ரஜினி என்பவர் யார்?
மொழிப்போர், மதுக்கடை, சாதி ஒழிப்பு, வறுமை ஒழிப்பு, மருத்துவம், காவேரி, முல்லைபெரியார், ஈழம், மாணவர் கல்வி, அணுவுலை, மீத்தேன், விவசாயிகள் ஜல்லிகட்டு என பெரும் போராட்டம் நடக்கும்பொழுதெல்லாம் அவர் என்ன செய்தார்?
30 ஆண்டுகளாக அவர் தமிழருக்கு செய்ததென்ன?
நடிப்பும், அரசியலும் எப்படி ஒன்றாகும்? அந்த மனிதரிடம் எப்படி நல்லாட்சி எதிர்பார்க்கமுடியும்?
புனிதமான அரசியலுக்கு அவர் எந்த அடிப்படையில் வரலாம்?
இப்படி எல்லாம் பெரும் அறிக்கை வந்த உடன் மனம் பரபரத்தது, அட தமிழ்நாட்டிலும் ஏதோ ஒரு காந்தி வாரிசு, காமராஜ் வாரிசு இருந்திருக்கின்றது
இந்த கலைஞர் காலை பிடித்து கொள்ள, ஜெயா அந்த காந்தீய வாரிசினை தலையினை பிடித்து அமுக்கியிருக்கின்றார் போதா குறைக்கு காங்கிரசும் மிரட்டியிருக்கலாம், தமிழிசை தலைவிரி கோலமாக பயமுறுத்தியிருக்கலாம்
இன்று கலைஞர், ஜெயா இல்லாத தைரியத்தில் தமிழக அரசியலில் 60 ஆண்டுகாலம் ஒதுங்கியிருந்த அந்த தமிழக பழுத்த அரசியல்வாதி, அந்த அனுபவசாலி, சுதந்திர போராட்ட தியாகி யார்?
இதுகாலும் பொறுத்து இனி பொறுக்கவே முடியாது என கிளம்பிவிட்ட அந்த மாமணி யார்?
இப்படி தெள்ள தெளிவாக வந்து பாயும் அந்த வரலாற்று நதி யார்? என அவரின் நீண்ட அறிக்கைக்கு பின் தேடிபார்த்தால் அது யார் தெரியுமா?
ஜே. தீபா
அவர்தான் ரஜினிக்கு எதிராக மிக நீண்ட அறிக்கையினை விட்ட்டிருக்கின்றார்
ரஜினிக்காவது கிட்டதட்ட 40 ஆண்டுகால தமிழக வாசம் இருக்கின்றது, தமிழகத்தோடு ஓரளவு கலந்திருக்கின்றார், எல்லா தேர்தலிலும் அவரை அரசியல்வாதிகள் சந்திக்கின்றனர்
எப்பொழுதும் ஒரு அதிர்வினை அவரால் உண்டாக்க முடிகின்றது
இந்த தீபா அரசியலுக்கு வந்தே 2 மாதம் ஆகின்றது, அதுவரை எங்கிருந்தார் என யாருக்கு தெரியும்? 2 மாதமாக இங்கு என்ன செய்தார் என்றால் ஒன்றுமே இல்லை
இது காமெடி ரகம் தான், ஆனாலும் ஜெயா குடும்பத்தில் எல்லாமும் இப்படி ஒரு மாதிரியான ஆட்களோ என்னமோ?
தொப்பி வைத்தவன் எல்லாம் எம்ஜிஆர் அல்ல, பரட்டை தலை எல்லாம் ரஜினியும் அல்ல, கோர்ட் போட்டவள் எல்லாம் ஜெயாவும் அல்ல
அம்மணியின் அறிக்கையினை பார்த்தவுடன் சிரிப்புத்தான் வருகின்றது, எந்த தகுதியில் அவர் ரஜினியினை விமர்சிக்கின்றார் என்றே தெரியவில்லை
குழப்பவாதி என்றாலும் ரஜினிக்கான இடம் நிச்சயம் பெரிது, அவர் மலை. ஆனால் அதனை ஒரு காளான் விமர்சிப்பதுதான் ஆச்சரியம்
அதிலும் புனிதமான அரசியலில் ரஜினிக்கு என்ன வேலை என அம்மையார் கேட்கும் பொழுது, "அம்மா ராசாத்தி உன் அத்தையினை பார்த்து இப்படி ஒரு கேள்வியினை 30 வருடத்திற்கு முன் கேட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.." என கண்ணீர் மல்க கேட்க தோன்றுகின்றது
அம்மணி பழகக் தோஷத்தில் இதே கேள்வியினை வைரவிழாவிற்கு எழுப்பாமல் இருக்கட்டும்,
கலைஞர் என்பவர் யார்? 60 ஆண்டுகளாக எங்கிருந்தார் என இவர் கேட்டால், சந்தேகமே இல்லாமல் கீழ்பாக்கத்தில் சேர்த்துவிடுவார்கள்
அது இருக்கட்டும், அம்மணி அந்த ரகம்தான்
இப்பொழுது மனதில் எழும் பகீர் அதிர்ச்சி ஒன்றுதான்
அந்த தீபா மாதவன் இப்பொழுது ரஜினியினை கண்டித்து அறிக்கை எழுதி கொண்டிருப்பாரோ?
அவர் அப்படி அறிக்கையிட்டால் நாடு தாங்குமா?
No comments:
Post a Comment