ஏதாவது பழைய காவியம் படிக்கவேண்டும் போலிருந்தது, நள வெண்பா படித்தேன், நள மகராஜனின் காவியம். அவன் சமையலுக்கு பெயர் போன அரசனாம், சமையல் பற்றி ஏதாவது சொல்லியிருப்பார்கள், ஒரு கத்தரிக்காய் பச்சடி பற்றியாது சொல்லியிருப்பார்கள் என அலசி பார்த்தபொழுது அப்படி ஒன்றும் சிக்கவில்லை
நளனுக்கு தெரிந்திருக்கும் சமையல் புகழேந்தி புலவருக்கு தெரியாமல் போயிருக்கலாம், பாவி கவிஞன் கொஞ்சமாவது அக்கால சமையல் பற்றி சொல்லி இருக்கவேண்டாமா? ஒரு மண்ணாங்கட்டியும் சொல்லாமல் நளன் சிறந்த சமையல்காரன் என்றால் எப்படி?
இப்படித்த்தான் சாலமோன் அரசன் பெரும் சமையல்காரன் என எவனோ கொளுத்திபோட, பைபிள் பக்கமெல்லாம் புரட்டினால், மனிதர் நன்றாக உண்டாராம், சமையல்காரன் பற்றி எல்லாம் இல்லை
சமையல் இருக்கட்டும்
அந்த நளனுக்கும் தமயந்திக்கும் காதலாம், அன்னபறவைதான் வாட்சப் வேலை எல்லாம் பார்த்திருக்கின்றது. காதல் பெரிதாக வளர்ந்திருக்கின்றது.
ஆனால் தமயந்தி மீது லோகம் , பாதாளம், 7ம் லோக தேவர்கள், ஏலியஸ்கள் என எல்லோருக்கும் காதலாம், சுயம்வரம் வைத்ததில் தேவர்கள், ஏலியன்ஸ்கள், பிசாசுகள் எல்லாம் நளன் உருவத்திலே வந்ததாம், கிராபிக்ஸ் உதவி கூட இல்லாமல் வந்திருக்கின்றன
ஆனால் சுயம்வரத்தில் மிக சமத்தாக நளனை அடையாளம் கண்ட தமயந்தி அவனுக்கு மாலை இட்டாளாம், அவ்வளவுதான் தேவர்கள், அசுரர்கள், ஏலியன்ஸ்கள் என எல்லா வில்லன்களும் ஒன்றாகினர்
சனி பகவானை ஏவிவிட்டு அவன் நிம்மதியினை குலைத்தனர், இருவரையும் பிரித்தனர், ஒரு பாம்பு வேறு கடித்து நளன் அகோரமாய் ஆனான், தயமந்தியினை சந்தித்தபொழுதும் அவளால் அவனை அடையாளம் காணமுடியாத அளவு சண்டாளர்கள் மாற்றிவிட்டிருந்தனர்
அதன் பின் படாத பாடு பட்டு, எப்படியோ நளன் சனியிடன் சரண்டர் ஆகி எல்லாம் திரும்பபெற்றான், யாவரும் நலம்.
உன் கதையினை கேட்டவரை நான் அவ்வளவு பாடு படுத்தமாட்டேன், செல்லமாய் கிள்ளுவேன் என சனியும் பை சொல்ல, யாவரும் நலம்
இதோடு புத்தகத்தை மூடினால், ஹீரோயினுக்கு லைன் விடும் வில்லன்கள் மொத்தமாக சேர்ந்து யாரையோ அலங்கோலமாக்கினார்களே, சமீபத்தில் கூட பார்த்து தொலைத்தோமே என சிந்தித்தால்,
அட ஐ சினிமா
எங்கிருந்து கதையினை உருவியிருக்கின்றார்கள் பார்த்தீர்களா?, இதில் கதை என்னுடையது என ஆளாளுக்கு சண்டை வேறு,
நல்ல நீதிபதி என்றால் ஷங்கரையும், வம்புக்கு வந்தவனையும் கட்டையால் அடித்து நளவெண்பாவினை நூறுமுறை எழுத சொல்லி இம்போஷிசன் தண்டனை கொடுத்திருப்பார்
உண்மையில் அக்கதைக்கு வழக்கு போட வேண்டியவர் புகழேந்தி புலவர்.
இப்பொழுது யார் கதையினை உருவிகொண்டிருக்கின்றார்களோ தெரியாது, எதற்கும் பழம் இலக்கியங்களை எல்லாம் படித்து வைத்து கொள்வது நல்லது.
No comments:
Post a Comment