Tuesday, July 25, 2017

வெல்ல பிறந்தவன் : 03



Image may contain: horse and text


அன்று ஜுலை 26, கி.மு 356 அலெக்ஸாண்டர் பிறந்திருந்தான்


பிலிப்பிற்கோ ஏக மகிழ்ச்சி, பெரும் விழாவாக அவனின் பெயர் சூட்டும் விழாவினை நடத்தி கிரேக்க குருமார்கள் புடைசூழ அவனுக்கு மூன்றாம் அலெக்ஸாண்டர் என பெயரிட்டார், அதாவது அவனுக்கு முன்பும் அலெக்ஸாண்டர்கள் இருந்திருக்கின்றார்கள் தம்பிடிக்கு பிரயோசனம் இல்லை.


இவனை பெரும் வீரனாக்கி மாசிடோனியாவின் புகழை பரவச்செய்வேன் என அவர் முழங்கியபொழுது நிச்சயம் சுபமுகூர்த்த நேரமாகத்தான் இருந்ந்திருக்க வேண்டும்


அலெக்ஸாண்டர் தாயின் மடியில் தவழ ஆரம்பித்தான், தந்தையோ போர்க்களம் செல்லுதல் ஆட்சி என இருந்தாலும் ஓரக்கண்ணால் அவனை கண்க்காணித்துகொண்டே இருந்தார்


இந்த இடத்தில் ஒருவிஷயம் சொல்லியாக வேண்டும், அலெக்ஸாண்டரின் தந்தையினை விட மகா உறுதியும் வீரமும் தைரியமும் மிக்கவள் அவன் தாய் ஒலிம்பியஸ்


சில சமயங்களில் மாமன்னன் பிலிப்பினையே அவள் அசால்ட்டாக முறைத்த சம்பவங்களும் உண்டு, சாதரண சம்சாரியெ சொல்ல முடியாதபொழுது மாமன்னன் பிலிப் வெளிசொல்ல முடியுமா?


மன்னன், அதுவும் மாமன்னன் போதாதா ஒலிம்பியஸ் தவிர ராணிகள், அழகிகள், நடன மங்கைகள் என நிறைய வசதி அவருக்கு இருந்ததால் பிலிப்பிற்கு சிக்கல் இல்லை, ஆனால் ஒலிம்பியசுக்கு அதுதான் சிக்கல்


அந்த முரட்டுகாரியின் கையில்தான் அலெக்ஸாண்டர் வளர்ந்தான், அவள் அன்னை எவ்வளவு தைரியசாலி என்றால் செல்லபிராணியாக விஷ‌ பாம்புகளை வளர்த்தவள், அவ்வளவு தைரியம்


ஆனால் அவள் தன் உயிராக அலெக்ஸாண்டரை கருதினாள், பாலும் உணவும் கொடுக்கும்பொழுதெல்லாம் வீரமிக்க கிரேக்க கதைகளை அவனுக்கு ஊட்டினாள், அவன் இதயம் அக்கதைகளால் நிரம்பியது, தன்னையும் அதில் ஒருவனாக அன்றே நினைத்துகொண்டான்


மாவீரன் சிவாஜியினை அவர் அன்னை உருவாக்கினாள் என்றால் அலெக்ஸாண்டரின் வெற்றியிலும் அந்த அன்னைக்கு பங்கு உண்டு


8 வயதுவரை அலெக்ஸாண்டர் அவரிடம்தான் இருந்தார், பின்பு ஒரு குரு அமர்த்தபட்டு அரசபாடங்கள் போதிக்கபட்டன, வருங்கால அரசனுக்கான தயாரிப்பு அது


லியோனடஸ் எனும் குரு அமர்த்தபட்டார், கிரேக்க‌ மன்னனுக்கு முதல் தேவை அபரிமிதமான கடவுள் பக்தி அதுதான் முதலில் அவனுக்கு போதிக்கபட்டது, பின் சண்டை முதல் சமயோசித்த புத்திவரை போதிக்கபட்டது


