Monday, August 15, 2016

தாயின் மணிக்கொடி பாரீர்...

தாயின் மணிக்கொடி பாரீர்.

FB_IMG_1471228669215

200 ஆண்டுகால போராட்டம், அடித்து கேட்டு பின்னர் அமைதியாய் கேட்டு, அடி வாங்கி போராடி, ஒரு கட்டத்தில் வெள்ளையனுக்கும் மாபெரும் சிக்கல் ஏற்பட்டு சுதந்திரம் கிடைக்கும் நேரத்தில் கூட வஞ்சகமாய் உடைக்கபட்டு 2 துண்டுகளாக பிரிக்கபட்டு சிதைக்கபட்டது சுதந்திர இந்தியா

அது சுதந்திரம் பெறும்பொழுதே மாபெரும் கலவரம் குழப்பம், பிரிட்டிசார் விதைத்து சென்ற மத பிரிவினையின் உச்சம், ஒரு கட்டத்தில் மாபெரும் தலைவனின் உயிர்பலியோடுஅது நின்றது,

பின்னர் காஷ்மீரை காட்டி 2 போர்கள், அதையும் தாங்கியது தேசம், நண்பனாய் நினைத்து ஐ.நா சபையில் நிரந்தர இடம்கொடு என வாதாடும் பொழுதே சுய உருவம் காட்டிற்று சீனா, அதையும் தாங்கி வளர்ந்தது இந்தியா, மறுபடியும் போர், இன்னும் ஏராள பிரச்சினைகள் ஆனால் இந்தியா அசரவில்லை.

மீண்டும் போர், அதையும் தாண்டி மத கலவர முயற்சிகள், மக்கள் தொகை பெருக்கம், எப்போதும் நேரடியாக கொஞ்சமும், மறைமுகமாக நிறையவும் தொல்லை கொடுக்கும் வல்லரசுகள்.

ஆளுக்க்கொரு கட்சி, அவனவக்கொரு கொள்கை, அவர்களுக்கென ஒரு வேலையற்ற கூட்டம், வெற்று கூச்சல், வீண் ஆர்ப்பாட்டம் என தினம் ஒரு பிரச்சினையை சந்தித்தாலும் வளர்கின்றது இந்தியா, குதிரை வேகமாக ஓடலாம், ஆனால் யானை எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் பலமானது, அதுதான் இந்தியா.

இவ்வுலகில் உள்ள நாடுகளை கவனியுங்கள், பல நாடுகளில் மக்கள் வாழவே முடியாது,பொறுப்பற்ற அரசாங்கமும் மனித தன்மை இல்லா போராட்டங்களும்,இன்னும் பற்பல கொடுமைகளும் பெரும் அச்சுறுத்தலை மக்களுக்கு கொடுக்கின்றது, உணவு இல்லை, கல்விசாலை இல்லை,ராணுவம் இல்லை, நீதிமன்றம் இல்லை,காவல் இல்லை, ஒன்றுமே இல்லை.

சிலநாடுகளில் ராணுவ ஆட்சி மட்டும் உண்டு, அது பெரும் ஆபத்து, சாப்பாட்டில் உப்பு போடுவதை கூட ராணுவம்தான் நிர்மானிக்கும்.

ஒரு வகையில் நாமெல்லாம் அதிர்ஷ்டசாலிகள், பொருளாதாரம் ஏறும் இறங்கும், ஆனால அமைதியாய் வாழ்கின்றோம், நிம்மதியாய் உறங்கி நம்பிக்கையாய் எழுகின்றோம், என்றாவது இங்கு வாழவே முடியாது என்று குடும்பத்தோடு அகதியாய் நாட்டை விட்டு கிளம்பியிருக்கின்றோமா?, இதுதான் சுதந்திர இந்தியாவின் வெற்றி.

அது மோசம், இது மோசம், எல்லாமும் மோசம் எல்லாம் அசிங்கம் என குணா கமலஹாசன் போல மோச ராகம் பாடும் பத்திரிகைகளும், தொலைகாட்சிகளும் ஒன்றை மறந்து விடுகின்றன.

சில நாடுகளில் முகநூல் கூட கிடையாது, சீனாவில் தடைசெய்யபட்ட ஊடகங்கள் சீன பெருஞ்சுவரையும் தாண்டும், இன்னும் சில நாடுகள் செவ்வாய் கிரகத்தில் மனிதனின் நிலைபோல, உலகைவிட்டே துண்டிக்கப்ட்டிருப்பார்கள், ஆனால் இந்தியா அப்படி அல்ல‌

காந்தி முதல் மோடி வரை விளாச முடிகிறது, கார்ட்டூன்கள் போட்டு கலைஞர் வரை கலாய்க்கமுடிகிறது, பெரும் ஊழலை கூட அனாசயமாய் டீகடை பெஞ்சில் விவாதிக்க முடிகிறது, இது எத்தனை நாடுகளில் சாத்தியம்?

நமது பொது சுதந்திரத்திற்கு கேடு வரும்பொழுது கத்த முடிகிறது, கொடி பிடித்தோ அல்லது ஊர்வலமோ, சில நேரங்களில் வேறுவகையிலோ எதிர்ப்பினை காட்ட முடிகிறது, 5 வருடம் பொறுத்தால் ஆட்சியை தூக்கி எறிய முடிகிறது, காலத்திற்கும் ஆட்சியே மாறாத நாடுகளை நினைத்துபாருங்கள்??

இந்தியா கடந்த 69 ஆண்டுகளில் கடந்தபாதை மிக சிக்கலானது, எவ்வளவு இழப்புகள், எவ்வளவு நெருக்கடிகள், நிறைய துரோகங்கள்,முக்கியமாக பெட்ரோல் முழுதும் இறக்குமதி, அதனையும் தாண்டி வளர்ந்திருக்கின்றோம் அல்லவா? அதுதான் சுதந்திர வெற்றி.

