என்னதான் பகை என்றாலும், வாழவேண்டிய இரு இளம்பெண்களை அருவருக்கதக்க வகையில் பேச வைத்து, ஒரு பெண்ணை பெண்களால் கேவலபடுத்தும் ஒரு பெரும் அவமானம் தமிழகத்தில் அரங்கேற தொடங்கியுள்ளது
அந்த இளம்பெண்கள், வாழவேண்டிய குருத்துக்கள், மலரவேண்டிய மொட்டுக்கள், இப்படி எல்லாம் அழிச்சாட்டியம் செய்தால் அவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்?
யாருக்கும் அந்த எண்ணமில்லை, பெண்ணிய அமைப்புக்களுக்கும் அந்த அக்கறை இல்லை, சிம்புவிற்கு பொங்கிய அமைப்புகளை காணாவில்லை, அப்பெண்களுக்கும் சாதிகள் இருக்குமல்லவா?, அவர்களும் மானம் காக்க வரவில்லை
நமது வீட்டு பெண் என்றால் தாங்கமுடியுமா? ஆனால் இந்த தேசத்து பெண்கள், நமது சகோதரிகள் ஆனால் கேட்க யாருமில்லாத அபலைகள்
பத்திரிகைகள் இவ்விஷ்யத்தில் அக்கால மஞ்சள் பத்திரிகைகளை மிஞ்சி சென்றுகொண்டிருப்பது அப்பட்டமான ஊடக கொடூரம், கூவத்தை விட மோசமானவை அதன் செயல்பாடுகள்
பெண்களை பொத்தி பொத்தி வளர்க்கும் சமூகம் இது, இம்மாதிரியான விஷயங்களில் பெண்களின் முகம் கூட காட்ட கூடாது என்பது பெண்ணுரிமை சலுகை, ரகசிய வாக்குமூலம் என பெண் நீதிபதிக்கு மட்டுமே அவர்கள் சொல்லவேண்டும்
இங்கோ பத்திரிகை, இணையம் என போட்டு வாங்குகின்றார்கள், ஈழத்தில் தமிழகபெண்களை சிங்களன் தொட்டால் விடமாட்டோம் என்பவர்களை, அருகில் நடக்கும் இந்த பெரும் அவமானத்தில் காணவில்லை
இந்த பத்திரிகைகளையும், பெண்களை வைத்து பகடை ஆடும் இந்த அவமானத்தையும் காணும்போது வெட்கத்தால் தலைகுனிகின்றோம்
நாணமும் அச்சமும் நாய்களுக்கு வேண்டுமாம், என்றான் பாரதி, இதோ இப்பெண்களின் மானமும் எதிர்காலமும் பதவியும், பழிவாங்கலும், பரபரப்பு செய்தியும் தேடும் இந்த ..... வேண்டுமாம்.
மனம் கனத்த நேரமிது, அந்த பெண்கள் சொல்லவேண்டியதை ரகசியமாக சட்டத்தின்முன் சொல்லட்டும்,
சசிகலா புஷ்பா நாளையே ஜெயலிலிதாவினை சந்தித்து மாறலாம் அல்லது இன்னொரு கட்சியில் அடைக்கலம் ஆகலாம், 2 வருடம் கழித்தால் எல்லாம் மறைந்துவிடும், அன்னார் அன்று அமைச்சராக கூட இருக்கலாம், இந்த அரசியலில் எதுவும் நிரந்தரமில்லை
நமது சமூகம் அப்படி இச்செய்தி நாளையே மறையலாம், ஆனால் காலெமெல்லாம் அதனை சுமந்து அலையபோவது அந்த அபலைகளே, நமது சமூக யதார்த்தபடி இந்தபழி மாறாது.
நதிகளை, மலைகளை, கடவுளை பெண்ணாய் வணங்கும் நாடு இது, அதில் இப்படியும் சில கண்ணீர் பரிதாபங்கள்.
இறைவன் எல்லாவற்றையும் பார்த்துகொண்டே இருக்கின்றான், அவன் எல்லாவற்றிற்கும் ஒரு கணக்கு வைத்திருப்பான்,
அது வரை ஆடட்டும்.
ஆனால் இந்த அபலைகளை விட்டுவிட்டு ஆடுங்கள் என கை கூப்பி கேட்க மனது ஏங்குகின்றது.
அந்த முகங்களையும் அந்த பரிதாப கோலத்தையும் பாருங்கள், நம்மிடம் பிறந்ததை விட அவர்கள் என்ன தவறு செய்தார்கள்
கொஞ்சம் சிந்தித்தால் உங்கள் கரங்கள் தானாக அவர்களுக்காக இறைவனிடம் மன்றாடும், திக்கற்றவர்களுக்கு அல்ல சிக்கி கொண்டவர்களுக்கும் அவனே துணை.
சங்ககாலத்தில் பாரிக்கு இரு மகள்கள் இருந்தார்களாம், அவன் கொல்லபட அவர்கள் அனாதை ஆகி நடுதெருவில் நின்றார்களாம், ஒரு புலவன் அதனை பாடலாய் வைத்தான், நெஞ்சுருகும் பாடல் அது.
இன்று இப்பெண்களை காணும்பொழுதும் அதே பாடல் நினைவுக்கு வருகின்றது, அப்பெண்களுக்காவது கபிலர் இருந்தார். இவர்களுக்கு யார் இருக்கின்றார்கள்???
No comments:
Post a Comment