எல்லாவற்றையும் முதலில் உள்வாங்கிவிட்டு பின் தன் சந்தேகங்களை கேட்பது அலெக்ஸாண்டர் பாணி, அப்படி எல்லாம் கற்றுகொண்டிருந்தான்


அன்னை விதைத்த கிரேக்க இதிகாச கதைகளுக்கு உருவம் கொடுத்து அவர்களை அலெக்ஸாண்டர் மனம் முன் நிறுத்தினார் லியோன்டஸ்


நிதானம், கூர்மை, வேகம் என பல நுட்பங்களை அவன் அவரிடம்தான் படித்திருந்தான், அரண்மனையில் நடக்கும் இந்த விஷயங்களை பிலிப்பும் கண்காணித்தான்


எப்பொழுதாவது மகனுடன் அவன் பேசுவது வழக்கம், அப்பொழுதெல்லாம் தன் மாபெரும் கிரேக்க கனவினை அவன் சொல்வது வழக்கம்


ஒருநாள் பேச்சு வெளிநாடுகளுக்கு சென்றது, பேசிகொண்டார்கள்


தந்தையே மாசிடோனியாவினை கிரேக்கத்தில் தலைசிறந்த நாடாக மாற்ற போராடுகின்றீர்கள், இதில் வென்றுவிட்டால் அடுத்து என்ன செய்வீர்கள்


நமக்கு பெரும் தொல்லையான பாரசீகர்களை வெல்வேன், பாபிலோனை கைபற்றுவேன்


ஏன் தந்தையே அவர்கள் பாபிலோன் அவ்வளவு வளமானதா?


இல்லை, அதை தாண்டினால்தான் இந்தியாவினை அடைய முடியும். பெரும் வளமான நாடு, பெரும் வரலாற்று பின்புலம் கொண்ட சொர்க்கம். அவர்களின் ராமாயனமும், மகாபாரதமும் பெரும் காவியங்கள்


நீ ஆட்சியில் ராமனாகவும், மதிவியூகத்தில் கிருஷ்ணனாகவும் இருக்க வேண்டும்" என சொல்லிகொண்டே சென்றார்


நம்புகின்றவர்கள் நம்பலாம், நம்பாதவர்கள் செல்லலாம். ஆனால் அன்றைய ராமாயணமும், மகாபாரதமும் அவ்வளவு பெரும் இடத்தில் உலகெல்லாம் இருந்தன, அதன் தாக்கம் அப்படி இருந்தது


இந்தியா அப்படி ஒரு உயர்ந்தநாடா? நான் செல்லமுடியுமா? என அவன் கனவு கண்டது அப்படித்தான் , இந்தியா கனவு அலெக்ஸாண்டருக்கு அன்றுதான் விதைக்கபட்டது


அதன் பின் கொஞ்ச காலம் சென்றது அவனுக்கு 12 வயது ஆகியிருந்தது, தந்தையுடன் போர்களம் தவிர எல்லா இடங்களுக்கும் சென்றான், அப்பொழுதுதான் அந்த சம்பவம் நடந்தது


அது ஒரு குதிரை பந்தய விழா, நமது ஊர் ஜல்லிகட்டு போன்றது. அதில் ஒரு கருப்பு குதிரை சவால் விட்டுகொண்டிருந்தது, அது தெசாலி நகரத்து குதிரை


செதுக்கபட்ட குளம்புகளும், அழகுபடுத்தபட்ட வாலும் , பள பள என மின்னும் கட்டுறுதியான உடலும் , கழுத்தில் சரியும் முடியுமாய் மிக கம்பீரமாக அக்குதிரை நின்று கொண்டிருந்தது


(யுத்தத்தில் கிரேக்கரும், ரோமானியரும், பாரசீகரும் ஜொலிக்க முதல் காரணம் குதிரைபடை, செங்கிஸ்கானும் அதனைத்தான் நம்பியிருந்தான்


