Wednesday, July 19, 2017

அடால்ப் ஈச்மென் Vs மொசாத் : 04



Image may contain: one or more people and people sittingஎமபாதகனும் ஹிட்லரிடம் பயிற்சிபெற்றவருமான ஈச்மெனை கண்காணிப்பது சுலபமான விஷயம் அல்ல.


12 பேர் கொண்ட மொசாத் குழு எப்படி ஈச்மெனை அவருக்கு சந்தேகம் வராத அளவு கண்காணித்தது என்பது இன்றுவரை புரியவில்லை.


12 பேர்தான் சுற்றி சுற்றி வந்திருக்கவேண்டும். அதுவோ புறநகர் பகுதி, அவ்வளவாக மக்கள் நடமாடாத பகுதி.


ஒரு காக்கா பறந்தாலே தனியாக தெரியும், இதில் 8 மாதம் எப்படி கண்காணித்தார்கள்? கடவுளுக்கே வெளிச்சம்.


சரி 70% இவர் ஈச்மென் என தெரிகின்றது தூக்கிவிடலாமா?


அதிலும் ஆயிரம் சிக்கல்கள் முளைத்தன‌.


சிக்கல் என்றால் ஏராளமான சிக்கல்கள். முதலாவது அந்த படுபாதக ஈச்மென் இவர்தானா என 100% தெரியவேண்டும்.


சாதாரண அர்ஜெண்டினா சுடலைகண்ணு அல்லது சவரிமுத்துவை அள்ளிகொண்டு போய் நன்றாக மொத்தி இஸ்ரேலில் கொண்டு விட்டுவிட்டால் உண்மை தெரியும் பட்சத்தில் அது மகா அவமானம் மொத்த இஸ்ரேலுக்கும்.


(நமது நாடு என்றால் அதன்பின் கதைவசனம் எழுத ஒரு துறையே உண்டு, அந்த அப்பாவியை ஹிட்லராக கூட மாற்றிவிடுவார்கள்)


இன்னொன்று தவறான நபரை கைது செய்து இவர்தான் ஈச்மென் என காட்டினால், அதற்குள் உண்மையான ஈச்மென் சுதாரித்து கொள்வார் அதன்பின் அவரை நெருங்கவே முடியாது.


இது மொசாத்திற்கும் தெரியும்.


Image may contain: outdoorஇன்னொன்று அர்ஜெண்டினா நாசி அபிமான நாடு.


ஈச்மென் போன்ற பெரும் திமிங்கலம் அல்ல சாதாரன அயிரைமீன் நாசி வீரனை கொடுக்க கூட சம்மதிக்கமாட்டார்கள்.


ஒருவேளை ஈச்மென் கடத்தபட்டது தெரிந்தால் அர்ஜெண்டினாவின் மொத்த நாசி கும்பலும் பாஷா ரஜினியின் ஜனகராஜ் குழு போல துப்பாக்கி தூக்கி ஓடி வரும்


ஈச்மென் கடத்தல் வெளியே தெரியும் பட்சத்தில் மொசாத்தின் மொத்த குழுவிற்கும் தூக்கு உறுதி.


எங்கள் நாட்டில் எங்களை கேட்காமல் இஸ்ரேல் செய்யும் அநியாயம் பாரீர்.


எங்கள் இறையாண்மை என்ன ஆவது என்று முறையிட்டால் இஸ்ரேல் நிலை மகா மோசம்,


அதனால் தான் சரியான நேரம் வரும்வரை பலவழிகளில் அவர் ஈச்மென் தான் என உறுதிபடுத்தினார்கள்.


இன்னொன்று அர்ஜெண்டினா அரசு அவருக்கு ரகசியபாதுகாப்பு வழங்கியிருக்கின்றதா எனவும் சோதிக்கவேண்டியிருந்தது.


நாசிக்களுக்கும் ஈச்மெனுக்கும் தொடர்பு உண்டா என்ற சோதனையும் நடந்தது


ஒருவழியாக முடிவிற்கு வந்தார்கள், இவர் ஈச்மென் தான், 100% ஈச்மென் என முடிவு செய்தார்கள்.


ஆனால் கடத்தி நீண்ட காலம் வைக்கமுடியாது, கடத்தி கொண்டு போக வேண்டும்


முதலில் ஒரு சேப் ஹவுஸ் எனப்படும் பாதுகாப்பான வீடு பார்த்தார்கள். எப்படி கொண்டுவரவேண்டும் எப்படி சிறைவைக்கபடவேண்டும் என எல்லா திட்டமும் ரெடி.


ஆனால் கடத்திகொண்டுபோகும் காலம் அமைதியான காலமாக இருக்க கூடாது.


ஒருவித கொண்டாட்ட காலமாக இருந்தால் நல்லது. அதுவும் அரசு கொண்டாட்டமாக இருந்து எல்லா நாட்டு மக்களும் வந்து போனால் இன்னும் நல்லது.


கால்பந்து கொண்டாட்டம் போல நாடு மகிழ்ச்சியாக‌ ஜே,ஜே அல்லது சசிகலாவின் பரபரப்பு போல இருக்கும் போது கடத்தினால் எளிது.


