Monday, August 22, 2016

புனித ஜார்ஜ் கோட்டை : சென்னை சரித்திரம்

FB_IMG_1471852301803


சீனாவின் பட்டும், இந்திய மிளகும் பட்டுசாலை எனும் சாலை வழியாக துருக்கி மூலம் ஐரோப்பாவினை அடைந்துகொண்டிருந்தன, அது ஒன்றே பிரதான இணைப்பு.


அலெக்ஸாண்டர் காலம் முதல் போப்பாண்டவர்கள் உச்ச காலம் வரை அது ஐரோப்பியர் கட்டுபாட்டிலே இருந்தது, வியாபாரம் அதன் மூலமே நடந்தது.


இது யார் கட்டுபாட்டில் இருப்பது என்று தொடங்கிய அரசியல் போர், பின் மதச்சாயம் பூசப்பட்டு சிலுவைப்போர் என தொடர்ந்தது, வலுவான துருக்கியர் அனாசாயமாக விரட்டினர், இந்நிலையில்தான் எப்படியோ ஆசியா சுற்றி வந்து , இந்தியாவினை பார்த்து வாயினை பிளந்தான் அவன்


இன்று நாம் ஐரோப்பாவினை ஆஆஆ என பார்கின்றோம் அல்லவா? அப்படி.


உலகின் வரலாற்றை மாற்றி போட காரணமாயிருந்தவன் மார்க்கோ போலோ, இத்தாலிக்காரர் (இத்தாலியருக்கு இந்தியா என்றாலே ஒரு விருப்பம் போலும் ), வியாபாரிதான் ஆனால் இந்தியா, சீனம் என ஆசியாவினை சுற்றிவிட்டு ,செல்வம் இந்தியாவில் குவிந்து கிடக்கிறது என்ற ஐரோப்பியரின் கனவிற்கு, ஆமாம் நானே கண்ணால் பார்த்த சாட்சி என்று சூடமேற்றி சத்தியம் செய்தவர்.


அதுமுதல் "இந்தியா கிறுக்கு" பிடித்து அலைந்தது ஐரோப்பா, தேடினார்கள், முதல்வெற்றி போர்ச்சுகல்லுக்கு உபயம் வாஸ்கோடகாமா, பலர் வந்தார்கள் , அவர்கள் வரும்பொழுது, முக்கால சோழ நாட்டின் பகுதியான அந்த கடற்கரை நாயக்கர்களுக்கு கட்டுபட்டதாயிருந்தது, ஆனாலும் ஆண்டு கொண்டிருந்தது ஆற்காடு நவாப்.


அந்த பகுதியை சுற்றி சுற்றி பார்த்தார்கள், வியாபாரம் செய்ய வந்தவர்கள்தான் ஆனால் போர்த்துகீசியரின் சமயபற்று ஆழமானது, ஒரு கிறிஸ்தவ போதகர் எப்படியோ இந்த பகுதிக்கு வந்திருக்கிறார், இறந்திருக்கிறார், அவரின் கல்லறை அங்கிருக்கின்றது என்பதை கண்டுகொண்டு ஆராய்ந்தார்கள், அமைதியானார்கள்.


முழங்காலிட்டு பிதா,சுதன்,பரிசுத்த ஆவி அடையாளமிட்டு சொன்னார்கள், இது இயேசுகிறிஸ்து கூட இருந்த செயிண்ட் தாமஸ்(போர்த்துகீசிய மொழியில் சாந் தோம்ஸ்), அவருக்கு ஆலயமும் கட்ட தொடங்கினார்கள் "சாந்தோம்" என பெயரிட்டார்கள்,வணங்கினார்கள்.


(புனித தோமையார் இந்தியா வந்தார் என்பதற்கு நச்சென்ற ஆதாரமில்லை, ஆனால் யாரோ ஒரு கிறிஸ்தவ துறவி வந்திருக்கிறார், பெயர் தாமஸாக இருக்கலாம்)


ஒரு மாலுமியாக அந்த போர்த்துகீசியரும் வந்தார், நீண்ட‌ தாடிவைத்திருந்தார், "மெட்ருஸ்" என்பது அவரின் பெயர், வந்த இடத்தில் இறந்தார், அவரை புதைத்த இடத்திற்கு அடையாளமிட்டார்கள் "மெட்ராஸ்", இதுதான் 1996 வரை நீடித்த பெயர்.


