Saturday, December 24, 2016

ஒரு மாமனித ஆச்சர்யம் இயேசு கிறிஸ்து



Image may contain: one or more people


கடவுளின் அவதாரமாக கிறிஸ்தவர்களும், ஒரு இறைவாக்கினராக இஸ்லாமியரும், நாங்கள் எதிர்பார்த்திருக்கும் மெசியா அல்ல இது ஒரு இனதுரோகி என யூதரும், மற்ற மதத்தினர் எல்லாம் மாபெரும் தத்துவஞானியாகவும் பார்க்கபடும் ஒரு மாமனித ஆச்சர்யம் இயேசு கிறிஸ்து.


புத்தமதத்தினர் கூட தங்கள் மதத்தின் உண்மையான தத்துவங்களை போதித்தவர் அவர் என அவரை உயர்த்தி பிடிப்பார்கள்.


அவரின் பிறந்தநாள் டிசம்பர் 25 என கொண்டாடபடுகின்றது, அவர் அந்த தேதியில் பிறந்தார் என்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை (ஓலைசுவடி, பைப்ரஸ்புல்,கல்வெட்டு அல்லது மிருகத்தோல் என ஏதுமில்லை), காரணம் 33 வயதில் அவர் கொல்லபட்டு பின் அவரது மார்க்கம் ரோமையர்களால் இன்னலுக்குள்ளாக்கபட்டு, ஒரு கட்டத்தில் ரோமை அரசையே கிறிஸ்துவம் கைபற்றியபின்புதான் அவரின் பிறந்தநாள் பற்றி யோசிக்க ஆரம்பித்தார்கள்.


இதற்குள் அவர் பிறந்து 350 ஆண்டுகள் ஆனது.


போப் ஜூலியஸ் என்பவர் டிசம்பர் 25 என நாள்குறித்தார், அதுவே பிரதானமானது ஆனாலும் சில ஆர்தடாக்ஸ் சபையினர் ஜனவரி 5 என கொண்டாடவும் செய்கின்றனர், இதுவரை அவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை, சரியான ஆதாரமில்லாத நாள் என்று கொண்டாடினால் என்ன?


அது டிசம்பர் 25தானா? என்பதில்தான் சர்ச்சை உண்டே தவிர இயேசு உலகில் பிறந்தார் என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது, மிக உறுதியாக வரலேறே அதனை கி.மு, கி.பி என பிரிக்கின்றது அதாவது கி.மு 7 க்கும் கி.மு 2 க்கும் இடைபட்ட காலம் அவர் பிறந்தது என்பது வரலாற்று ஆய்வாளர் வாதம்.


அவரின் வளர்ப்பு சூசையப்பர் அதாவது ஜோசப் , தாவீது மன்னரின் வம்சம், தாவீது இன்றுவரை யூதர்களின் நம்பர் 1 ராஜா, ஆனால் ஜோசப் அரசவம்சம் என்றாலும் அரசுக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை, அப்பாவி தச்சு தொழிலாளி, தாய் மேரி கடவுளைதவிர வேறு ஏதும் அறியா பக்தை.


வானதூதர் வந்து அருள்மொழி கூறி, மரியாளின் வயிற்றில் உருவானார் யேசு என்பது பைபிளின் ஆதாரம், கிறிஸ்தவர்களின் நம்பிக்கை.


அவர்கள் வாழ்ந்தது நாசரேத் எனும் வடக்கு இஸ்ரேலிய நகரம். நசேரா எனும் அரபு சொல்லுக்கு ரோஜா என்பது பொருள், ரோஜாமலர் மிகுந்த சோலைதான் நாசரேத்.


அந்த‌ காலகட்டத்தில் இன்றைய இஸ்ரேல்,பாலஸ்தீன் சிரியா எல்லாம் ரோமானியர் ஆண்டனர், சகலமும் ரோமானிசம், யூத மதம் சிறுபான்மை , ரோமை, கிரேக்க மதங்களை தவிர சொல்லி கொள்ளும் மதம் அங்கு இல்லை.