குதிரைபடை என்பது இன்றுள்ள அமெரிக்க விமானபடைக்கு அன்று சமம்


அதிலும் ஐரோப்பியர்களுக்கு அந்த குதிரை வளர்ப்பு அட்டகாசமாக வந்தது, அங்கிருந்துதான் துருக்கி வழியாக நமக்கெல்லாம் வந்தது. நாம் அரபு குதிரை என சொல்லிகொண்டோம்


உண்மையில் அவை ஐரோப்பிய குதிரைகள், அரேபியா என்பது சந்தை அவ்வளவுதான். மற்றபடி இந்தியா அவர்களின் உயர்சாதி குதிரைகளை விரும்பும், அவர்களோ நமது யானையினை அச்சமாக பார்ப்பார்கள், ஆம் அவர்களுக்கு யானை எல்லாம் பழக்கமே இல்லை


இப்படி குதிரைகளுக்கு பெரும் மவுசு இருந்த காலத்தில்தால் அந்த போட்டி நடந்தது.)


Image may contain: 1 person

பொதுவாக தெசாலியருக்கும் மாசிடோனியருக்கும் ஆகாது, இந்தியா பாகிஸ்தான், திமுக அதிமுக‌ போன்ற மோதல் அது. அந்நிலையில் மாசிடோனியர் அக்குதிரை முன் தோற்பது அதனை கண்டுகொண்டிருந்த பிலிப்பிற்கு பெரும் அவமானமாக இருந்தது.

இந்த மாவீர மாசிடோனியாவில் இக்குதிரையினை அடக்க ஒருவனும் இல்லையா? என சீறினான் பிலிப், கூட்டத்தில் சத்தமே இல்லை, தெசாலி நாட்டு குதிரை உரிமையாளன் ஒரு மாதிரி வெற்றி சிரிப்பு சிரித்துகொண்டிருந்தான்


மைதானத்தில் ஒரு சத்தமுமில்லை, அக்குதிரையிடம் அடிவாங்கியவர்கள் ஆங்காங்கு விழுந்து கிடந்தார்கள். பெரும் அமைதி


ஒரு குரல் கேட்டது, இக்குதிரையினை நான் அடக்கட்டுமா? கூர்ந்து பார்த்தான் பிலிப் , பின் இது விளையாட்டு என விட்டுவிட்டான், அக்குரலோ கேட்டுகொண்டே இருந்தது


அது சிறுவன் அலெக்ஸ்டாண்டரின் குரல்


ஒரு கட்டத்தில் சொன்னான் பிலிப், மகனே இது விளையாட்டல்ல குதிரை வித்தகர்கள் எல்லாம் அதோ மண்ணில் கிடக்கின்றார்கள், நீயோ சிறுவன் இந்த விளையாட்டு வேண்டாம்


ஆனால் உறுதியாக கேட்டான் அலெக்ஸாண்டர், அது கூட்டம் என்பதால் வருங்கால இளவரசனை பாசத்தின் காரணமாக அரசர் தடுக்கின்றார் எனும் அவப்பெயரையும் அவன் ஏற்க விரும்பவில்லை


மகனே நீ செல், அடக்கிவிட்டால் நிச்சயம் குதிரை உனக்கு என்ன விலை என்றாலும் வாங்கிதருவேன், ஆனால் இப்பொழுது நீ அடிபடாமல் வருவதுதான் எனக்கு முக்கியம் என சொல்லிவிட்டான்


சொல்லிவிட்டு தன் சேவகர்களுக்கு கண்ணை காட்டினான், அதன் அர்த்தம் அலெக்ஸாண்டருக்கு ஆபத்தென்றால் அந்த கருப்பு பேய் உயிரோடு இருக்க கூடாது, அதன்னை கொன்றாவது அவனை காப்பாற்றுங்கள் என்பது


எரிய தயாரான ஈட்டியுடன் பாதுபாவலர்கள் தள்ளி நின்றனர், நடுவில் குதிரை தனியாக நின்றது


