தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தலித் சமுதாயத்தைச் சேர்ந்த கலைச்செல்வி சாதி வெறியர்களால் கொல்லபட்டிருக்கின்றாள்
இதிலெல்லாம் தீண்டாமை, ஒதுக்கி வைத்தல் போன்ற கொடுமைகளை கயவர்கள் செய்வதில்லை, இந்த விஷயத்தில் என்ன மனநிலை அவர்களுக்கு? தாழ்த்தபட்ட பெண்கள் என்றால் அது ஒரு ஜடம், எங்களுக்கு வேண்டும், அவ்வளவுதான் ஆடு போல அறுத்துவிடுவோம்
அந்த மனநிலையில் மட்டுமே இப்படி ஆடிகொண்டிருக்கின்றார்கள்.
சென்னையில் சரிகா ஷா செத்தால் தேசம் கொந்தளிக்கும், சுவாதி எனும் பிராமண பெண் கொல்லபட்டால் சட்டம் ஒழுங்கு என பொங்கிவிடுவார்கள், அதாவது உயர் குல பிறப்பாக இருக்கவேண்டும், கொடுமை நடக்கும் இடம் தலைநகராக இருக்கவேண்டும் இல்லாவிட்டால் அவ்வளவுதான்
அதுவும் டெல்லி மருத்துவ கல்லூரி மாணவி என்றால் அவ்வளவுதான் உலகம் திரும்பி பார்க்க வைப்பார்கள்
அந்த சாலியமங்கலம் அபலை மக்கள் சாதாரணமாக சொல்கின்றனர், இது வழக்கமாக நடப்பது, நாங்கள் என்ன செய்ய முடியும்?
அவர்கள் ஒன்றும் செய்யமுடியாது, எதிர்க்க வலு இல்லாதவர்கள் என்ன செய்வார்கள், அழத்தான் முடியும். ஆனால் அவர்களை காக்கும் பொறுப்பு அரசுக்கும் உண்டு, ஊடகங்களுக்கும் உண்டு
தமிழக ஊடகங்களை நாம் கண்டிக்க காரணமே இதுதான், இதனை எல்லாம் எழுதி என்ன ஆகபோகின்றது, எங்காவது மூலையில் போடவேண்டிய செய்தி, நமக்கு என்ன லாபம் எனும் லாப நோக்கு
அரசு இறங்காது, காரணம் அது வோட்டு அரசியல், ஆனால் ஆட்சிக்காக இதனை எல்லாம் அனுமதித்துதான் அரசு நடத்தவேண்டும் என்றால்...
உண்மையில் இந்த குற்றவாளிகளை பிடித்து தூக்கில் இட்டால் கூட, யார் குற்றம் என்பார்கள்? எனது சாதிக்காரன் அப்படித்தான் செய்வான் என்றால் அவனையும் தூக்கலாம், என்ன நடந்துவிடும்? ஒன்றும் நடக்காது, அரசின் பெயர் கால காலம் நிற்கும்.
இவர்கள் செய்வார்களா என்று நமக்கு தெரியாது, ஆனால் மாவட்ட ஆட்சிதலைவர் போன்ற அதிகாரிகள், பெரும் அதிகாரிகள் தலையிட்டு சிறப்பு குழுக்களை அமைக்க சொல்லலாம்
எத்தனையோ நல்ல பொதுநல வழக்கறிஞர்கள் உண்டு, அவர்களில் ஒருவர் களமிறங்கலாம், என்ன வந்துவிடும்? எல்லா சாதியிலும் நல்லவர்களும் இருப்பார்கள், அது உண்மை, அவர்கள் பாதுகாப்பு தருவார்கள்.
ஒரு நல்ல முடிவு கிடைக்கும் பட்சத்தில் எங்கோ அடுத்த பெண் பாதுகாக்க படுவாள், அல்லது இன்னொரு பெண்ணை எங்கோ இழக்க நாம் தயாராகிகொண்டிருப்போம்
அரசு களமிறங்கவேண்டிய நிலைதான், என்ன செய்யுமோ?. ஊடகங்கள் இதனை பெரு செய்தியாக காட்டவேண்டிய விஷயம்தான் செய்வார்களா?
இதனை எல்லாம் காணும்போது காமராஜர் ஆட்சியில் இம்மாதிரியான சில சம்பவங்களுக்கு அவர் எடுத்த சில அதிரடிகளும் நினைவுக்கு வருகின்றன
பல நடவடிக்கைகளை அவர் மறைமுகமாக எடுத்தார், அதனால் குறிப்பிட்ட இனத்திற்கு எதிரானவர் என அவர் முத்திரையும் குத்தபட்டார், பெரும் கலவரமும் அரங்கேறிற்று
அவர் கொஞ்சமும் அஞ்சவில்லை அசரவுமில்லை. அதெல்லாம் சேர்ந்து அவர் தோற்கடிக்கபட்டாலும் இன்றுவரை தாழ்த்தபட்ட மக்களுக்காக அவர் எடுத்த அந்த வீரமிகு நடவடிக்கைகள் போற்றதக்கவை
அவர் ஆட்சியும் அந்த காட்சிகளும் நினைவுக்கு வந்தே போகின்றன.
அந்த அளவு வேண்டாம், அதில் ஒருபங்கு போதும்.
அந்த ஒரு பங்கினையும் எடுக்காமல் இம்மாதிரியான கொடுமைகள் யார் ஆட்சியில் தலைதூக்கின என்பது தெரியாததல்ல, சொன்னால் எம் பொன்மன தலைவனை சொன்னாயா? என சீறுவார்கள், அவர் செய்த புரட்சி இதுதான்.
அவர்கள் நமது பெண்கள், இந்நாட்டு குடிமக்கள் அவர்களுக்கு நீதி வழங்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு, உண்மைகளை எடுத்து சொல்லும் கடமை ஊடகங்களுக்கு உண்டு
சாதி மறந்து பெண்மையினை தாயாய் மதித்து காக்கும் கடப்பாடு நம் எல்லோருக்கும் உண்டு,
இந்த நாட்டில் நடந்த, அதுவும் நமது தமிழகத்தில் நடந்திருப்பது நாமெல்லாம் வெட்கி தலைகுனிய வேண்டிய நிகழ்வு.
இல்லாத சாதி வீரத்தை அந்த அபலை பெண்களிடம் போய் காட்டிய அந்த மனநலம் குன்றிய கும்பலை தமிழகத்திற்கு அடையாளம் காட்டவேண்டிய பொறுப்பில் காவல்துறை இருக்கின்றது.
இந்த தேசத்தின் ஏழை குடிமகனாக அப்பெண்ணின் தந்தை கதறும் காட்சியினை கடந்து செல்ல முடியவில்லை. பெரும் சோகம்
No comments:
Post a Comment