இன்றைய நவீன மக்களாட்ட்சிக்கு முன்னோடி திட்டமிட்டவர் ரோமானியர்கள், இன்று உலகம் ஜனநாயக நாடுகள் எல்லாம் அவர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் அமைத்த அந்த அமைப்பிலேதான் இன்றும் இயங்குகின்றன, அரசமைப்பை விடுங்கள், காலண்டரும், கட்டடங்களும், அழகான சாலைகளும் இன்னும் ஏராளமானது ரோமானியர் கொடை,


அப்படிபட்ட ரோமானிய அரசனான அகஸ்டஸ் சீசர் தனது ஆட்சிக்கு உட்பட்ட மக்களை கணக்கெடுக்க உத்தரவிட்டான், இதுதான் உலகின் முதன் முதல் "மக்கள்தொகை" கணக்கெடுப்பு (நமது பகுதி கணக்கெடுப்பு அதிகாரிகளின் சகல சாபங்களுக்கும் உரியவர் இவர்தான்), அதுவும் மிக நுணுக்கமான கட்டளை. மக்கள் தங்கள் சொந்த ஊரில் சென்று பதியவேண்டும்.


அதாவது மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தவும், நல்ல நிர்வாகத்தை கொடுக்கவும் நடந்த ஏற்பாடு, மக்கள் எவ்வளவு என முதன்முதலாக அறிய ஆசைபட்ட மன்னர், வேறு நோக்கம் இருக்கமுடியாது காரணம் அன்று தேர்தல் இல்லை :)


இப்படியான காலத்தில்தான் ஜோசப் தனது மனைவி நிறைமாத கர்ப்பிணியான மரியாளுடன் தனது முன்னோர்களின் ஊரான பெத்லகேம் சென்றார் . தாவீது அரசருக்கு பெத்லகேம் சொந்த ஊர்,


ஆனால் அதன் பின் 30 தலைமுறை தாண்டியும் தனது பூர்விகத்தை நினைத்து சென்றிருக்கின்றார் அல்லவா?
இதுதான் யூத குணம், யூத ரத்தத்தில் ஊறிய சொந்த‌ மண் வெறி, வேறு எந்த இனத்திடமும் காணமுடியாது,


வேண்டுமானால் அருகிலிருப்பவரிடம் விசாரியுங்கள் 3ம் தலைமுறை வரை தெரிந்தாலே பெரும் ஆச்சர்யம்.


திடீரென பெத்லெகேம் எனும் ஊருக்கு சென்றார், சொந்த ஊரே தவிர சொந்தகாரர்களோ அல்லது பூர்வீக இடம் கூட தெரியாது, அது சாத்தியமும் இல்லை. தங்குவதற்கு வீடோ அல்லது சத்திரமோ இல்லை காரணம் ஏகபட்ட கூட்டம்.


ஏடிஎம் மிஷினில் சொந்த பணம் எடுக்கவ்வே இந்தியாவில் இவ்வளவு கூட்டம் என்றால், முதல் மக்கள்கணக்கெடுப்பு, சொந்த ஊர் செல்லும் நெரிசல் எவ்வளவு இருந்திருக்கும்
மனைவி நிறைமாத கர்ப்பிணி, தலைபிள்ளை வேறு,


மாற்றுவழி ஒன்றுமில்லை, ஊரை ஒட்டிய ஒரு குகைக்கு சென்றார், அது ஆடுமாடுகளை அடைக்கும் இடம், அது யாருக்கு சொந்தமானது என்பது பற்றி தகவல் இல்லை, ஆனால் மாடுகளுக்கு தீனிபோடும் இடமெல்லாம் வைத்து (நமது ஊரில் "முன் அட்டி" ) பரமரித்த இடம்தான், அங்குதான் சென்றார் ஜோசப்.


அங்குதான் இயேசு பிறந்தார், மாபெரும் அவதாரம், உலகை புரட்டிபோட்ட பெரும் வரலாற்று ஞான சூரியன் அங்கு உதித்தது.


