Friday, April 28, 2017

முப்பாட்டன் உ.வே.சாமிநாதய்யர்




[caption id="" align="aligncenter" width="476"]Image may contain: 1 person Enter a caption[/caption]

முப்பாட்டன் உ.வே.சாமிநாதய்யர்.


பொதுவாக தமிழக ஓட்டுபொறுக்கும் அரசியல்வாதிகளால் ஒரு பலமான கருத்து பரப்பபடும், கடந்த 60 ஆண்டுகால அரசியலில் அது பெரும் கோஷம்.


எல்லோருக்கும் தெரிந்ததுதான், பிராமணர்கள் தமிழர்களின் எதிரிகள். பிராமணர்கள தமிழை அழிக்கநினைப்பார்கள். தமிழ் வாழ்க, பிராமணன் ஒழிக. தமிழ் என்ற வார்த்தை தமிழர்,திராவிடர் என்றெல்லாம் மாறி ஒலிக்கும்.


இப்படிஎல்லாம் கோஷம் எழுப்புபவர்கள் தமிழுக்கு என்ன செய்தார்கள் என நாம் கேட்க கூடாது, கேட்டால் கல்தோன்றி என தொடங்கி, பாவேந்தர் பாடலில் வந்து ஈழம் சென்று முஷ்டி உயர்த்தி நிற்பார்கள். இவர்களின் தமிழ்பற்று பிராமணனை விரட்டுவது, சிங்களனை விரட்டுவது, வடநாட்டு மக்களை, கன்னடனை, தெலுங்கனை, மலையாளியினை பகைவனாக சித்தரிப்பது இவைகள்தான் இவர்களின் தமிழ்பற்று.


பிராமணர்கள் தமிழக எதிரிகள் என்பார்கள், தமிழர்களை அடிமைபடுத்தினர் என்பார்கள், சரி, எந்த பிரமண அரசன் தமிழர்களை ஆண்டான் என கேட்டால் சொல்ல தெரியாது. காரணம் எந்த தமிழ் அரசனும் பிராமணன் இல்லை.


ஆனால் புலவர்களில் பலர் பிராமணர்களாயிருந்து தமிழ் வளர்த்திருக்கின்றனர் என்பதை அவர்களாலும் மறுக்கமுடியாது, இப்படி எல்லாம் கேள்விகேட்டு, பின் எப்படி பிராமணர் தமிழ் எதிரியாயினர் என்றால், ஹி ஹி ஹி என சென்றுவிடுவார்கள்.


தமிழை மிக தீவிரமாக வளர்த்தவர்கள் யாரென்றால் தொல்காப்பியர் அகத்தியர் முதற் சங்ககாலம் என அக்காலங்கள் கடந்தபின் தமிழினை வளர்த்து தீரா அடையாளம் கொடுத்தவர்கள் பவுத்த துறவிகள் அதன் பின் சமணதுறவிகள்.


சீவகசிந்தாமணி,சிந்தாமணி எல்லாம் அதனைத்தான் சொல்கின்றன. சமணர்கள் தமிழுக்கு ஆற்றியதொண்டும் மறக்கமுடியாதது.


அப்படியாக பிராமணர்களிலும் மிக உயர்ந்த தொண்டாற்றியவர்கள் உண்டு, சம்பந்தர் காலம் மாணிக்கவாசகர் காலம், பரிமேலழகர் காலம் என அக்காலங்களை விடுங்கள், அதன் பின் வந்த அருணகிரிநாதர், காளமேகபுலவர் என தமிழ்வளர்த்த பிராமணர்களின் வரிசை பெரிது.


தமிழ்சிறந்த பரிதிமாற் கலைஞரும், மகாகவி என உலகம் கொண்டாடும் பாரதியின் தமிழ்தொண்டு உலகறியும், இவர்கள் எல்லாம் அந்த பிராமணர்களே.


பள்ளிகளில்,கல்லூரிகளில் தமிழாசிரியராய் இருந்து அக்காலத்தில் தமிழ்வளர்த்தவர்களில் பெரும்பாலானோர் பிராமணர்கள் என்பதை மறுக்கமுடியுமா? அப்படியான காலத்தில் தமிழ் எப்படி உயர்ந்திருந்தது?


