Tuesday, August 30, 2016

மலேசிய சுதந்திர தினம் : 31 ஆகஸ்ட்



Image may contain: sky, skyscraper and outdoor


நாளை மலேசிய சுதந்திர தினம்,வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட நாடு விட்டது.


ஆசிய காலணிகள் எல்லாம் விடுதலைபெற்றபோது அவர்களும் பெற்றார்கள், அதாவது இரண்டாம் உலகப்போர் முடிந்து இந்தியா போன்ற யானைகளை அவிழ்த்துவிட்ட வெள்ளையன் , மலேசியா போன்ற கன்றுகுட்டிகளையும் சுதந்திரமாக விட்டான்


மலேசியா வெள்ளையன் காலத்தில் தன்னை உருமாற்றிகொண்ட நாடு, வளர்ந்துகொண்டே இருந்தார்கள், இந்தியா அளவு பெரும் சுதந்திர போராட்டம் நடந்ததாக சொல்லமுடியாது, ஆனால் மலேசிய நலன்களை பெற அவர்கள் தவறியதே இல்லை, அதற்காக கட்சிகளும் சங்கங்களும் இருந்தன.


இந்தியா அவ்வகையில் சுதந்திரத்திற்கு பெரும் போராட்டம் நடத்தியது, ஆனால் ஆனந்த சுதந்திரம் கிடைத்ததும் நாம் தூங்கிவிட்டோம், இன்னும் எழவில்லை.


அதாவது சுதந்திரம் மட்டும் போராட்டமல்ல, கிடைத்த சுதந்திரத்தில் நாட்டை நாடாக வைத்திருக்க தினமும் போராட்டம் தேவை, விழிப்பு தேவை.


மலேசியர்கள் அப்படி சுதந்திரத்திற்கு பின்பே கடுமையாக போராடி அந்நாட்டின் நற்பெயரினை நிலைக்க செய்துகொண்டிருக்கின்றார்கள்.


வெள்ளையன் காலத்தில் உச்சத்தில் இருந்து இன்று தரித்திர தேசமாக மாறிவிட்ட எத்தனையோ நாடுகள் உண்டு.


ஆனால் மலேசியா அவ்வகையில் தொடர்ந்து தன் நிலையினை தக்க வைத்தே வருகின்றது.


இந்நாடு எதிர்கொண்ட சவால்கள் கொஞ்சமல்ல, ஆனால் மக்கள் ஒற்றுமையாக தேசம் எதிர்கொண்ட சவாலை எல்லாம் முறியடித்தார்கள்.


சுதந்திர தொடக்கத்தில் கம்யூனிச போராளிகள் பெரும் சவால், தைரியமாக எதிர்கொண்டார்கள், அதில் முழுவெற்றி பெற்றார்கள். சிங்கப்பூருடன் சர்ச்சைகள் வந்தபொழுது தனியாக பிரித்துகொடுத்து அமைதி காத்தார்கள்.


விட்டுகொடுத்தார்கள், இதோ இருவருமே வாழ்கின்றார்கள். இலங்கை போல யுத்தம் நடத்தி பின் தங்கவில்லை அல்லது இந்தியா பாகிஸ்தான் போல பெரும் ராணுவம் திரட்டி வன்மம் வளர்க்கவில்லை, அமைதி அவர்களை வாழவைக்கின்றது


அதன் பின் செயற்கை ரப்பர் வந்து அவர்கள் பொருளாதரமான ரப்பரை அடித்தது, அதனை பாமாயிலுக்கு மாறி தாக்கு பிடித்தார்கள்.


தாதுமணல் சுரங்கங்களால் சுற்றுசூழல் பிரச்சினை வந்தபொழுது அதனை மூடிவிட்டு தொழில்துறையால் ஈடுகட்டினார்கள்.


எல்லா பிரச்சினைகளையும் எதிர்கொண்டு, போராடிவென்று நிற்கின்றார்கள் என்றால் அதன் முதல்காரணம் மக்களும், அவர்களை காத்து நிற்கும் அரசாங்கமும்.