மாட்டுக்டிலில் கடும் குளிரில் அக்குழந்தை கந்தல் துணியில் சிரித்து கொண்டிருந்தது, அருகிலே கடவுளுக்கு பணிந்த ஒரே காரணத்திற்காய் அனாதையாக, உதவிக்கு கூட யாருமில்லாமல் சொல்லமுடியாத பரிதாபத்தோடு படுத்திருந்தாள் மரியாள், ஆனாலும் கடவுளை பற்றி ஒரு வார்த்தை அவர் தவறாக பேசவில்லை


அவளுக்கு உணவளிப்பதற்காக அங்குமிங்கும் ஓடிகொண்டிருந்தார் ஜோசப், கடும் குளிரில் அக்குழந்தையை கொஞ்சம் இதம் கொடுத்தது, அங்கிருந்த பசுமாட்டின் மூச்சு காற்று மட்டுமே, அந்த வெப்பகாற்றில் குழந்தை தூங்கிற்று.


மாடு அடையும் தொழுவம், சாணம் ஹோமியம், கொசு முதல் சகல தொந்தரவும் உண்டு, யாருமே இல்லாத அனாதையாக அந்த அபலைப்பெண், அந்நிய ஊரில் செய்வதறியாமல் தடுமாறிய பரிதாபத்துகுரிய சூசையப்பர்,


முதல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இப்படித்தான் தொடங்கியது, அன்று கிறிஸ்மஸ் மரம் இல்லை, வாழ்த்து செய்தி இல்லை, தலைவர்கள் அறிக்கை இல்லை, விளக்கு அலங்காரம் இல்லை, கேக் இல்லை, பலகாரம் இல்லை வான்கோழி பிரியாணி இல்லை, வெடி இல்லை, புதுஆடை இல்லை, ஒரு ஆரவாரமும் இல்லை.


கடவுள் பூமியில் பிறப்பதற்காக இரு மானிடபிறவிகள் சொல்லணா துயரங்களை அனுபவித்த கணத்தில் இப்படித்தான் கிறிஸ்துமஸ் தொடங்கியது.


குகைக்கு அப்பக்கம் ஆடு மேய்ப்பவர்கள் இருந்தனர், இரவெல்லாம் காவல் காக்கும் பணியும் உண்டு, ஓநாய் தொந்தரவு அதிகம்.


அன்று ஆடு மேய்க்கும் இனம் அந்நாட்டில் ஒதுக்கபட்டது, ஒடுக்கபட்டது அல்லது தாழ்த்தபட்டது, யாரும் அவர்களை கண்டு கொள்ளமாட்டார்கள், புறக்கணிக்கபட்ட அந்த இனத்தினரிடம்தான் வானதூதர் குழு அந்த நல்லசெய்தியை சொன்னது


ஒரு மகன் பிறந்திருக்கிறார், அவர் சமத்துவத்தை கொண்டுவருவார், சகலரையும் வாழ வைப்பார், அதாவது அதன் பொருள் இனி நீங்கள் எல்லாம் ஒதுக்கபட்டு, புறக்கணிக்க பட்டவர்கள் அல்ல, எல்லா மக்களையும் போல நீங்களும் வாழ்வீர்கள், அக்குழந்தை உங்களை வாழவைக்கும்.


அந்த செய்தியை கேட்டவுடன் மகிழ்ந்த இடையரும் சென்று குழந்தையை வணங்கினர், நீங்களும் வாழ்வீர்கள் வளம் பெறுவீர்கள் என்பதுதான் நல்லசெய்தி, அதாவது வான தூதர்கள் உரைத்த நற்செய்தி (மேடைபோட்டு நீ சாவாய், நீ நரகம் போவாய் நீ நாசமாய் போவாய் என மிரட்டுவது நற்செய்தி அல்ல)


மாபெரும் அவதாரம் ஒன்று தனது முதல் தரிசனத்தை ஒடுகபட்ட மக்களுக்கே தருகின்றது, அது பிறந்த இடம் கூட மேல்மக்களால் புறக்கணிக்கபட்ட இடமே.


