மரணம் யாருக்கும் வரலாம், எப்பொழுதும், எந்த நொடியிலும் வரலாம்
94 வயதுவரை ஒருவித போராட்ட வாழ்க்கை வாழ்வதும், எழுதுவதும், அரசியல் செய்வதும் பெரும் சாதனை
அதுவும் எத்தனையோ நெருப்பாறுகளை கடந்து வந்து இந்நிலையில் இருப்பது ஒரு வகை ஆசீர்வாதம்
காமராஜருடன் இந்திரவுடன் மல்லுகட்டியவர் பன்னீர்செல்வத்துடனும் சசிகலாவுடனுமா அரசியல் செய்யவேண்டும்? அந்நிலை அவருக்கு வாய்க்காவிட்டால் மகிழ்ச்சியே
எல்லோரும் ஒரு நாள் கிளம்பவேண்டிய உலகிது, யார் தப்பிவிட முடியும்?
இதில் சிலர் என்னவோ வாழவேண்டிய புதுமாப்பிள்ளை சாக கிடப்பதை போல குதித்துகொண்டிருக்கின்றார்கள,
அட பதர்களா?
அது எப்பொழுது வேண்டுமானாலும் நடைபெறும் நிகழ்வு
25 வயதிலிருந்தே அவர் உயிர் பலர் பறிக்க தேடியதுதான், கருணாநிதி உயிரிழந்தான் எனும் செய்தியினை காதுகுளிர கேட்க காத்திருந்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா?
அவர்கள் முன் எல்லாம் சாகாமல் , அவர்களை எல்லாம் அனுப்பிவிட்டு இனி தன் தகுதிக்கு யாருமில்லை என சொல்லிவிட்டு மரணத்தை எதிர்கொள்வது எவ்வளவு பெரும் மகிழ்வு
அனுபவித்தவர்கள் சொல்வார்கள், நீண்ட ஆயுளும் ஒரு வகை சாபம்
அந்த சாபத்தையும், தனக்கான பலமாக மாற்றிகொண்டு சாதித்து நின்றவர் அவர்
கிட்டதட்ட 6 தலைமுறைளுக்காக தன்னை பலவிதங்களில் புதுபித்து வாழ்ந்தவர் அவர்
இனியும் அவர் சாதிக்க என்ன இருக்கின்றது?
பன்னீர் செல்வம் முன்னால் எதிர்கட்சியாக அமர்ந்து, சசிகலாவிற்கு எல்லாம் பதில் சொல்வதற்கா?
ஒரு மனிதன் சாக கிடந்தால், அவனை விட ஒருபடி மேல் நீங்கள் சாதித்திருந்தால் அந்ந சாவில், என் சாதனையினை அவன் நெருங்காமல் சாகிறான் அல்லவா என மகிழ்ந்தால் அர்த்தமுண்டு
அவரின் சாதனையில் ஒரு புள்ளி உங்களால் தொடமுடியுமா?, அந்த வரலாற்று கோபுரத்தில் ஒரு செங்கலை உங்களால் அமைக்க முடியுமா?
94 வயதினை நெருங்கிவிட்ட ஒரு மனிதனை பற்றி எந்நேரமும் எந்த செய்திகளும் வரலாம், இது மானிட இயற்கை
இதில் குதியோ குதி என குதிக்க என்ன இருக்கின்றது
இன்று அவர் என்றால் நிச்சயம் இன்னொரு நாள் நீங்கள்
காய்ந்த ஓலை விழுவதை கண்டு பச்சை ஓலைகள் குதுகலிப்பது நகைப்புகுரியது.
No comments:
Post a Comment