Saturday, May 27, 2017

சிறியன சிந்தியாத நேரு



Image may contain: 1 person, smiling, close-up and text


சிறியன சிந்தியாத நேரு


அவர் பெரும் பணக்கார குடும்பத்தின் வாரிசு, உயர் கல்வியும், படோகரமான வாழ்வும் என அவர் வாழ்ந்த விதம் எந்த அரசனுக்கும் குறைவானதல்ல, ஆனால் ஜாலியன் வாலாபாக் படுகொலையும், காந்தியின் ஈர்ப்பும் அவரை போராட்ட களத்திற்கு இழுத்துவந்தன.


9 ஆண்டுகள் சிறைவாசம் ( காமாரஜர் நேரு போன்றவர்கள் எல்லாம் சிறையில் இருந்தவர்கள், யாரேனும் "பாம்புகள் பல்லிகள் நடுவினிலே" என பாடியிருப்பார்கள்), சொந்த பேரனை கூட முதல் முறையாக,சாலையோரத்தில் கூட்டத்தில் ஒருகைகுழந்தையாக காவல்துறை வேனில் இருந்து கை அசைத்து கண்ணீர் விட்டவர்.


அவர் பிரதமரான காலம் மகா சிக்கலனாது, அதாவது பிரிவினை களபேரத்தில் எல்லைகள் எரிய, பிரிட்டன் சிரித்துகொண்டிருந்தது. இன்னும் பல நாடுகளின் ஊடகங்கள் இனி இந்தியா இருக்காது, பல துண்டுகளாக சிதறும் என ஆருடம் சொல்லிகொண்டிருந்தன.


அந்த காலகட்டத்தில் பிரதமரானவர்தான் நேரு, இன்று காணும் ஓரளவு வளர்ந்த ஒருங்கிணைந்த இந்தியாவிற்கான அஸ்திவாரம் நிச்சயம் அவரால்தான் போடபட்டது.


நேருவின் சாதனைகள் நிறைய இருக்க, மகத்தான சாதனை ஒன்று உண்டு, அதில்தான் பாரதம் இன்றளவும் நிற்கின்றது.


அதாவது இந்தியா பல சாதிகளின் அமைப்பு, இந்து மதத்திலும் பாகுபாடு உண்டு. மதவெறி இல்லா ஒரு தாழ்த்தபட்டவன், உயர்சாதிகளின் அட்டகாசத்தை அனுபவபூர்வமாக உணர்ந்தவன் ஒருவன் தான் இந்நாட்டிற்கு சட்டமெழுத முடியும் என அம்பேத்காரிடம் பொறுப்பினை ஒப்படைத்தார்.


சில சீர்திருத்த சட்டங்களை அம்பேத்கார் சொன்னபொழுது, பரிவார அமைப்புக்களும், ஆர் எஸ் எஸ் இயக்கமும் வரிந்துகட்டி எழும்பின. ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் கூட ஏற்க மறுத்தார். மனம் நொந்த அம்பேத்கார் அரசியலை விட்டே விலகினார்.


ஆனால் 1952ல் பிரதமரானவுடன்அந்த திருத்தங்களை சட்டபூர்வமாக்கினார் நேரு. எம்மாதிரி சட்டங்கள்? விதவை பாதுகாப்பு, சாதிய வன்கொடுமை, பல திருமணம் தடை, விவாரத்து உரிமை, இந்து பெண்களுக்கும் சொத்துரிமை, சமய சார்பற்ற இந்திய நாடு என பல உண்டு.


நேரு ஆர்எஸ்எஸ் மோதல் இங்குதான் தொடங்கியது.


நேரு காலத்தில் இந்த நாடு கண்ட பெரும் சவால் உணவு பஞ்சம், அதனை சமாளித்தார், பின் பல அணைகளை கட்டி அவற்றை இந்திய ஆலயங்கள் என்றார். இன்று இந்தியா ஓரளவு உணவில் தன்னிறைவு பெற்றதென்றால் அதற்கு அவரும் காரணம்.