நிற்க‌ , அப்போது இந்தியாவில் இமயமலை பக்கம் சில ஜாதக விற்பனர்களுக்கு வானில் ஒரு அறிகுறி தோன்றிற்று, ஒரு வால்நட்சத்திரம் ஜோதிட சாஸ்திர ரீதியாக அதன் அர்த்தம் பெரும் அவதார பிறப்பு பிறந்திருக்கின்றது என்பது, அவர்கள் பெரும் பரிசுபொருளுடன் கிளம்பினர், அதனை காண்பதற்கு அவர்களுக்கு அவ்வளவு ஆசை.


கவனியுங்கள் 3 ராஜாக்கள் என பைபிள் சொல்கின்றது, ஆனால் அவர்கள் மூன்று பேரும் வாட்ஸ் அப்பிலோ அல்லது முகநூலிலோ தொடர்பு கொண்டிருக்கமுடியாது, அன்றைய கீழ்தேசம் நிச்சயம் சொல்லலாம் அது இந்தியா, இந்தியா மட்டுமே, இந்தியா என்றால் ஒரே நாடல்ல பல நாடுகள், பல அரசர்கள்.


நட்சத்திரம் கண்டவுடன் அந்நாடுகளில் ஒரு பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கின்றது, அதனால்தான் அரசர்கள் கூடி அக்குழந்தையை பார்க்க வந்தனர்.


நிதானித்து சிந்தியுங்கள், கண்டது ஒரு நட்சத்திரத்தை அதனை வைத்து மிகச்ரியாக யூதர்களின் ராஜா பிறந்திருக்கின்றார் என்று ஜாதக ரீதியாக கணித்திருக்கின்றார்கள் என்றால் எவ்வளவு ஜோதிட அறிவு இருந்திருக்க்வேண்டும், யூத இனம் வாழும் தேசத்திற்கும் இமயமலைக்கும் எவ்வளவு தொலைவு, எவ்வளவு வித்தியாசம்?


நாம் சொல்லவில்லை பைபிள் சொல்கிறது,


தனது விருப்பத்திற்கு பைபிளை வளைக்கும் சில போதகர்கள், ஜோதிடமே முழுபொய் என முழங்குகின்றார்கள் அல்லவா?, அவர்கள் இக்காட்சியை காண்பது நல்லது.


அதாவது பல விஷயங்கள் அறிவுக்கு எட்டாதது.


இப்படியாக அந்த இந்திய ராஜாக்களும் அவர்களின் சாஸ்திரிகளும் சென்று அரண்மனையில் ஜெருசலேமில் தேடினர், காரணம் அவர்கள் தேடியது அரச குழந்தையை. மூன்று அரசர்கள் அனாதைகளாக சென்றிருக்க மாட்டார்கள் அல்லவா? கூடவே ஒரு கூட்டமும் சென்றிருக்கலாம்.


ஆனால் அங்கு ஆட்சியில் இருந்தது ஒரு கம்சன், அவன் பெயர் ஏரோது, கம்சன் கண்ணனுக்கு கொடுத்த இம்சைகளுக்கு சற்றும் குறையாதது யேசுவிற்கு ஏரோது கொடுத்தது.


ஆனால் குழந்தை எங்கு பிறந்தது தெரியாது, அரண்மனையில் பிறக்கவில்லை, யாரை கேட்பது? அவர்களிடமே கேட்டான், இங்கு பிறக்கவில்லை, எந்த யூதர் வீட்டில் கண்டால் என்னிடம் சொல்லுங்கள்.


அரசர் குழந்தையை தேடினர், கம்சன் ஏரோது வாளை தேடினான்.


