பெய்யென பெய்யும் மழை என்பார்கள், பேயென பெய்யும் மழை இங்கு கொட்டிகொண்டிருக்கின்றது
வருணனுக்கு நம்மீது மேல் என்ன கோபமோ தெரியவில்லை, ஊருக்கு அழைத்து பேசினால் தண்ணீர் பஞ்சம் பற்றி அவர்கள் சொல்லும்பொழுது அழுகையே வருகின்றது
600 அடிவரை தேடிபார்த்தும் ஒரு சொட்டு நீரினை காணவில்லை என கதறல்...
போனை வைப்பதற்குள் இங்கு காதோரம் சர்ரென்று இறங்குகின்றார் வருணன், அதுவும் இந்திரனின் ஆயுதங்களோடு வந்து கடும் சீன்.
எல்லா வேதங்களையும் புரட்டியாயிற்று, வருணனை போற்றுவதற்கே வரிகள் இருக்கின்றதே தவிர, அவரை எப்படி திட்டுவது என ஒரு வரியினை கூட காணோம்.
இருந்தால் சொல்லுங்கள் தேவைபடுகின்றது...
இம்மழையில் பத்தில் ஒருபங்கு பெய்தாலும் தமிழகம் 6 மாதம் தாங்கும்
ஆனால் இங்கு எல்லாம் வீணாக கடலுக்கு செல்கின்றது, பெரும் விளைச்சல் என எதுவும் இல்லை
எங்கு எது தேவையோ அங்கே அதனை கொடுக்காமல், இன்னொரு இடத்தில் தேவைக்கு அதிகமாய் கொடுத்து ஆடுவதில் ஆண்டவனுக்கு ஒரு ஆனந்தம்
மழை விஷயத்திலும் அப்படித்தான்
மழை யாருக்கு பிடிக்காது, எல்லோருக்கும் பிடிக்கும்
ஆனால் அங்கு ஒருசொட்டு தண்ணீருக்கு தவிக்கும்பொழுது, இந்த மழையினை ரசிக்க முடியவில்லை, கண்ணீர்தான் வருகின்றது
அந்த கண்ணீரை யாருக்கும் தெரியாமலே இந்த மழைக்குள் நனைந்துதான் கரைக்க வேண்டியிருக்கின்றது
No comments:
Post a Comment