இந்தியாவின் மகா முக்கிய உணவான பால் உற்பத்திக்கு அவர் செய்த முயற்சி உலகறிந்தது. இன்னும் தொழிற்சாலைகளை அமைத்து உற்பத்தியினை பெருக்கியதில் அவர் மகத்தானவர். தமிழகத்தின் மகா முக்கியமான அரசு தொழிற்சாலைகள் எல்லாம் அவரால் அனுமதிக்கபட்டவை.


ஆனாலும் காங்கிரஸ் தமிழகத்திற்கு துரோகம் செய்தது என முழங்குவார்கள். இப்படிபட்ட தொழிற்சாலை, அணைகள் எல்லாம் கொடுத்தது கழகங்களா? அல்லது தமிழ் தேசியமா? இவர்கள் அரசியல் அப்படியானது.


உலகம் இரு பெரும் பிரிவுகளாய் மோத தயாராகும் பொழுது அணிசேரா நாடுகள் எனும் அவரின் உலக நடவடிக்கை கடும் பிரசித்தி பெற்றது. உலக தலைவர்களில் ஒருவராக மதிக்கபட்டார். இந்தியா மேலும் உடையாமல் காத்த பெரும் திறமையாளர் என் உலகம் அவரை சொன்னது.


காஷ்மீர் பிரச்சினையினை முதலில் ஐ.நா வாக்கெடுப்புக்கு கோரினார், ஆனால் குஜராத்தின் ஜூனாகத்தில் முஸ்லீம் அதிகமாயினும் இம்மாதிரி வாக்கெடுப்பில் அவர்கள் இந்தியாவோடு இணைந்தது பாகிஸ்தானுக்கு பலத்த அடி, அதனால் நாடகமாடி ஐ.நாவில் நேருவை பலமிழக்க செய்தது.


இதனால்தான் ஆசிய நாடொன்று பாதுகாப்பு சபையில் இருக்கவேண்டுமென்று வாதாடி சீனாவினை இடம்பெற செய்தார். ஆனால் மாவோவின் வஞ்சகம் நேருவின் மனிதாபிமானத்தை ஏமாற்றிற்று. இங்குதான் நேரு தடுமாறினார்.


ஆயினும் உதவி செய்ய அமெரிக்கா வந்தபொழுதும் அது பெரும் போரானால் பாதிக்கபடுவது இந்தியர் என கருதி அமைதியானார். இதனால் இன்றுவரை அவர் விமரிக்கபடுவது உண்டு. சீனாவினை அவர் நம்பினார், நாம் சகோதரர்கள் என்றார்


நாமோ புது நிர்வாக நாடு, ராணுவத்திற்கு ஒதுக்கபடும் அளவிற்கு பணமில்லை, ஆனால் மாவோ ராணுவத்தை நிர்மானித்துவிட்டுத்தான் ஆட்சிக்கே வந்தார், அணுகுண்டு வேறு அவர்களிடம் இருந்தது.


இன்சூரன்ஸ் நிறுவணங்களின் அட்டகாசத்தை ஒடுக்கி, எல்ஐசி எனப்படும் பெரும் நிறுவணமாக்கினார். இன்று இந்தியாவின் பெரும் பொருளக அடையாளம் அது, அந்நிய முதலீட்டில் வெளிநாட்டினருக்கு அது பெரும் விருப்பம்.
இப்படியாக 14 ஆண்டுகாலம் இந்த நாட்டினை ஆண்டு பலமான அஸ்திவாரத்தினை பல துறைகளில் கட்டியவர். இந்த நாடு ஓரளவு நிலைத்து நிற்கிறதென்றால் அவரும் காரணம்,


மறக்க முடியாது.


ஒருமுறை கேட்டார்கள், இந்தியாவின் பெரும் எதிரி யார்? யார் மூலம் இந்திய இறையாண்மைக்கு ஆபத்து வரும் என கேட்டார்கள், அவர் சொன்னார் ட பெரும் ஆபத்தானது இந்திய மதவாதம்.