அந்த அரசர்களும் குழந்தையை கண்டு மகிழ்ந்து பணிந்தனர், சாஸ்திரங்களில் தேர்ந்ததவர்கள் அல்லவா? கனவு சாஸ்திரத்தில் எச்சரிக்கபட்டு ஏரோதை காணாமல் திரும்பினர்.


ஆனால் ஏரோது கடும் சினமுற்றார், அதாவது ஆள்வது மாமன்னன் அகஸ்டஸ் சீசர் என்றாலும் யூதர்களுக்கு தன்னாட்சி உரிமை கொடுத்திருந்தான், அதன்படி கலப்பு யூதரான ஏரோது ஆட்சியை பிடித்து, யூதர்களை மிக தந்திரமாக ஆண்டார்.


யூதர்கள் எனும் பூதம் எப்படி அடங்கும், யெருசலேமில் ஒரு கோயில்கட்டினால் அடங்கும், அதனைத்தான் அவன் செய்தான், அவனிடமே யூதரின் அரசன் பிறந்தார் என்றால் விடுவானா?, குழந்தையை கண்டுபிடிக்கமுடியவில்லை, ஒரு கொடூர திட்டத்தை அவனது பதவிவெறி தூண்டிற்று,


பெத்லகேம் சுற்றியுள்ள 2 வயது குழந்தைகளை கொல்ல சொன்னான், அப்படியே கொல்லதொடங்கினார்கள்.
ஆனால் கனவில் எச்சரிக்கபட்டு பலகினமான உடல்நிலையிலும் மனைவியையும் மகனையும் அழைத்து சென்று தப்பினார் சூசை. இவ்வாறாக இயேசுவின் முதல்கண்டம் கடந்தது.


இப்படி பல துயரங்களில் தப்பி தொடங்கியதுதான் கிறிஸ்துமஸ், பின்னாளில் மதம் வளர வளர‌ கிறிஸ்மஸ் பெரும் கொண்டாட்டமானது, புனித பிரான்சிஸ் அசிசி போன்ற‌ கிறிஸ்தவ துறவிகள் குடில்வைக்கும் பழக்கம் தொடங்கினர்.


குடில் என்றால் அது உருவவழிபாடு அல்லவா? புரட்சி கிறிஸ்தவர்கள் எப்படி ஏற்றுகொள்வார்கள்??


அவர்கள் வேறுவழியில் இறங்கினர், கிறிஸ்துமஸ் மரம், கிறிஸ்துமஸ் வாழ்த்து ,கிறிஸ்துமஸ் கேக் என அவர்கள் வழியில் கொண்டாடினர்.


புனித நிக்கோலஸ் எனும் ஒருவர், கிறிஸ்துமஸ் அன்று குழந்தைகளுக்கு பரிசு கொடுத்து மகிழ்ந்தார், பின்னர் மறைந்தார். குழந்தைகளுக்கு அது பெரும் இழப்பு, அவர் மறைந்தபின்னும் குழந்தைகளுக்கு அவர் பரிசு கொடுப்பார் என குழந்தைகளை நம்பவைத்தனர்,


அவர் பனிச்றுக்கு வண்டியில் வருவார் , மான்கள் இழுத்துவரும் என்றேல்லாம் குழந்தைகளுகு போதிக்கபட்டது, செயிண்ட் நிக்கோலஸ் எனும் வார்த்தை போர்த்துகீசிய மொழியில் சாண்டாகிளாஸ் ஆனது.


இன்று சாண்டாகிளாஸை தெரியாதவர் யாரும் இல்லை.


கிறிஸ்தவம் பரவ பரவ இந்தியாவிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடங்கியது,


உலகில் எங்கெல்லாம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடந்தாலும், சொந்த ஊரில் கொண்டாடும் விதமே தனி.


அற்புதமான குடில்கள் செய்து, அதனுள் கிறிஸ்து பிறப்பினை நினைவு கூறும் சொரூபங்களை வைப்பார்கள், அதனை பார்க்கும்பொழுதே, கிறிஸ்து பிறந்த அற்புத காட்சி கண்ணுக்குள் வந்துபோகும்.


