Monday, July 24, 2017

கமலஹாசா..காயத்திரி தாசா இனியாவது திருந்திவிடு





Image may contain: 1 person, smiling, text and close-up

ஓவியாவினை சில இடங்களில் கண்டித்த கமலஹாசன் மிக சர்ச்சையான வார்த்தைகளை சொன்ன காயத்திரியினை பற்றி ஒன்றும் சொல்லவில்லை, கமலஹாசன் காயத்திரியினை போட்டு தாக்கும் வாய்ப்பு இருந்தும் தவிர்க்கின்றார், அவரை காப்பாற்றுகின்றார் என்ற சர்ச்சை வெடிக்கின்றது


ஓவியா பண்ணி என சொன்னது குற்றமாம், ஆனால் காயத்திரி சேரி பிஹேவியர், மீன் காரன் என சொன்னதெல்லாம் குற்றமில்லையாம் என கமலை நோக்கி பாய்கின்றன ஓவியா படைகள்.


இன்னும் சபையில் பேசகூடாத ஏராளமான வார்த்தைகள் உண்டு,அவற்றில் நிறைய காயத்திரி பேசினாலும் கமலஹாசனிடம் இருந்து ஒரு எச்சரிக்கையுமில்லை





ஏற்கனவே கமலின் பிராமணபாசம் வெளிவருகின்றது என செய்திகள் வந்தன, காயத்திரியினை ஆதரித்து கமலஹாசன் அதற்கு வலுசேர்க்கின்றார்.

காயத்திரி ஏதோ லண்டன் மகாராணி போலவும், ஓவியா ஏதோ களையெடுக்கும் வேலைக்காரி போலவும் தான் காயத்திரி நடந்துகொள்கின்றார் என்பது எல்லோருக்கும் தெரிகின்றது.

ஆக கமல் காயத்திரியின் அட்டகாசத்திற்கு ஜால்ரா அடிக்கின்றார் என சர்ச்சை வெடிக்கின்றது, நாம் பார்த்தவரைக்கும் அதில் உண்மையும் இருக்கின்றது.

சீர் எனும் வார்த்தைக்கு எனக்கு அர்த்தம் தெரியாது என காயத்திரி சொல்லும்பொழுதே இழுத்து வெளியேபோட்டிருக்க வேண்டாமா? உலகில் உள்ள அத்தனை கெட்டவார்த்தையும் தெரிந்த அவருக்கு சீரான எனும் சொல்லுக்கு அர்த்தம் தெரியாது என சொன்னதை சபை நம்புகின்றதா?

கமல் நம்பலாம், உலகம் ஏன் நம்ப வேண்டும்?

ஏன் அப்படி காயத்திரிக்கு அஞ்சுகின்றார் கமலஹாசன்? எதற்காக இவ்வளவு தாராளம்? காயத்திரி பாஜகவின் ஏதோ ஒரு பொறுப்பில் உண்டு என்ற தூரநோக்கு சிந்தனையோ?

கமலஹாசன் கவனமாக இருப்பது நல்லது, அதிமுக அமைச்சர்கள் போல அல்ல , மிக மிக தீவிரமான ஓவியா பக்தர்படை பெருகியிருக்கின்றது, அவர்களுக்கு அமைச்சர்களிடமிருந்து ஆதரவு கிடைத்துவிட்டால் கமலுக்கு காதில் கம்மல் போட்டு இழுத்துவிடுவார்கள்.

ஊர் வாயினை மூட முடியாது கமலஹாசன், அதுவும் ஓவியா ரசிகர்களை கட்டுபடுத்தவே முடியாது.

ஆக காயத்திரிக்கு உலக நாயகன் உலகில் இல்லாத அநியாய சப்போர்ட் செய்கின்றார் எனும் ஓவியா தரப்பின் பகையினை கமல் தேடிகொள்ளாமல் இருப்பது நல்லது

பத்துமலை முருகனுக்கு ஓவியாவிற்காக பால்குடமும், காவடியும், மொட்டையும் நேர்ச்சை செய்திருக்கும் Omm Prakash பத்துமலை முருகன் முன் "பத்துமலை முருகா, ஓவியாவினை காப்பாற்று, கமலஹாசனை விடாதே, காயத்திரியினை நோக்கி வேலை வீசு, ஜூலி மீது கல்லை வீசு.." என மிக உக்கிரமாக வேண்டிகொண்டிருக்கின்றார்.

இதனை போல எத்தனை ஆலயங்களில் ஓவியாவிற்கு எத்தனை ஆயிரம் பேர் முட்டி மோதி பிரார்த்திக்கின்றார்களொ தெரியாது, கமலஹாசன் இந்த சாமி குற்றத்தில் சிக்கும் வாய்பிருக்கின்றது.

கமலஹாசன் இன்னும் திருந்தாமல் காயத்திரியினை காப்பாற்றிகொண்டிருந்தால் அடுத்த நாமினேஷனும் எலிமினேஷனும் நிச்சயம் கமலஹாசனாகத்தான் இருக்க முடியும்.

"பாருங்கள் மக்களே, அந்த பச்சைமண் ஓவியாவிற்கு வஞ்சகம் செய்யும் , அந்த திமிர்பிடித்த காயத்திரியினை கண்டிக்க தயங்கும் இந்த கள்ளன் கமலஹாசன் தான் எங்கள் பொற்கால ஆட்சியினை விமர்சிக்கின்றான், இவன் சொல்வதெல்லாம் பொய்.." என அதிமுக அமைச்சர்கள் கிளம்பினால் என்னாகும்?

"கமலஹாசா..காயத்திரி தாசா இனியாவது திருந்திவிடு" எனும் அளவிற்கு நிலமை செல்கின்றது.





 


 

No comments:

Post a Comment