இந்த மதவாதம் வளர்ந்தால் அது இந்தியாவின் நிலையினை பாதிக்கும். பல இனங்கள் வாழும் இந்நாடு சமயசார்பினை கடந்தால் மட்டுமே நிலைத்திருக்கும், இல்லையேல் பல துண்டுகளாக உடையும், அதனால்தான் அழுத்தமாக சொல்கின்றேன் இந்த நாட்டில் அடக்கி வைக்க வேண்டியது மதவாதம்"


எல்லையில் மதத்தால் பிரிந்த பல ஆயிரம் உயிர்களின் அழுகுரல் சொல்லும் உண்மை அது.


1950ல் அவர் உபி முதல்வருக்கு எழுதும் கடிதத்தில் அயோத்தி பிரச்சினை மாபெரும் தவறான முன்னுதரணாமாகி, இத்தேசத்திற்கு தலைகுனிவினை கொண்டுவர கூடாது, அதன் விளைவுகள் தாங்கமுடியாத நிலைக்கு செல்லும். அதனை கட்டுபடுத்தவது உங்கள் பொறுப்பு என்கின்றார்.


இப்பொழுது புரிகின்றதா இந்த மதவெறி கும்பல் ஏன் நேருவின் எதிரியானார்கள், அல்லது இன்றும் அவரை காரி உமிழ்கின்றார்கள் என்று.


ஒவ்வொரு இந்தியனின் கண்ணீரை துடைப்பதுதான் எனது கடமை, எனது சக்திக்கு அப்பாற்பட்டது ஆயினும் முடிந்தவரை முயற்சிக்கின்றேன் என்ற அவரின் உருக்கம் சாதாரணமானது அல்ல.


இந்நாட்டை நேசிப்பவர்களுக்கும், மதவாதத்தை விலக்கி வைப்பவர்களுக்கும் நேரு பெரும் தலைவர், மற்றவர்களுக்கு அவர் எப்படியும் இருந்துவிட்டு போகட்டும்.


முன்னாள் சோவியத் அதிபர் கார்பசோவ் சொன்னார், பல இன மக்கள் வாழும் நாட்டில் நேரு போன்ற தலைவர்களின் அணுகுமுறையே சால சிறந்தது, அவரை நான் மனமார நேசிக்கின்றேன்.


லெனின்,ஸ்டாலின் வரிசையில் வந்த ஒரு தலைவனின் ஆதமார்த்தமான வார்த்தைகள் அவை.அதன் மதிப்பு அதிகம்.


இன்று அவரின் நினைவுநாள், அவரை கண்ணீரோடு நினைவு கூறலாம்


எப்படி ஆணித்தரமாக மதவாதம் இந்த நாட்டிற்கு ஆபத்து என்றாரோ, அது ஓரளவு வெளியே தெரியும் சூழல் இன்று, இந்த ஆபத்துக்களை இத்தேசம் கடந்தே ஆகவேண்டும், இன்னும் 2 ஆண்டுகள் இருக்கின்றது, ஆட்சியின் முடிவுல் அடுத்ததும் ஆட்சி அமைக்க பல அதிரடி மதரீதியான செயல்பாடுகளில் இவர்கள் இறங்கலாம்.


ஆனாலும் மதவாதம் ஒரு நாளும் வெற்றிபெறாது சில ஆறுதல்கள் இந்தியாவில் தெரிகின்றது அல்லவா? அங்குதான் நேரு சிரித்துகொண்டிருக்கின்றார்.


என் வழியில் நடந்தால்தான் அமைதியான வளமான இந்தியா உருவாகும் என்ற நம்பிக்கையில் சிரிக்கும் சிரிப்பு அது


ஆயிரம் அர்த்தம் நிறைந்த வசீகர சிரிப்பு அது.













 


No comments:

Post a Comment