பின்னால் வந்த பிரிட்டனும்,பிரான்சும் போர்ச்சுக்கல்லை பிடரியில் பிடித்து தள்ளி விரட்ட, அழுதுகொண்டே மலாக்கா சென்றனர். ஆனால் அந்த "மெட்ராஸ்" என்ற பெயர் மாறவில்லை, வெள்ளையரும் அப்படியே அழைத்தனர், தமிழில் அது "மதராசபட்டினம்" ஆயிற்று.


அந்த இடத்திற்கு கொஞ்சம் தள்ளி, பிரிட்டானியர் கோட்டை கட்டினர், அந்நாளைய பிரிட்னுக்கு புனித ஜார்ஜ, தெற்கத்தியருக்கு பெரும்பாலும் முனியாண்டி, மதுரை வீரன், இசக்கியம்மன், சுடலையாண்டவர் போல அவர்களுக்கு இங்கிலாந்தின் காவல் தெய்வம் ,புனித ஜார்ஜ் பெயரினை இட்டார்கள். மறக்காமல் ஒரு மாதா கோயிலும் கட்டிகொண்டார்கள்.


கோட்டைக்கு நிலம் வாங்கிய நாள் இன்று கொண்டாடும் சென்னை தினமாம், கோட்டை திறக்கபட்டநாளில்தான் சென்னை தினம் கொண்டாடி இருக்கவேண்டும், ஆனால் யாரோ புண்ணியவான் பத்திரம்முடிந்த நாளையே குறித்துவிட்டார்கள், பரவாயில்லை.


வெள்ளையர்கள் தென்னிந்தியாவிற்கு செய்த பெரும் உதவி அந்த கோட்டை, கிட்டதட்ட 90 வருடங்கள் மதராஸ் ராஜதானி அதாவது madras presidency (கன்னடம், கேரளம்,ஆந்திரா,தமிழ்நாடு) என தென்னிந்தியாவின் கட்டுப்பாட்டு அறையாக திகழ்ந்ததும் அந்த கோட்டை, மாநிலங்கள் பிரிக்கபட்டபின் இன்றுவரை தமிழக தலைவிதி எழுதபடுவது எல்லாம் அந்த கோட்டைதான், பலவகை விவாதங்ள், தலைவரின் சிறப்புரைகள்,சட்டங்கள், தீர்மானங்கள் என‌ இன்னும் பல சிறப்புகளுக்கு அடையாளம் அந்த கோட்டை.


இத்தாலியின் வெனிஸ் போலவே திட்டமிட்ட நீர்வழிச்சாலையினையும் வெள்ளையர்கள் அமைத்திருக்கின்றார்கள், அந்த சென்னை அப்படித்தான் இருந்திருக்கின்றது, பின்னாளில் எல்லாம் நாசமாய் போய்விட்டது.


எதனை ஒழுங்காக பராமரித்தோம் நாம்?.


இந்த இடம் கோட்டைக்காக வாங்கும் பொழுதும், அதில் பெரும் லண்டன் கனவான்கள் ஆளும்பொழுதும், நிச்சயம் திருக்குவளை வாரிசும், மைசூர் வாரிசும் வந்து சண்டையிடும் என்றெல்லாம் நினைத்திருப்பார்களா? விதி எப்படி எல்லாம் ஆடுகின்றது.


அதில்தான் ராபர்ட் கிளைவ் வசித்தான், அதன் மாடத்திலிருந்து அவன் தேநீர் பருகுவானாம், அப்பொழுது சென்னை பகுதி நதிகள் எல்லாம் ஓடங்கள் ஓடுமாம், அதில் அவனுக்கு பிடித்தமான நதியில் அவன் படகோட்டுவானாம்


அதில் ஒன்று கூவம், இன்று நாறி கிடக்கும் கூவம், விடுங்கள். அக்காலம் அவ்வளவு அழகாய் இருந்திருக்கின்றது.