அருகில் சென்றான் அலெக்ஸாண்டர், அதன் கண்களை பார்த்தான், என்றுமே பிரச்சினையினை அதன் தன்மையில் பார்ப்பவன் அல்ல அவன், அது எங்கே தொடங்குகின்றது என்பதுதான் அவன் முதலில் நோக்குவது


குதிரையினை தொட்டால் அல்ல, கிட்ட சென்றாலே அடிக்கின்றது என்றால் அதன் பார்வையில்தான் சிக்கல், இதுதான் அலெக்ஸாண்டர் கணிப்பு


அதனால் கண்களை நோக்கியபடியே அருகில் சென்றான், அக்குதிரையும் அவனை நோக்கிவிட்டு அமைதியாக இருந்தது


கூட்டத்தின் இதயதுடிப்பு எகிறியது, மன்னன் பிலிப் பதற்றத்தின் உச்சியில் இருந்தான்


அடுத்து தன் குதிரை மாசிடோனிய இளவரசனை தூக்கி எறிய போகின்றது என மகிழ்ந்தான் குதிரைக்காரன், எப்படிபட்ட பெருமை


அலெக்ஸசாண்டர் கொஞ்சம் அஞ்சாமல் அதன் அருகில் சென்றான், மெல்ல அதன் உடலை தொட்டான், சிலிர்த்தது குதிரை, வானத்தை பார்த்தான் பின் குதிரையினை பார்த்தான் மாறி மாறி பார்த்த அலெக்ஸாண்டரை கண்டு கூட்டம் குழம்பியது


மெல்ல அதனை திருப்பினான், குதிரையே குழம்பியது, இதுவரை எல்லோரும் வருவார்கள் முதுகில் ஏற முயற்சிப்பார்கள், நாம் தூக்கிபோட்டு மிதிப்போம் இவன் என்ன இப்படி திருப்புகின்றான்? சரி திரும்புவோம்


மெல்ல திருப்பியபின் அதோடு கொஞ்ச தூரம் நடந்தான், பிலிப்பிற்கு திகைப்பு, அடக்குதல் என்றால் ஏறி அமரவேண்டும் அல்லவா? இவன் என்ன பூனைநடை நடக்கின்றான்? பயிற்சி போதாதோ? அந்த ஆசிரியரை சாத்தவேண்டும் என எண்ணிகொண்டான்


கொஞ்சதூரம் நடந்த அலக்ஸாண்டர் நொடிப்பொழுதில் எதனையோ குதிரையிடம் மாற்றம் கண்டான், நொடிபொழுதில் ஏறி அமர்ந்தான், குதிரை அவனை தள்ளவில்லை மாறாக பணிந்து சுமந்தது அதன் கழுத்தில் தடவிகொடுத்து சுற்றிவந்தான் அலெக்ஸாண்டார்


கூட்டம் ஆர்பரித்தது, பிலிப் என் மகனே என அலறினான், ஆசிரியரோ இறுதிசுற்று கிளைமாக்ஸ் வில்லன் போல என் ஸ்டூடண்ட், ஹி இஸ் மை ஸ்டூடண்ட் என கிரேக்கத்தில் கை உயர்த்திகொண்டிருந்தான்


மாவீரன் அலெக்ஸாண்டர் வாழ்க எனும் குரல் அப்பொழுது மைதானத்தை நடுங்க வைத்தது


அத்தோடு அக்குதிரை அவனோடு ஐக்கியமாயிற்று, ஆம் அவனின் வாழ்வுவரை அவனோடு இருந்த குதிரை அதுதான்


புக்கிலேஸ் என பெயரிட்டான், அது அலெக்ஸாண்டரின் உற்ற தோழனாயிற்று, வரலாறு அப்படித்தான் சொல்கின்றது, ராமனின் வரலாற்றில் அனுமான் போல, அலெக்ஸாண்டர் வாழ்வில் புக்கிலேஸ் இருந்தது.


