பஞ்சு அருணாசலம் காலமாகிவிட்டாராம்
சிலர் அவதாரமாய் வருவார்கள், அந்த அவதாரங்களை அருகிருந்து பார்த்து பணியாற்றி ரசிக்கும் வாய்ப்பு ஒரு சிலருக்கு கிடைக்கும், அப்படி கண்ணதாசன் எனும் பெரும் கலை அவதாரத்திற்கு அருகிலிருந்து வாய்க்கும் பேறு பெற்றவர் பஞ்சு அருணாசலம்
கவிஞரின் பெரும் பாடல்களை அவர் சொல்ல சொல்ல இவர் எழுதினார், ஒரு கட்டத்தில் இவரே பாடலும் எழுதினார், பூவோடு சேர்ந்த நாரே மணக்கும்போது கவிஞரின் தாக்கம் இவரிடமும் இருக்குமல்லவா?
விழியே கதை எழுது போன்ற அற்புதமான பாடல்களை சொந்தமாக எழுதினார், அது கண்ணதாசனின் பாடல் போலவே இருக்கும்
பல படங்களை தயாரித்தார், இளையராஜாவினை அறிமுகபடுத்தியதும் இவரே, ரஜினிக்கு முரட்டுகாளை மூலம் இன்னொரு கதவினை திறந்துகொடுத்ததும் இவரே
பெரும் பிண்ணணி இருந்தும் ஏவிஎம் போல எந்த சர்ச்சையிலும் சிக்காமல் அமைதியாக சினிமாவில் இருந்த அபூர்வ பெரியவர்களில் இவரும் ஒருவர்.
இனி அவரின் அருமை பெருமைகளை எல்லோரும் சொல்வார்கள், ஆனால் நமது நினைவில் வருவது இதுதான்
ஈசிசேரில் படுத்துகொண்டு நினைவுகளில் மூழ்கி கவிஞர் எடுத்த முத்துக்களை எல்லாம் கோர்த்தவர் இவர்தான்
அப்படி கவிஞர் அருளிய அர்த்தம் உள்ள இந்துமதம் போன்ற பெரும் அடையாளங்களுக்கு முதல் காப்பி இவரின் கை எழுத்திலே தான் இருந்திருக்கும்
இவர் கையெழுத்தைத்தான் பாடலாய் படித்திருப்பார்கள், காவிய புத்தகங்களாய் எடுத்திருப்பார்கள்
கண்ணதாசனை அனுப்பும்போதே இப்பணியினை செய்ய கடவுள் இவரையும் அனுப்பி இருக்கின்றான்
இன்று இருவரும் இல்லை, கொடுத்த காலம் எடுத்துகொண்டது. ஒவ்வொருவராக கடமை முடித்து கிளம்பிகொண்டே இருக்கின்றனர், காலம் இயங்கிகொண்டே இருக்கின்றது.
ஆனால் கண்ணதாசன் காலத்தை மீறி நிற்பார், அதன் ஓரத்தில் பஞ்சு அருணாசலமும் நிற்பார்
ஆழ்ந்த அஞ்சலி.
No comments:
Post a Comment