அரசும் மக்கள் மேல் வைத்திருக்கும் அக்கறை கொஞ்சமல்ல, மக்களின் வாழ்க்கையினையும் அவர்கள் பாதுகாப்பினையும் அரசாங்கம் உறுதிசெய்துகொண்டே இருக்கும், எல்லா வகைகளிலும்.


உதாரணம் ஒருவனுக்கு டெங்கு என வந்து அது மருத்துவமனையில் உறுதிசெய்யபட்டால் சுகாதாரதுறைக்கு தெரிவிக்கபடும்.


அவர்கள் வீட்டிற்கே வந்து அதன் சுத்தம், நீர் வடிகால் என எல்லாம் சோதிப்பார்கள், அப்படி அவ்வீடு நோய்களின் கூடாரம் என்றால் வீட்டுக்காரருக்கு கடும் அபராதம்.


ரெஸ்டாரண்டுகளின் சமையல் கூடம் கூட அடிக்கடி சோதனைகு உட்படுத்தபடும்.


இதுபோன்ற ஏராளமான விஷயங்களை சொல்லலாம், இரவில் மட்டும் செய்யபடும் சாலை பராமரிப்பு, மின் தடங்கல் என்றால் ஜெனரேட்டர் கொடுத்து மக்கள் வாழ்க்கை பாதிக்கபடாத வசதி கொடுப்பது, குடிநீர் பாதுகாப்பு என விழுந்து விழுந்து பராமரிக்கின்றது அரசு.


அதனால்தான் எல்லாம் முறையாக இயங்குகின்றன, முடுக்கு தகறாறு, வரப்பு தகறாறு , வம்புகளுக்கு எல்லாம் மக்களுக்கு வாய்பில்லை


மக்களும் அரசினை கண்காணித்துகொண்டே இருக்கின்றார்கள், எல்லோர் வீட்டிலும் காலை 5.30 மணிக்கெல்லாம் செய்திதாள் விழுகிறது.


எல்லோரும் அரசினை பற்றிய விழிப்புடனே இருக்கின்றார்கள். அரசும் ஒரு சலசலப்பு ஏற்பட்டாலும் மக்கள் குரலுக்கு செவிசாய்க்க தயங்குவதில்லை.


மூவினங்களுக்கும் எல்லா பிரதிநிதித்துவமும் கிடைப்பதில் கவனமாக இருப்பார்கள், அரசு முதல் எல்லா இடங்களிலும் எல்லா சர்விகிதமும் சரியாக இருக்குமாறு பார்த்துகொள்வார்கள், மத கொண்டாட்டமும் அப்படியே


உலகிலே தைபூசத்திற்கு விடுமுறை அளித்திருக்கும் நாடு இது ஒன்றே, அந்த அளவு மன உணர்வுகளை மதிக்கின்றார்கள்.


எல்லா மக்களும் கல்வி பெறவும், எல்லா மக்களுக்கும் வேலை கொடுப்பதிலும் அரசு கருத்தாக இருக்கின்றது, காலியிடங்களை வெளிநாட்டு பணியாளர்களை கொண்டு நிரப்புவதிலும் அது உதவுகின்றது.


நாம் பாகிஸ்தானை பார்த்து ஒப்பீட்டுகொள்வது போல அல்ல இவர்கள், மக்களுக்கு மேல்நாட்டு அரசுகள் எப்படி வசதி செய்துகொடுக்கின்றன என்பதில் கருத்தாக இருப்பார்கள். அது நவீன ரயிலோ, பேருந்தோ இன்ன பிற வசதிகளோ


அங்கு அறிமுகமான கொஞ்ச்நாளில் இங்குள்ள மக்களிடம் கொண்டு சேர்த்துவிடுவார்கள். எது எப்படி போனாலும் நாடு நவீன மயத்தில் தன்னை மேம்படுத்தி கொள்ளவேண்டும். மேல்நாட்டு மக்களுக்கு தங்கள் மக்கள் பின் தங்கிவிட கூடாது எனும் அசாத்திய கவனம், அக்கறை.


ஒரு ஐரோப்பிய வெளிநாட்டவன் வந்தால் அவன் சொந்த நாட்டிற்கும் இந்த ஊருக்கும் எந்த வித்தியாசமும் கண்டுவிட கூடாது என கவனமாக அமைக்கபட்டிருக்கும் நகரம் இது.


