா கண்ட விடுதலை. இதில் அவமானபட்ட வெள்ளையர்தான் பின் ஜின்னாவினை வலிய அழைத்து நாடே கொடுத்து தேசத்தை துண்டாடி மகிழ்ந்தார்கள்.


அது அவர்கள் பழிவாங்கல் எனினும், ஆகஸ்டு புரட்சி இந்திய சுதந்திர போராட்டத்தில் மிக முக்கியமான மைல் கல், அல்லது வெள்ளையன் தலையில் விழுந்த பாராங்கல்.


இன்றோடு 74 வருடம் ஆகின்றது, இத்தேசம் நினைவு கூறும் முக்கியமான சம்பங்களில் அதுவும் ஒன்று.


காந்தி மீது ஆயிரம் சர்ச்சைகள் சொல்லலாம், ஆனால் மிக நிதானமாக ஒரு பெரும் போராட்டத்தை வழிநடத்தி, அஹிம்சை முறையில் அடித்து, மக்களை ஒருசேர ஒன்றுபடுத்தி எமக்கு விடுதலை கொடு என 40 கோடி மக்களையும் ஒரு சேர கேட்கவைத்த சாதனை அவருடையது


சாதி, இனம், மதம், மொழி கடந்து அவர் இந்தியாவின் பிதா என பார்க்கபட்டது அப்படித்தான்.


இந்த 75 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்திருக்கும்? இந்த Quit India Movement என்ற ஸ்லோகம் தமிழகத்தில் வெள்ளையனே வெளியேறு என ஒலித்துகொண்டிருந்தது


அன்றைய இந்தியாவின் லாகூர், கராச்சி , ராவல் பிண்டி , டாக்கா, சிட்டகாங் போன்ற இந்நாளைய பாகிஸ்தான், வங்கதேச நகரங்களிலும் அதே குரல் எழும்பியிருக்கும், அதற்கு ஒரே காரணம் நாமெல்லாம் இந்தியர் எனும் எண்ணம் அன்று இருந்தது


இன்றோ வெள்ளையன் விதைத்த மத பிரிவினைகளால் அதே லாகூரிலிருந்தும் கராச்சியிலிருந்தும் ஏவுகனைகள் டெல்லி மும்பை சென்னை நோக்கி நிறுத்தபட்டிருக்கின்றன‌


74 ஆண்டுகளில் இத்தேசம் எவ்வளவு கொடூரமாக மாறிவிட்டது, அந்த ஒற்றுமை எங்கே? மதம் அதனை விழுங்கி, காந்தியின் உயிரையும் விழுங்கி இன்று இரு தேசத்தையும் சுடுகாடாக்க தயாராக நிற்கின்றது


நான் முஸ்லீம் என்பவனுக்கு ஜின்னா வழிகாட்டி, இவ்வளவிற்கும் அவர் சுதந்திரத்திற்காக ஒரு கொடியினை கூட பிடித்தவரில்லை, பாகிஸ்தான் என்பது வலிந்து அவர் கையில் கொடுக்கபட்டது, போராடாமல் நாடுபெற்ற பெரும் தலைவர் அவர்.


நான் இந்து என்பவருக்கு இந்து மகா சபை, ஆர் எஸ் எஸ் அமைப்புகளும் பெரிதாக தெரிகின்றன, அதனால்தான் காந்தி கொலையாளியினை அவைகளால் கொண்டாட முடிகின்றது


தான் இந்த சாதி என சொல்பவனுக்கும் காந்தியினை பிடிக்காது, காரணம் தாழ்த்தபட்டவர்களை ஹரிஜனங்கள் என சொல்லிவிட்டாராம், யாரடா நீ பெயர் வைக்க என பொங்குவார்கள், பார்கின்றோம்


மொழி வெறியர்களுக்கும் அவரை பிடிக்காது, அவர் ஏன் திராவிட மொழிபேசவில்லை என்பார்கள்


இதனை எல்லாம் கடந்து இந்தியர் என நினைப்பீர்களாயின் மகாத்மா எனும் அந்த பெரும் உருவத்தின் உன்னதம் தெரியவரும், மதங்களை, மொழிகளை, சாதிகளை தாண்டி இந்த பெரிய நாட்டை இணைத்து ஒரு பெரும் சாம்ராஜயத்தை எதிர்த்து போராடி வெற்றியும் வாங்கிகொடுத்தது பெரும் சாதனை.


அதனை விட பெரும் சாதனை ஒரு மக்களை அகதிகள் என நாடு நாடாய் அலையவிடாமல் காத்தது. இன்றைய ஈழ, சிரிய, லிபிய , பாலஸ்தீன மக்களை எல்லாம் காணுங்கள் அதன் வீரியம் புரியும்


நேதாஜியின் நாட்டுபற்று சந்தேகத்திற்கிடமின்றி உயர்ந்தது, ஆனால் அவர் திட்டபடி ஜப்பான் இந்தியாவில் நுழைந்திருந்தால் பெரும் வெறியாட்டம் நிகழ்ந்திருக்கும், தான் கால்பதித்த நாடுகளில் எல்லாம் அவர்கள் ஆடிய ஆட்டம் அப்படி. தாய்லாந்து ரயில்பாதை அமைப்பு ஒன்றே போதும், சீன நான்சிங் துயரம் இன்னும் மேல்


நேதாஜியின் தியாகத்தை கொண்டாடுங்கள், ஆனால் ஜப்பானிய படை புகுந்திருந்தால் வெள்ளையன் செய்யா கொடூரங்களை எல்லாம் அவர்கள் அரங்கேற்றி இருப்பார்கள் என்பதைத்தான் வரலாறு சொல்கிறது.


காந்தி நிதானித்ததிலும் ஒரு அர்த்தம் இருந்திருக்கின்றது, அம்மனிதன் நிச்சயம் சர்ச்சைகுரியவன் அல்ல‌


இந்த ஆகஸ்டு 8ம் நாள்தான் அந்த பெரும் எதிர்ப்பு இந்தியாவில் காந்தியால் பற்றவைக்கபட்டது, மறுநாள் அது இந்தியாவெங்கும் எதிரொலித்தது, இந்தியாவிற்கு சுதந்திரம் நெருங்க இந்த நாளிலே தான் அச்சாரம் இடபட்டது.


அந்நாளை ஒரு இந்தியனாய் நினைத்துகொள்வதில் பெருமை அடைகிறோம்


வந்தே மாதரம்
















No comments:

Post a Comment