புரட்சி கிறிஸ்தவ சபைகளில் இந்த காட்சிகளை காணமுடியாது எனினும், கிறிஸ்மஸ் மரம், அலங்காரங்கள் அற்புதமான பாடல்கள் என அதன் அழகு வேறுமாதிரியானது.


மிக சில சபையார் கிறிஸ்மஸ் கொண்டாடுவதில்லை, கேட்டால் பைபிளில் எங்கும் சொல்லபடவில்லை என்பார்கள், அதே பைபிளில் "உன் சொத்துக்களை விற்று ஏழைகளுக்கு கொடு, பணக்காரனுக்கு ஐயோ கேடு" எனறேல்லாம் வசனம் உண்டல்லவா? என்றெல்லாம் கேட்க ஆசைதான், ஆனால் அவர்கள் கண்களில் மின்னும் பரலோக ஒளியில் நமக்கு நாவறண்டு விடும்.


அற்புதமான நிகழ்வு கிறிஸ்துமஸ், அதாவது ஒதுக்கபட்ட இடத்தில் ஏழையாக பிறந்து, தாழ்த்தபட்டவர் முதல் மாபெரும் அரசர்வரை அந்த இடத்தில் சந்திக்கவைத்த முதல் சமத்துவ நிகழ்வு, அக்குழந்தையின் முன்னால்தான் அரசரும் ஆண்டியும் ஒருசேர வணங்கினார்கள், பெரும் மாற்றத்தின் தொடக்கபுள்ளி அந்த பெத்லஹேம் தொழுவம்.


பிறந்தபொழுதே பிரிவுகளை உடைத்தவர் இயேசு,


கிறிஸ்துமஸ் அதனைத்தான் சொல்கிறது, ஆனால் இன்று சாதியின் பெயரால் திருச்சபையை பிரிகின்றது அல்லது சாதியின் பெயரால் சபை உருவாக்கபடுகின்றது, இப்படியாக ஏரோதிடம் தப்பிக்க அக்குழந்தை பட்ட கஷ்டடத்தினை ஜாதிவெறியர்களிடம் இருந்து தப்பிக்க கிறிஸ்தவம் படுகின்றது.


ஆனால் உண்மையான கிறிஸ்தவர்கள் எந்த வேறுபாடுகளும் பார்க்கமாட்டார்கள், அப்படி பார்க்கவும் கூடாது என்பதற்கு கிறிஸ்து பிறப்பும் அங்கு ஒன்றாக வணங்கிய‌ ஆண்டசாதி மற்றும் அடிமை சாதியுமே எடுத்துகாட்டு,


அந்த சமத்துவம்தான் கிறிஸ்து மாட்டுகுடிலில் பிறந்த ரகசியம். பிறக்கும் பொழுதே சமத்துவம் கொண்டுவந்தவர் இயேசு


ஊரில் கொண்டாடும் கிறிஸ்துமஸ் விழாவிற்கு தனி சிறப்பு உண்டு, மார்கழி குளிரும், பனியும், அற்புதமான அமைதி இரவும், அந்த பிரார்த்தனையும்,வீடுகளில் மின்னும் நட்சத்திரங்களும், நள்ளிரவிலே வெட்டபடும் ஆடுகளும், அவற்றை அருகிருந்தே ஈரல் எனக்கு, கால் உனக்கு என சொல்லி பனை ஓலையில் சுற்றி கொண்டு செல்வதும் ஒரு வகையான குதூகலாம்


எந்த பண்டிகை ஆயினும் சொந்தமண்ணில் சொந்த இனத்தோடு கொண்டாடுவதற்கு ஈடேறா...


ஆக சொந்த ஊரில் சுற்றம் சூழ கிறிஸ்மஸ் கொண்டாடுபவர்களுக்கு பொறாமையோடு கூடிய வாழ்த்து, தொலைதூரத்தில் தனிமையாக கொண்டாடுபவர்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்து



எல்லோரும் கொண்டாடலாம்...






No comments:

Post a Comment