காத்திருந்தார்கள், அட்டகாசமான வாய்ப்பு வந்தது.


அர்ஜெண்டினா ஸ்பெயினிடமிருந்து விடுதலை பெற்ற 150ம் வருட கொண்டாட்டம் தொடங்கியது.


நாடெல்லாம் விழாக்கோலம், உலக நாடுகளுக்கெல்லாம் அழைப்பு விடுத்து வெகு விமரிசையாக கொண்டாட தொடங்கினர்.


அவர்கள் சுதந்திரநாள் ஜூன் 9.


அதற்கு ஒரு மாதம் முன்பே கொண்டாட்டம் தொடங்கிற்று. தலைநகர் எல்லாம் உற்சாகம் ஏகபட்ட வெளிநாட்டுதலைகள்.


இது தான் வாய்ப்பு, அன்று 1960 மே மாதம் 11 . முகூர்த்த நேரம் குறித்தார்கள் இரவு 7.30, இடம் வழக்கமாக ஈச்மென் அவர் வந்து இறங்கும் பஸ்நிலைய பக்கம்.


அந்த பஸ் வந்தது ஈச்மெனும் இறங்கி பாவம்போல‌ நடந்து சென்றார். அங்கு ஒரு கார் பழுதாகி நின்றது ஒருவர் சரிசெய்துகொண்டிருந்தார்.  


ஒருவர் கதவு அருகில் ஒருவர் நின்றார். ஒருவர் கார்பக்கம் ஈச்மென் வரவும் தடுத்து கேட்டார், நன்றாக உடை அணிந்திருந்தவர்தான்.


"சாரி பார் த டிஸ்டபர்ன்ஸ், எக்ஸ்கியூஸ் மீ பாஸ், இந்த அட்ரஸ் எங்கிருக்குணு சொல்லமுடியுமா?"


ஈச்மென் அட்ரசை பார்த்து கொண்டிருக்கும் போதே இருவர் அவர்மேல் பாய்ந்தனர்.


அட்ரஸ் கேட்டவர் ஈச்மென் வாயில் பிளாஸ்திரி ஒட்டினார்.


பின் கை கால்கள் கட்டபட்டு 10 வினாடியில் காரின் பின்சீட் அடியில் கிடத்தபட்டார் ஈச்மென்.


ஈச்மெனின் ராணுவ பயிற்சிகள் எல்லாம் அவர்கள் முன் எடுபடவில்லை


மறைவிடத்திற்கு பறந்தது கார்.


அவரை பலத்த காவல் உள்ள வீட்டில் வைத்து உயரம் எடை மற்றும் இன்னபிற விவரங்களை குறித்துவிட்டு கேட்டார்கள் உங்கள் பெயர் என்ன?


அவர் சொன்னார் "ரிக்கார்டோ கிளமெண்ட்", அமைதியாக. அவர் முன்னால் இரு கடித உறை வைத்தார்கள்.


"நீங்கள் அலுவல் நிமித்தமாக 10 நாள் வேறு நகருக்கு செல்வதாக உங்கள் மனைவிக்கு கடிதம் எழுதுங்கள்.


இது ரகசியம் என்ற வாக்கியம் முக்கியம், அப்படியே இருவாரம் விடுமுறை கேட்டு அலுவலகத்திற்கும் ஒன்று எழுதுங்கள் என்றார்கள்.


அவரும் கண்மனி அன்போடு காதலன் என தொடங்கி அருமையாக எழுதிவிட்டார், அது ஈச்மென் மனைவிக்கு கிடைத்தது, கணவரின் கடந்தகாலம் தெரிந்தவரல்லவா?  அவரும் ரகசியம் காத்தார்.


அலுவலகமும் ஈச்மெனின் விடுமுறையினை ஏற்றுகொண்டது. நல்ல மனுஷன் அல்லவா? பாவம் ஏதும் அவசரம் போல என அவர்கள் போக்கில் இருந்தார்கள்.


8 நாள் வரை ரபி எய்டன் குழு ஈச்மெனிடம் ஏதும் கேட்கவில்லை.


அவருக்கு கடத்தியவர்கள் யார்? ஜெர்மானியரா? அமெரிக்கரா? ரஷ்யரா? கொள்ளையரா?


இல்லை ஹிட்லரின் நாசிக்களா? அல்லது பென்ஸ்கம்பெனி யூனியன் தகறாரா? என‌ ஏகபட்ட குழப்பம்.


அவராக கேட்டால் ஒருமுறை மட்டும் சொன்னார்கள் "ஒன்றுமில்லை ரிக்கார்டோ, நன்றாக சாப்பிட்டு ஓய்வெடுங்கள், விரைவில் விட்டுவிடுவோம்"


ஈச்மென் மனரீதியாக பாதிக்கபட்டிருந்தார், யாரோ கடத்தி எங்கோ வைத்திருக்கின்றார்கள்.


என்ன செய்யபோகின்றார்களோ? கடும் பதட்டம், மனரீதியான டார்ச்சர் இது.


தனி அறை ஒவ்வொரு நிமிடமும் செத்து செத்து பிழைத்தார் ஈச்மென்.