அதனால்தான் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்லும் மலேசியர்கள் கொஞ்சநாளில் தாயகம் திரும்புகின்றனர், காரணம் பணமதிப்பு பெரும் வித்தியாசமில்லை, ஒரே வித்தியாசம் குளிர்ம்ட்டுமே.


நான் பார்த்து சிலாகிப்பது ஒரே ஒரு விஷயம், மக்கள் மகா சுதந்திரமான வாழ்வு வாழ்கின்றனர். தனிபட்ட சுதந்திரத்தினை கொண்டாடி தீர்க்கின்றனர். ஆனால் எது அதன் எல்லை என்பது தெரிகின்றது. சமூக அமைதி என்பதை பெரிதும் விரும்புகின்றனர். அது பொதுஇடங்கள் முதல் எல்லா இடங்களிலும் தெரிகின்றது. நெரிசலில் ஒரு ஹாரன் சத்தம் கூட கேட்காது.


அழகான நாடு, அழகான சாலைகள். போக்குவரத்து நெரிசலில் கூட அழகு தெரிவது அங்கேதான். நூல் பிடித்தது போல அழகான நேர்த்தியான வரிசையில் வாகனம் நிற்கும்.


மக்களுக்கு தங்கள் பொறுப்பு தெரிகின்றது. எந்த இனமானாலும் புன்னகை பூத்த முகத்துடன் தாங்கள் மலேசியர் என்றே பெருமை கொள்கின்றனர். புன்னகை பூத்த மக்கள், காவலர்கள் கூட புன்னகைத்தபடியேதான் பணிபுரிவர், ஆனால் குற்றவாளிகளை வேறாகவும், பொதுமக்களை வேறாகவும் அவர்கள் கையாள்கின்றனர். பொது இடங்களில் முகவரி தெரியாதவர்களை மிக கனிவாக உதவுவார்கள்.


வஞ்சமிலா புன்னகை மலேசிய மக்களின் பெரும் அடையாளம், பெரும் பேராசை பொதுவான மக்களிடம் இல்லை. ஒரு வீடு ஒரு வாகனம் ஓரளவு வருமானம் போதும். குழந்தைகளை வளர்க்கலாம் பெரியவர்களானதும் அவர்கள் வாழ்க்கை அவர்கள் கையில், அவர்களும் அரசு கடனோ சொந்த உழைப்பிலோ படிப்பார்கள், வரதட்சனை இல்லை, பேராசை இல்லை பின் என்ன?


பணம் இருக்கின்றதா உலகம் சுற்றுவார்கள், ஜப்பான் முதல் கனடா வரை சுற்றி கொண்டாடுவார்கள், கடைசி காலத்தில் அமைதியாக கண்மூடுவார்கள்


எனக்கு தெரிந்த ஒரு வடைசுடும் பாட்டி உலகெல்லாம் சுற்றி இருக்கின்றார், கிழக்காசிய நாடு எல்லாம் சுற்றியாகிவிட்டதாம், சமீபத்தில் ஐரோப்பா பார்த்துவிட்டாராம், இனி கனடா செல்லவேண்டுமாம். அவரது பணியாள் ஒரு இந்தோணேஷிய பெண். அவரையும் கூட்டிகொண்டே செல்வாராம்.


அவருக்கு மாவாட்டிகொடுத்திருந்தால் கூட நானும் உலகம் சுற்றி இருக்கலாம், என்னசெய்ய அதற்கும் விதிவேண்டும்.


நாட்டு பொறுப்பு நிறைந்த மக்களும், மக்கள் பொறுப்பு கொண்ட நிர்வாகமும் அமையும் பட்சத்தில் ஒரு நாடு எப்படி உயரமுடியும் என்பதற்கு இந்நாடே சாட்சி. அதுவும் பல இன மக்கள், பல சமய மக்கள் எப்படி மகா ஒற்றுமையாக வாழமுடியும் என்பதற்கும் இந்நாடே சாட்சி.


இங்கு எல்லா நாட்டு மனிதர்களும் உண்டு, எல்லா நாட்டு உணவுகளும் உண்டு. ரசித்து பார்க்க அவ்வளவு விஷயங்கள் உண்டு.


