தோற்றம் : 03-03-1935 :: மறைவு: 27-02- 2008
ஜனரஞ்சகமான எழுத்து என்றால் என்ன? அதனை தமிழில் எழுதுவது எப்படி என தமிழகம் அறிந்துகொள்ளட்டும்.." என உலகிற்கு சொல்ல , இறைவன் அனுப்பிய எழுத்தாளன் சுஜாதா ரங்கராஜன் நினைவு நாள் இன்று
உலகின் எந்த துறையினை எடுத்தாலும் அதன் அடி ஆழம் வரை எழுதும் அறிவு அவருக்கு இருந்தது
ஆன்மீகம் முதல் விஞ்ஞானம் வரை, சங்க இலக்கியம் முதல் விண்வெளி வரை, கண மருத்துவம் முதல் கணிணி வரை, வரலாறு முதல் ரோபோக்கள் வரை
முந்தைய நாள் ஆழ்வார்கள் பெருமையினை அழகிய தமிழில் பேசிவிட்டு, மறுநாள் காலையில் சினிமா விவாதங்களில் பங்கெடுத்துவிட்டு, மாலையே கணிப்பொறியில் தமிழை கொண்டுவருவது எப்படி என அவர் பேசியபொழுது இப்படியும் ஒரு மனிதன் சாத்தியமா என்றெல்லாம் வியந்த காலங்கள் உண்டு
எல்லா விஷயங்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார் அவர், அதனை சுவைபட சொல்லும் அழகும் இருந்தது
தொல்காப்பியன், ஆழ்வார்கள், சாக்ரடீஸ், ஐன்ஸ்டீன், பாரதி, புதுமை பித்தன் என எல்லாமும் கலந்த அப்படி ஒரு எழுத்தாளன் இனி தமிழுலக்கிற்கு சாத்தியமே இல்லை
கண்ணதாசனும், சீனிவாச ராமனுஜனும் கலந்த கலவை அவர்
பிறவி அறிவு அவரிடம் அப்படி இருந்திருக்கின்றது
தமிழுலகம் மறக்கவே முடியாத மாமனிதன், தமிழர் அறிவின் பெரும் அடையாளம்
நல்ல எழுத்து எது? எப்படி எழுதவேண்டும் என்பதற்கு நவீன காலத்தில் அவரே இலக்கணம்.
அவர் எழுதிய காலங்கள் தமிழ் எழுத்துலகின் பொற்காலம், படிக்க படிக்க அப்படி ஒரு சுகமும் , திருப்தியும் மகிழ்வும் கொடுத்த எழுத்துக்கள் அவை
மனிதர் எல்லாவற்றையும் ரசித்திருக்கின்றார், அதுவும் முழுக்க முழுக்க ரசித்திருக்கின்றார் என்பது மட்டும் உண்மை
அந்த ரசனையினை எழுத்தில் கொடுத்தார்.
பூமியின் எல்லா பக்கங்களையும், மானிட வாழ்வின் எல்லா உணர்வுகளையும், விஞ்ஞானத்தின் எல்லா புத்தகங்களையும் , சமூகத்தின் எல்லா நகர்வுகளையும் கவனித்திருக்கின்றார்
இவரை பெற்றதில் தமிழுலகம் பெரும் மகிழ்வு அடைகின்றது, அன்னாரின் நினைவுநாளில் அவருக்கு நெஞ்சார்ந்த அஞ்சலிகள்.
தமிழருக்கு பல்சுவை விஞ்ஞான "எழுத்தறிவித்த இறைவன்" நிச்சயம் அவர்தான்.
No comments:
Post a Comment