கிராமங்களில் சில வீடுகளில் மாடுகளை கால்ராசி உள்ளமாடு என்பார்கள், அதாவது அது வந்தபின் அங்கு வளம் கூடியிருக்கும், அப்படி புக்கிலேஸ் அலெக்ஸாண்டரின் ராசியான குதிரையாயிற்று


பெரும் மாவீரனான அலெக்ஸாண்டர் அக்குதிரையின்றி ஒரு யுத்தமும் நடத்தவில்லை எனும் அளவிற்கு அவனோடு இருந்தது


பின்னர் பார்க்கலாம்


மெல்ல கேட்டான் பிலிப், மகனே இந்த சண்டியினை எப்படி அடக்கினாய்? நமது குதிரைபடை தலைவானாலே முடியவில்லையே, நீ எப்படி?


அவன் சொன்னான் "தந்தையே அது மிக நல்ல குதிரை, தவறு உம்மீது இருந்தது அதாவது நீர் சூரியன் இருக்கும் திசையில் இருந்தீர், நீர் மன்னன் என்பதால் குதிரையினை உம்மை நோக்க்கி நிறுத்தினார்கள்


கவனித்தீர்களா, அதுவரை குதிரை குனிந்துதான் நிற்கும், நம்மவர் சென்று ஏறியவுடன் அதன் தலைநிமிரும் அதன் கண்களுக்கு சூரிய வெளிச்சத்தால் அது மிரண்டது, அது பலமிக்க குதிரை என்பதால் இவர்களை வீழ்த்திவிட்டது, அது வெளிச்சத்தில் மிரண்டதுதான் காரணம்


நான் அதனை வேறுதிசைக்கு திருப்பி அதன் மேல் ஏறியவுடன் அது நன்றாய் ஒத்துழைத்தது, குதிரையின் மனநிலையினை படிக்காதவன் குதிரைவீரன் ஆகமுடியாது"


பிலிப் கொஞ்சநேரம் பேசவே இல்லை, அரண்டு நின்றார் லியோனடஸ்.


ஆசிரியர் லியோன்டஸ் இச்சம்பவத்தின் பின் அதிர்ந்து போனார், மெல்ல பிலிப்பிடம் சொன்னார்


மாமன்னா இவன் சாதாரணவன் இல்லை, இவனிடம் அபரிமிதமான ஆற்றல் இருக்கின்றது, மிக சிறந்த ஆசிரியன் கிடைத்தால் இவன் பெரும் அடையாளமாக ஜொலிப்பான், நம்மூரில் அப்படி ஆசிரியர் இல்லை


இவனுக்கு பெரியவர்தான் லாயக்கு, ஆனால் வரமாட்டார் இனி உங்கள் சமார்த்தியம்


பெரியவர் என அவர் சொன்னது, மேதை அரிஸ்டாட்டில் வரலாற்றின் மிகபெரும் ஞானியான அந்த அரிஸ்டாட்டில்


பொதுவாக கிரேக்க கலாச்சாரத்தில் சாக்ரடீசுக்கு பின் ஞானிகளுக்கு மவுசு இருந்தது, அரசர்களும் அஞ்சித்தான் பெசுவார்கள், சாக்ரடீஸ் ஏதன்ஸ் பக்கம் இருந்தார்


இவன் மிகசிறந்த அறிவாளி, இவனுக்கு நீங்கள் பாடம் கற்பித்தால் மிகபெரும் கிரேக்க தலைவன் கிடைப்பான் என தலையினை சொரிந்து கொண்டே அரிஸ்டாட்டிலிடம் சொல்லிகொண்டிருந்தார் லியோனடஸ்


அரிஸ்டாட்டில் அந்த சிறுவனை கண்டார், அவனின் கண்களிலே அவருக்கு நம்பிக்கை வந்தது


 

தொடரும்...














 


 

No comments:

Post a Comment