1960களில் ஒரு நுட்பத்தினையும் தரமாட்டேன் அல்லது தரவிடமாட்டேன் என அடம்பிடித்த அமெரிக்கா, தனது செயற்கை கோள்களை ஏவுவதற்கு இந்திய உதவியை நாடுகின்றது அல்லவா? அது வெற்றி.

இந்தியாவின் உதவியின்றி தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் அமைதி சாத்தியமில்லை என உலகம் கருதுகின்றதல்லவா அது வெற்றி. 1962 போல் அல்ல, நாம் அடித்தால் மறுநொடி இந்திய ஏவுகனைகள் ஷாங்காய் வரை தாக்கும் என சீனா யோசிக்கின்றது அல்லவா? அது வெற்றி.

ஐ.நா சபையில் நிரந்தர உறுப்பினராகலாம் எனும் அளவிற்கு தனது முத்திரையினை உலக அரங்கில் பதித்திருக்கின்றது அல்லவா? இது தான் வளர்ச்சி.

சொன்னால் சொல்லிகொண்டே செல்லலாம், அவ்வளவு குறிப்பிடதக்க முன்னேற்றம். அதனாலதான் 1998ல் நடந்த கிழக்காசிய பொருளாதார வீழ்ச்சி, 2008ல் நடந்த சிக்கல், சமீபத்திய கிரீஸ் திவால் மிரட்டல் இவை எல்லாம் இந்தியாவினை தாக்க முடியவில்லை. காரணம் மெதுவாக நடந்தாலும் பலமிக்க யானை இது.

இந்தியா சில வெளிநாட்டு விஷயங்களில் கண்டும் காணாமலும் செல்லலாம்,அல்லது புத்தர் போல மாபெரும் மவுனம் காக்கலாம், காரணம் சில விஷயங்களில் ஓங்கி அடித்தால் மேற்குலகின் பொருளாராதார தடை எனும் ஆயுதம் இந்தியா மீது வீசபடும்.

அவ்வாறு வீசினால் நவீன அறிவியல் சாதனம்,மருந்து பொருள், வெளிநாட்டு எந்திரங்களின் மாற்றுபாகங்கள், மருந்துகள் என ஏதும் இந்தியாவிற்குள் வராது.
விவசாயத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம், நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளில் அதிக சிரத்தை, பெரும் செலவினை விழுங்கி கொண்டிருக்கும் ராணுவ கருவிகள் இறக்குமதிக்கு பதிலாக உள்நாட்டு தயாரிப்புகள், இன்னும் தொழிலதிபர்கள் மேல் கொஞ்சம் கட்டுப்பாடும் முறையான வரிவிதிப்பு இவைகளில் கவனம் செலுத்தினால் மட்டும் போதும்

இன்று மேற்குலகின் பொருளாராதார தடைகளை எல்லாம் டிஷ்யூ பேப்பராக கசக்கி தூக்கி எறிந்து, அனாசயமாக அதிரடியாக‌ விளையாடுகின்றார்களே பலமிக்க ரஷ்யர்கள், அவர்களை போல நாமும் உலகை ஆட்டலாம்.
கருப்புகொடி, சிகப்பு கொடி, புறக்கணிப்புகள் எல்லாம் அரசுக்கு செய்யகூடியவையே அன்றி, நாட்டிற்கு எதிராக அல்ல‌

நாடு வேறு, அரசாங்கம் வேறு.

இந்தியா அமைதியான நாடு, அதிலும் நமது பகுதி மிக நிச்சயமாக ஆனந்தமான‌ பகுதி, அந்த அருமையை உணரவேண்டுமானால்
சுதந்திர தினத்தன்று டிவியில் 20 வயது நடிகை 120 கோடிமக்களுக்கும் பேட்டியளிப்பார் அல்லது சினிமா குப்பைகள் அல்லது பட்டிமன்ற அரட்டைகள் ஓடிக்கொண்டிருக்கும்

அல்லது சாராய அரசியல்வாதிகள், ஊழல்வாதிகள் உணர்ச்சிமிக்க சுதந்திரதின வாழ்த்துக்களை சொல்வார்கள், உடனே அலைவரிசையை மாற்றிவிட்டு

பல குழப்பமான நாட்டு அரசுகளையும், சிக்கலான வாழ்க்கை வாழும் வடகொரியா போன்ற நாடுகளையும், பலமான அரசுகள் இல்லாததால் கொடூரமான தீவிரவாதத்திற்கு பலியாகும் நாடுகளை பாருங்கள்.

எத்தனை கொடூர அரசுகள், எத்தனை காட்டுமிராட்டிதனங்கள், போதை கும்பல்கள் ஆளும் நாடுகள், கற்பனைக்கும் எட்டாத கட்டுப்பாடுகள்,அட்டகாசங்கள்.

அம்மக்களின் அழுகுரலும், பசியால் கதறும் பிஞ்சுகளின் கூக்குரலும் கேளுங்கள்
தானாக உங்கள் காதுகளில் தேசிய கீதம் ஒலிக்கும், கைகள் தேசிய கொடியை வணங்கும்.

இந்தியா ஒரு நாடு மட்டுமல்ல, ஒரு மாபெரும் அதிசயமும் கூட, பல இனங்கள், மதங்கள்,கலாச்சாரம் என கலந்து வாழும் அற்புதமான ஒரு அமைப்பு, இந்தியாவினை தவிர உலகில் எந்த நாட்டிற்கும் அது சாத்தியமானதே அல்ல.

வந்தே மாதரம்

No comments:

Post a Comment