நிச்சயமாக சென்னைக்கு திருப்புமுனை கொடுத்ததே அந்த கோட்டைதான், அது அமையாவிட்டால் சென்னை இந்த அளவிற்கு வளர்ந்திருக்காது, , அசுரவேகத்தில் கிட்டதட்ட 60 கிராமங்களை விழுங்கி இன்று பிரமாண்டமாய் எழுந்து நிற்கிறது, இன்று கிட்டதட்ட 80லட்சம் மக்கள் வாழும் நகரம், ஆசியாவின் குறிப்பிடதக்க நகரங்களில் ஒன்று


பகை நாடுகளின் பெரும் இலக்குகளில் சென்னையும் ஒன்று, சில நாடுகளின் ஏவுகனைகளின் நுனி சென்னை நோக்கியே திருப்பபட்டு நிற்கிறது. அது அவ்வாறாக இருப்பதில் கொழும்பிற்கும் மகிழ்ச்சி.


சென்னையும், அதற்கு காரணமான ஜார்ஜ் கோட்டையும் பல ஆபத்துக்களை கடந்துள்ளன், பாண்டிச்சேரி பிரென்ஞ் கவர்னர் டூப்ளேவிற்கு அதன் மீது ஒரு கண், பதிலுக்கு வெள்ளையர் அவர் முதுகை உடைத்துவிட்டார்கள், ராபர்ட் கிளைவ் எத்தனையோ போர்களுக்கு அங்கிருந்துதான் திட்டமிட்டான், உத்தரவு கொடுத்தான்.


மாவீரன் மருதநாயகம் பிரெஞ்ச் படைகளை விரட்டி அதனை மீட்டு தான் தன் வீரத்தினை நிரூபித்துகாட்டினான்.


முதலாம் உலகப்போரின் போது உலகை மிரட்டிய ஜெர்மனியின் நீர்மூழ்கி எம்டன் சென்னை கோட்டையை குறிவைத்து தாக்கியது,(அந்த கல்வெட்டு இன்றும் உண்டு), முதலும் கடைசியுமாக சென்னை மீது நடந்த ராணுவ தாக்குதல் அது, அதன் பின்னர் ஆபத்தில்லை


ஆனால் ஆபத்து மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படும் பொழுது எழுந்தது, சென்னை எங்களுக்கு சென்னை வேண்டும் அல்லது சண்டிகர் போல பொதுநகராக இருக்கலாம் என போராடினர் தெலுங்கர்கள், கிட்டதட்ட அவர்களுக்கு சாதகமான சூழல், அன்றேல்லாம் ஐதராபாத் சிறு நகரம், விசாகபட்டினம் தூத்துக்குடி அளவிற்கே இருந்தது, விடமாட்டோம் என பிரளயம் செய்தனர் தெலுங்கர்கள்.


"எங்க இருந்த என்ன இந்தியாவில தான இருக்குண்ணேன்??" என காமராஜர் சிந்திக்க, "வெங்காயம் அப்படியும் அது திராவிடநாட்டிலதான இருக்கு" என்று பெரியாரும் ஒதுங்கிகொண்டனர்,அண்ணாவோ பணம் படைத்த பெரியாரை எதிர்த்து என்ன செய்ய என சிந்தித்த காலம், கருணாநிதி அன்று கலைஞர் அல்ல, ஆனால் அறியபட்ட வசனகர்த்தா, அவர் என்ன ஆகபோகின்றார் என்பது அவருக்கே தெரியாத காலம், போராட யாருமில்லை,


ஒரே ஒருவரை தவிர அவர் ம.பொ.சிவஞானம், தமிழரசு கட்சி நிறுவணர்


அண்ணன் சீமான் தான் முதலில் தமிழர் கட்சி கண்டவர் ,ஆதித்தனார்தான் வழிகாட்டி என யாராவது சொன்னால் அவர்களை அப்படியே ராஜபக்ஸேவிடம் ஒப்படைப்பது அவருக்கு நலம், அரசியலையாவது கற்பிப்பார்.