எல்லாவற்றையும் புன்னகையால் கடந்து செல்லும் மலேசிய மக்கள் மனதிற்கு மழை அப்படி கொட்டுகின்றது.


அலுவலகம் தோறும், இல்லங்கள் தோறும் அவர்களின் தேசியகொடி கம்பீரமாக பறக்கின்றது, வானொலி பத்திரிகை எல்லாம் அவர்கள் கடந்துவந்த பாதைகளை, மக்கள் பொறுப்பினை சொல்லிகொண்டே இருக்கின்றார்கள், அப்படி ஆவணபடுத்தி இருக்கின்றார்கள்.


நிச்சயமாக சொல்லலாம் பல இனம் கலந்து வாழும் நாடு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு அவர்களே சாட்சிகள், எடுத்துகாட்டுகள்.


எனக்கு தெரிந்த ஒரு பெரிய மனிதர் உண்டு, அவரது வாழ்வு பெரும் வரலாறு, அசாத்தியமான ஆச்சரியங்களை கொணடது, அவர் ஒரு சுயசரிதை எழுதினாலே அது பெரும் வரவேற்பினை பெரும்.


90 ஆண்டுகளுக்கு முன்பு 1 வய்து குழந்தையாக மலேயாவிற்கு கொண்டுவரபட்ட குழந்தை அவர், இங்கு தோட்ட தொழிலாளியாக வளர்ந்து பிரிட்டிசாரிடம் கல்வி பயின்றார். 1940 களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் திரட்டிய படையில் அவர்தான் வயதில் சிறியவர், அப்படையில் இணைந்து இந்திய சுதந்திரத்திற்காக‌ போராடியவர்.


நேதாஜியோடு பழகி இன்றுவரை வாழும் வெகுசிலரில் அவரும் ஒருவர்.


பின்னர் ஜப்பான் படை தோற்கவும், பிரிட்டிசாரின் விசாரணைக்கு சென்ற இடத்தில் போலிசாக பணி அமர்த்தபட்டவர்.


அவரது திறமை அவரை உச்சம் கொண்டு சென்றது. கம்யூனிச போராளிகள் காலத்தில் உயிரை பணயம் வைத்து போராடியவர். பெரும் புகழுக்கு சொந்தக்காரர்.


காமராஜர் மலேசியா வந்தபொழுது 1 வாரம் அவருக்கு பாதுகாவலராக இருந்தவர்.மலேசிய தமிழர்களில் காவல்துறையில் பெரும் உச்சமான பதவி வகித்தவர், உலக அளவில் பெயர் பெற்ற காவல்துறை அதிகாரிகளில் ஒருவர்.


இவ்வளவு இருந்தும் துளியும் கவுரவம் கிடையாது, யாழ்பாண தமிழர்களுடன் பழகியதால் ஆங்கில கலப்பின்று மகா சுத்தமான தமிழில்தான் பேசுவார்.


கபாலி படமெடுத்த ரஞ்சித் மட்டும் அவர் கையில் சிக்கினால் அவ்வளவுதான், காரணம் கபாலியில் வரும் வீரசேகரன், டோனி லீ, கபாலி போன்ற ரவுடிகளை நிஜவாழ்வில் ஓட விரட்டிய கமிஷணர் அவர். டைரக்டர் ரஞ்சித் எல்லாம் அவர் முன்னால் பேசினால் பெரும் அவமானம் நிச்சயம்.


இந்திய பெண்ணை திருமணம் செய்ததால் இன்று தமிழ்நாட்டு கிராமம் ஒன்றில் முதியோர் இல்லம் நடத்தி தன் காலங்களை அமைதியாக கழித்துகொண்டிருக்ககின்றார்


அவரிடம் பேசும்பொழுது அங்கு வாழ்ந்துவிட்டு இங்கு வாழ சிரமாக இல்லையா? இங்கிருந்து வெளிநாடு சென்றவர்கள் இங்குவர விரும்புவதிலையே உங்களால் எப்படி என கேட்டால் சொல்வார், "அது வேறு நாடு அதன் அமைப்பு, யதார்த்தம் அப்படி. இது வேறுமாதிரியான நாடு இதன் தன்மை வேறுமாதிரி, இரண்டையும் குழப்ப கூடாது.