8 நாள் மொசாத் சும்மா இருந்தது , ஏன் என்றால் ஒருவேளை அர்ஜெண்டினா அரசு ஈச்மெனுக்கு பாதுகாப்பு வழங்கி இருந்தால் அடித்தெழுந்து தேடும்.


ஆர்பாட்டம் பண்ணும், எல்லா சடலங்களையும் கூட சோதிக்கும். விமான நிலையம், துறைமுகம் என சகல இடங்களும் அலசபடும், நிலமை எப்படி என கணிக்க செய்த உத்தி அது.


ஏற்கனவே ஈச்மென் மனைவி அமைதியாகிவிட்டார்.


கடிதம் எழுதாவிட்டால் மனைவி தலையை விரித்து அர்ஜெண்டினா கோர்ட்டில் "மன்னவனும் நீயோ, வளநாடும் உனதோ" என்றால் கிழிந்தது விஷயம்.


உடனே அர்ஜெண்டினா அரசாங்கம் அவரிடம் விளக்கம் கேட்கும்.


"ஏய் ஈச்மென் பாரு, ஈச்மென்பாரு,


ஹிட்லர் அரசின் வைரம் பாரு,


யூதவம்சம் ஒழிச்செடுத்த, ஆர்யனின் அழக பாரு,


நாசி படை உலகை வெல்ல,நாளை இவன் மன்னன் தானடா..


இவன் பெயருக்குள்ள நாஜி உண்டு உண்மைதானடா.."


ஓஓஓஓஓ என பிண்ணனி பாடலில் அரசுக்கு சகலமும் விளங்கும், பின்னர் மொசாத் குழுவினர் 11 பேருக்கும் இஸ்ரேலில் அஞ்சலி கூட்டம்தான்


மனைவியும் அமைதி, அலுவலகமும் அமைதி, இப்பொழுது அர்ஜெண்டினா அரசும் பரபரப்படையவில்லை.


மொசாத் புன்னகைத்தது, இனி கடத்தலாம், அதற்கு முன்பு மறுபடியும் ஈச்மெனின்டம் கேட்டார்கள்.


"உங்கள் பெயர் என்ன சொன்னீர்கள்?"


அந்த 8 நாட்களாக குழம்பி தவித்த ஈச்மென், ஒரு வார்த்தை கூட காதில் கேட்காத ஈச்மென், அலறி அடித்து சொன்னார் "சொன்னேனே ரிக்கார்டோ கிளமெண்ட்"


ரபி எய்ட்டன் சொன்னார் "இது உங்கள் அர்ஜெண்டினா பெயர், ஜெர்மனில் உங்கள் பெயர் என்ன?"



வியர்த்துகொட்டியது . அவருக்கு பதில் சொன்னார் "அடால்ப் ஈச்மென்".


அவருக்கு கொஞ்சம் புரிந்தது, தன் கடந்தகாலம் அறிந்தயாரோ தான் இதனை செய்திருக்கின்றார்கள்.


மொசாத் மெம்பர்கள் யாரும் ஒருவார்த்தையும் சொல்லவில்லை, அவரவர் வேலையை பார்க்க சென்றுவிட்டார்கள்.


இது தான் மொசாத்.


தன் இனத்தை கொன்றொழித்த படும் பாதகன் முன்னிருந்தாலும் உணர்ச்சிகளை வெளிகாட்டவில்லை, பயிற்சி அப்படி.


இதே வேறு யார் என்றாலும் ரபி எய்டன் இடத்தில் என்ன சொல்லியிருப்பார்கள்.


"டேய் ஈச்மென், அப்டியே 20 வருசம் பின்னால போ,


ஒரு யூத குடும்பம் உன் கால பிடிச்சி அழுதுதே,


ஞாபகம் இருக்காஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ"


என பேசியே சாகடிப்பார்கள்.


"டேய் ஈச்மென்..


உன்ன போட போறேன்டா அயர்ண்,


நீ கொன்னது யூதனை,


உன்ன தூக்கிறது தான் எங்க சாதனை"


என்றெல்லாம் முழக்கம் கேட்டிருக்கும்.


ஆனால் ஒரு தூசு கூட அவர் மேல் விழவில்லை, ஒரு தவறான வார்த்தை காதில் விழவில்லை.


ஈச்மெனை பிடித்தாகிவிட்டது, இனி இஸ்ரேலுக்கு கடத்தவேண்டும்.


இதுதான் மிக உச்சகட்ட டென்சன் நீர் ,நிலம், ஆகாயம் இம்மூன்று வழிகளில் அர்ஜெண்டினா நாட்டின் கான்ஸ்டபிளுக்கு கூட சந்தேகம் வராமல் கடத்தவேண்டும்.


குழு தீவிரமாக யோசிக்க தொடங்கியது.


எப்படியும் அர்ஜெண்டினா குடி நுழைவினை கடந்தாக வேண்டும்.


கடல் வழியாக எல்லாம் கடத்தமுடியாது, என்ன செய்யலாம்?


 

தொடரும்...





 


 

No comments:

Post a Comment