பலர் தமிழியக்கம் நடத்தினர் அவரில் சிலப்பதிகாரத்தை கரைத்து தெளித்த "சிலம்பு செல்வர்" என அறியபட்ட ம.பொ.சி பிரசித்தம், அவரை விட அவர் மீசை பிரசித்தம், அண்ணாவின் மயக்கும் தேன் தமிழில் சற்று மங்கிபோனவர் ம.பொ.சி.


ஆனால் தமிழரின் எல்லையை காத்த போராட்டம் இவரால் மட்டும்தான் நடைபெற்றது, அவரின் எழுச்சியான போராட்டத்தில் சென்னை தமிழகத்திற்கு வந்தது, திருத்தணியும் வாங்கிகாட்டினார், திருப்பதி முதல் திருஅனந்தபுரம் வரை தமிழரின் எல்லை என முழக்கமிட்டார்.


திரு என்பது தமிழ்பெயர் அது தமிழனுக்கே சொந்தமான அடையாளம், என ஆதாரத்தோடு அவர் முழங்கிய முழக்கம் கொஞ்சமல்ல‌


திருப்பதியும் உங்களுக்கா என தெலுங்கள் பொங்கி தற்கொலை முயற்சி வரை சென்றனர், "தேவுடா" தமிழகம் வர மறுத்தார் அங்கே தங்கிவிட்டார், கொஞ்சம் தமிழகம் போராடியிருந்தால் திருப்பதி கிடைத்திருக்கும்,இந்து அறநிலையதுறை அமைச்சருக்கு போரே நடந்திருக்கும்.( பல ஊழலும் நடந்திருக்கும் ), கிடைக்கவில்லை அதுவும் நல்லது.


தந்திரமாக கேரளம் முந்திகொண்டு திருவனந்தபுரம் எங்கள் தலைநகர் என்றது, நிச்சயமாக அன்று அது அவர்கள் தலைநகராக இருக்க சம்பந்தமில்லாதது, அரசியலில் முந்திகொண்டார்கள், அதுவும் பரவயில்லை, இல்லை என்றால் பதமநாபசாமி கோயில் என்ன ஆகியிருக்குமோ, சுரங்கம் அமைத்து தூக்கியிருப்பார்கள், மணலையே விடாத தமிழகம் இது.


சினிமா ஸ்டூடியோக்கள் கூட சென்னையை நம்பாமல் சேலத்தில்தான் அக்காலத்தில் கட்டபட்டன, முதன் முதலில் துறைமுகமாக மட்டும் அறியபட்ட சென்னை கொஞ்சம் கொஞ்சமாக எல்லா தொழிலின் சந்தையாக‌ மாறிற்று, இன்று சென்னையின் நிலை வேறு, தமிழகத்தின் எல்லா கிராமங்களிலிருந்தும் அதனோடு நேரடியாகவோ இல்லை மறைமுகமாகவோ தொடர்பில்லாதவர் யாருமில்லை.


மக்கள் தொகை பெருக,பெருக சில பிரச்சினைகளும் பெருகும், அதனில் சென்னை சிக்கி இருக்கலாம், ஆனால் சில சிறப்புக்கள் சென்னைக்கு எப்போதும் உண்டு.


சாதிய கலவரமோ, இல்லை மத,இன‌ ரீதியான வன்முறைகளிலோ சிக்காத இந்திய நகரங்களில் சென்னையும் ஒன்று, கல்கத்தா,மும்பை என பெருந்தீ எழும்பி தாண்டவமாடிய நகரங்கள் உண்டு, சென்னை அப்படியல்ல, அதன் மக்களும் அப்படியல்ல,


இதுதான் சென்னை இக்காலம் வரை பதித்திருக்கும் முத்திரை.
மயிலாப்பூர் கோயில், கபாலீஸ்வரர் ஆலயம், சாந்தோம் ஆலயம், தாமஸ் மலை,விக்டோரியா ஹாலும் அதிலுள்ள ரவிவர்மனின் ஓவியங்கள், எழும்பூர் மியூசியம், பல தலைவர்கள் வாழ்ந்த இல்லம், விவேகானந்தர் தங்கிய இல்லம், ரோஜா முத்தையா நூலகம், அழகான கடற்கரை, சமாதிகள், ரயில் நிலையங்கள், காமராஜரை தவிர எல்லா முதல்வர்களையும் தமிழகத்திற்கு தந்த ஏ,வி.எம் ஸ்டூடியோ, என இன்னமும் ஏராள பெருமை கொண்டிருந்தாலும்


முதல் அடையாளம் அந்த கோட்டையே.