இரண்டாம் உலகபோரின்பொழுது மலேயா கடுமையாக பாதிக்கபட்டது, அதன் பின் எழும்பியது. பொதுவாக பிரிட்டிசார் அடிப்படை அமைப்புக்களை அழகாக அமைப்பார்கள், மலேசியா அதனை தொடர்ந்து புதுப்பித்துகொண்டது, இந்தியா அதனை செய்ய தவறிவிட்டது, இங்கு ஆயிரம் சிக்கல்கள், வேறுமாதிரியான பிரச்சினைகள்.


இரு நாடுகளை ஒப்பிட்டு பார்க்காதே அது சரியல்ல, சமூக அமைதியும் விட்டுகொடுத்தலும் மகா அவசியம், சிங்கப்பூர் மலேயா அப்படித்தான் அமைதியாக் வாழ்கின்றன, இரண்டும் பகை நாடுகள் அல்ல, இருவரும் ராணுவத்திற்கு செலவழிப்பவர்கள் அல்ல‌.


ஆனால் பாகிஸ்தானும் இந்தியாவும் அதில்தான் தங்கள் பணத்தினை செலவளிக்கின்றன, அதுவும் 10 வருடம் முன்பு வாங்கிய ஆயுதம் இன்று பழையதாகிவிடும், வாங்கிகொண்டே இருக்கவேண்டும், பின் எப்படி தேசம் வளரும்?


அவர் சொல்லிகொண்டிரும் போதே அவர் வீட்டு அலமாரியில் உள்ள மலேசிய கொடி கம்பீரமாக தெரியும்.


உண்மைதான் பிரிட்டிசார் எங்கும் பிரிவினை வைத்தே ஆண்டனர், இந்தியாவில் இந்து முஸ்லீம், இலங்கையில் தமிழர் சிங்களர், பர்மாவில் தமிழர் பர்மீயர் என அவர்கள் அரசியல் அப்படி இருந்தது, பின்னாளில் மலேசியாவும் அப்படியான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தது.


பர்மா சீரழிந்துவிட்டது, இலங்கை விவகாரம் உலகறிந்தது, இந்தியா பாகிஸ்தான் மகா பிரசித்தம்.


ஆனால் அசால்ட்டாக தாண்டி இன்று நாடுகளை விட முண்ணணியில் தன் மக்களை வாழ்வாங்கு வாழ வைக்கின்றது மலேயாவும் சிங்கப்பூரும்.


அதனைத்தான் நினைத்தாலே இனிக்கும் படத்தில் பாடலாக வைத்தார் கவியரசர்," நண்பர் உண்டு , பகைவர் இல்லை. நன்மை உண்டு தீமை இல்லை" என அந்நாடுகளை அழகாக பாடலில் வைத்தார்


சுதந்திர தினத்தினை கொண்டாடும் அவர்கள் பெருமிதத்தோடு கொண்டாடுகின்றார்கள், இன்னும் போராடி அவர்கள் காத்துகொண்டிருக்கும் பெருமையான அவர்கள் கொடி எல்லா இடங்களிலும் பறக்கின்றது.


தெய்வீக கவிஞர் கண்ணதாசனின் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" பாடல் மனதோரம் ஒலிக்கின்றது, அவ்வளவு அர்த்தமுள்ளதாக அவர் எழுதியிருப்பார்.


மலேய மக்களின் மனமும் நாட்டின் செழுமையும் அப்படி சொல்லியிருப்பார் அவர்.


அந்த பாடல் எல்லா காலமும் பொருந்திவருகின்றது என்பதுதான் மகிழ்ச்சிகுரியது, அவர்கள் நாட்டிற்காக அவர் எழுதிய அற்புதமான பாடல்.


எனக்கு மிக பிடித்தபாடலும் அதுவே, காரணம் ஜெயபிரதா அப்பாடலில் நடித்திருக்கின்றார.















1 comment:

  1. அருமை...வாழ்க மலேசியா..நம் நாடே நம் சொத்து....

    ReplyDelete