தமிழை காக்கவந்ததாக புறப்பட்ட கழகங்களில் ஆட்சியில் தமிழ் எப்படி சீரழிந்திருக்கின்றது என்பது ஒன்றும் ரகசியமல்ல‌.


உச்சமாக ஓலை சுவடிகளில் அலையும் நிலையிலிருந்த பண்டைய காப்பியங்கலையும், இலக்கியங்களையும் முதன் முதலில் அச்சுக்கு ஏற்றிய பெரும் தமிழ்தொண்டு செய்த உ.வே சாமிநாதய்யரும் பிராமணரே.


இவரின் உழைப்புதான், இவரின் தேடலும் அக்கறையும் தான் இன்று தமிழ்நூல்கள் அச்சுவடிவில் கிடைக்க முழுகாரணம். தொல்காப்பியம் முதல் திருக்குறள்வரை, ஐம்பெரும் காப்பியம் முதல் ஐங்குறுநூறுவரை அவர்தான் அச்சில் ஏற்றினார்.


அன்று இவை தேடுவாரற்று ஆதீனங்களில் ஓலைசுவடிகளாய் கிடந்தன, பாதி அழிந்தும்விட்டது, தமிழறிந்து அதன் முக்கியத்துவமறிந்து ஒவ்வொரு ஆதீனமாய் சென்று அதனை பெற்று பின் தாளில் எழுதி, அச்சுக்கு அனுப்பி ஒரு தனிமனிதனாய் இவர் செய்த சாதனை மிக பெரிது.


500 புத்தகங்களை அச்சுக்கு ஏற்றி, 3000 மேற்பட்ட தமிழ்புத்தகங்களை வெளியிடசெய்து ஒரு தன்னிகரற்ற சேவையினை தமிழ் உலகிற்கு வழங்கிய ஒரு பெரும் கொடையாளி.


தமிழ் உலகம் கொண்டாட வேண்டிய ஒப்பற்ற உழைப்பாளி.


இன்று அவரின் நினைவுநாள், பிராமணனாய் பிறந்துவிட்டதால் தமிழகத்திலிருந்து மறைக்கபட்ட பெரும் தமிழறிவு களஞ்சியத்தில் அவரும் ஒருவர்.


ஆனால் நன்றியுள்ள தமிழர்கள், தமிழினை நேசிப்பவர்கள் அவரை மறக்கமாட்டார்கள். அந்த தமிழனுக்கு, தமிழை நேசித்து இறுதிவரை தமிழுக்காய் வாழ்ந்த அந்த பெருமகனின் நினைவு நாளில் அவரை நினைவு கூர்வோம்.


சுற்றி இருக்கும் இனத்தை எல்லாம் பகைத்துகொள்வதோ, அந்நிய மொழிகளை விரட்டுவதோ மட்டும் தமிழ் உணர்வு ஆகாது. தமிழை நேசிக்க வேண்டும், தமிழுக்காய் உழைத்த தமிழர்களை நன்றியோடு நினைவு கூறவும் வேண்டும்.


அவ்வகையில் தமிழ்தாத்தா என்றழைக்கபடும் இந்த தமிழ் முப்பாட்டனார் நிச்சயம் மறக்கமுடியாதவர்.


அக்காலத்தில் அப்படி தனிமனிதனாக அவர் அந்த ஏட்டுசுவடிகளை காப்பாற்றாமல் விட்டிருந்தால் இன்று நமக்கு திருக்குறளுமில்லை, கம்பனுமில்லை, இளங்கோவுமில்லை, கணியன் பூங்குன்றனுமில்லை.


எல்லா அரும் காவியங்களும் கரையானுக்கு இரையாகி முடிந்திருக்கும். அப்படி தமிழ்கடவுளின் தூதனாக வந்து தமிழ் அறிவு அடையாளங்களை காப்பாற்றிய பெருமகனார் அவர்.


பிராமணீயத்தில் சில குறைகள் இருக்கலாம், ஆனால் பிராமணர்களில் இவரைபோன்ற மாமனிதர்களும் தமிழறிஞர்களும் நிச்சயம் உண்டு.


அந்த தமிழ்முப்பாட்டனுக்கு தமிழ் வணக்கம்..











 


 

No comments:

Post a Comment