அந்த கோட்டை இன்று ராணுவத்திற்கு சொந்தமானது, தமிழக அரசிற்கு தனியாக தலமைசெயலகம் வேண்டும் என்று கலைஞர் ஒரு கட்டடம் கட்டினார், ஆயிரம் சர்சைகள் இருந்தாலும் கட்டடம் அமைப்பதிலும், சிலைகள் அமைப்பதிலும் கலைஞர் எடுத்துகொள்ளும் முயற்சி வியப்புக்குறியது, அது பாஞ்சாலங்குறிச்சி கோட்டையோ?, வள்ளுவர் கோட்டமோ? அல்லது சிலையோ? அவரின் அந்த அக்கறை பாராட்டதக்கது.


காலமாற்றமோ அல்லது ஏதும் நிர்பந்தமோ மாமல்லபுரம் கடற்கரை கோயில் போல ஒரு அழகான கட்டடம் நவீன மாடலில் அமைப்பார் என எதிர்பார்த்திருந்த பொழுதுதான் இந்தியன் ஆயில் எண்ணெய் குடோன் மாடலில் ஒன்றை கட்டினார்கள், உறுதியாக அவர் முழுமனதோடு அதனை ஏற்றிருக்கமாட்டார், அவரின் ரசனை அப்படி அல்ல.


அதுதான் இனி தமிழக தலையெழுத்தினை நிர்ணயிக்கும் பாற்கடல் என தமிழக மக்கள் நினைக்க ஆட்சி மாறியது, முன்னாள் எதிர்கட்சி என்றாலும் எதிராகத்தான் செய்யவேண்டும் என்பதல்ல அதிரடியாகவும் செய்யலாம், மறுபடியும் சென்னை கோட்டை இழந்த ஆட்சிபீடத்தினை பெற்றது.


அங்கு தமிழத்திற்கான திட்டங்களை எப்படி தீட்டுகின்றனர் என தெரியவில்லை, மிக‌ நன்றாக நடக்கிறது என தெரியவேண்டுமானால் ஜெயா டிவி பார்க்கலாம், பெரும் ஜனநாயக படுகொலை நடக்கிறது என்று பார்க்கவேண்டுமானால் சன் டிவி, கேப்டன் டி.வி பார்க்கலாம்,


இன்று திருவிழா கொண்டாடும் தமிழக தலைநகர மக்களுக்கு நமது வாழ்த்துக்களை தெரிவிப்போம், வெளிநாடுகளில் ஒருவன் தமிழரென்றால் அவர்கள் கேட்கும் கேள்வியே "உனக்கு சென்னையா?" என்பதுதான்.


இது நல்ல துறைமுகம் என கண்ட போர்த்துகீசியரும், கோட்டை அமைத்து சென்னைக்கு அடிகோலிய பிரிட்டிசாரும், அதனை குறிப்பிட்ட இடமாக மாற்றிய ராபர்ட்கிளைவும் (கிளைவின் திருமணம் சென்னை கோட்டையில்தான் நடந்தது), அதனை மாதிரி நகரமாக திட்டமிட்டு கொடுத்த லார்டு ரிப்பனும், பின்னாளில் அதனை தமிழரின் தலைநகராக மாற்றி தந்த ம.பொ.சியும் ஏனோ மனதில் வந்து வந்து போகின்றார்கள்.


இவர்கள் இல்லாவிட்டால் தமிழகத்தில் சென்னையோ, இல்லை சென்னையில் தமிழர்களோ ஏது??

No comments:

Post a Comment