Tuesday, August 15, 2017

நம் தாயின் மணிக்கொடி கம்பீரமாய் பறக்கட்டும்



"தாயின் மணிக்கொடி பாரீர், 
அதை தாழ்ந்து பணிந்து வணங்கிட வாரீர்"


Image may contain: sky and cloud


200 ஆண்டுகால போராட்டம், அடித்து கேட்டு பின்னர் அமைதியாய் கேட்டு, அடி வாங்கி போராடி, ஒரு கட்டத்தில் வெள்ளையனுக்கும் மாபெரும் சிக்கல் ஏற்பட்டு சுதந்திரம் கிடைக்கும் நேரத்தில் கூட வஞ்சகமாய் உடைக்கபட்டு 2 துண்டுகளாக பிரிக்கபட்டு சிதைக்கபட்டது சுதந்திர இந்தியா


அது சுதந்திரம் பெறும்பொழுதே மாபெரும் கலவரம் குழப்பம், பிரிட்டிசார் விதைத்து சென்ற மத பிரிவினையின் உச்சம், ஒரு கட்டத்தில் மாபெரும் தலைவனின் உயிர்பலியோடுஅது நின்றது,


சுதந்திரம் கொடுத்தாகிவிட்டது இன்னும் 2 ஆண்டில் இந்தியா 100 துண்டாக சிதறும் என்றார்கள், அதனை எல்லாம் எதிர்கொண்டு கடந்து உலகிற்கே அதிர்ச்சி கொடுத்தோம்


இந்தியர்களுக்கு ஜனநாயகம் தெரியாது, ஆளதெரியாது என்பதை எல்லாம் பொய்யாக்கி ஜனநாயக தேசமாக வளர்ந்தோம்.


பின்னர் காஷ்மீரை காட்டி 2 போர்கள், அதையும் தாங்கியது தேசம், நண்பனாய் நினைத்து ஐ.நா சபையில் நிரந்தர இடம்கொடு என வாதாடும் பொழுதே சுய உருவம் காட்டிற்று சீனா, ஆசிய நாடு ஒன்றிற்கு ஐ.நாவில் அந்தஸ்து என நாம் அவர்களுக்காய் போராட , அவர்களோ ஆசியா தாதா நான் என முதுகில் குத்திற்று. அதையும் தாங்கி வளர்ந்தது இந்தியா, மறுபடியும் போர், இன்னும் ஏராள பிரச்சினைகள் ஆனால் இந்தியா அசரவில்லை.


மீண்டும் போர், அதையும் தாண்டி மத கலவர முயற்சிகள், மக்கள் தொகை பெருக்கம், எப்போதும் நேரடியாக கொஞ்சமும், மறைமுகமாக நிறையவும் தொல்லை கொடுக்கும் வல்லரசுகள்.


ஆளுக்க்கொரு கட்சி, அவனவக்கொரு கொள்கை, அவர்களுக்கென ஒரு வேலையற்ற கூட்டம், வெற்று கூச்சல், வீண் ஆர்ப்பாட்டம் என தினம் ஒரு பிரச்சினையை சந்தித்தாலும் வளர்கின்றது இந்தியா, குதிரை வேகமாக ஓடலாம், ஆனால் யானை எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் பலமானது, அதுதான் இந்தியா.


அன்று சுரண்டிபோட்ட பாத்திரமாக ஏழை இந்தியாவினை விட்டு சென்றான் வெள்ளையன், அந்த லட்சணத்தில் நாம் பாகிஸ்தானுக்கும் நஷ்ட ஈடு கொடுத்து திவாலில் இருந்தோம், தேர்தல் நடத்த கூட பணமில்லை.


உலகம் இரண்டாம் உலகப்போரின் தாக்கத்தில் இருந்ததால் பெரும் மந்த நிலை.


அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டோம். ஐந்தாண்டு திட்டம் என சொல்லி விவசாயம், பால், கடல் உணவு என உணவுக்கு தன்னிறைவு அடைந்தோம்


கல்விசாலைகள் கட்டி, அதற்காக பெரும் திட்டம் தீட்டி கல்வியில் உச்சம் பெற்றோம்.இன்று உலகநாடுகள் ஐ.டி உட்பட பல தொழில்களில் இந்தியாவினை மதிக்கின்றது என்றால் அந்த கல்விதான் அடிப்படை


ஒரு துப்பாக்கி கூட செய்ய தெரியா தேசமாக இருந்தோம், கொஞம் கொஞ்சமாக சுதாரித்தோம். இன்று உலகின் ராணுவபலம் பொருந்திய நாடுகளின் முதல் 5 இடங்களில் இருக்கின்றோம்


சைக்கிளில் ராக்கெட் பாகங்களை கொண்டுசென்றுதான் விண்வெளி ஆராய்ச்சிகளை தொடங்கினோம், நமக்கு கைகொடுப்பார் இல்லை. தத்தி திணறி தோல்வியுற்று படிபடியாக முன்னேறி இன்று கிரையோஜனிக் என்ஜின் வரை செய்து அசத்தியிருக்கின்றோம், செவ்வாய் கிரகம் வரை இந்தியரால் தொட முடிகின்றது.


சிறிய தேசங்கள் முன்னேறுவது விஷயம் அல்ல. இந்த மாபெரும் தேசம் இவ்வளவு பெரும் மக்களை வைத்துகொண்டு அதுவும் பல இன மொழி மக்களை வைத்துகொண்டு முன்னேறுவது வெகு சிரமம்


இன்னொரு நாட்டிற்கு இது சாத்தியமே இல்லை. அந்த அதிசயத்தை நாம் செய்துகொண்டிருக்கின்றோம்.


இவ்வுலகில் உள்ள நாடுகளை கவனியுங்கள், பல நாடுகளில் மக்கள் வாழவே முடியாது,பொறுப்பற்ற அரசாங்கமும் மனித தன்மை இல்லா போராட்டங்களும்,இன்னும் பற்பல கொடுமைகளும் பெரும் அச்சுறுத்தலை மக்களுக்கு கொடுக்கின்றது, உணவு இல்லை, கல்விசாலை இல்லை,ராணுவம் இல்லை, நீதிமன்றம் இல்லை,காவல் இல்லை, ஒன்றுமே இல்லை.


சிலநாடுகளில் ராணுவ ஆட்சி மட்டும் உண்டு, அது பெரும் ஆபத்து, சாப்பாட்டில் உப்பு போடுவதை கூட ராணுவம்தான் நிர்மானிக்கும்.


ஒரு வகையில் நாமெல்லாம் அதிர்ஷ்டசாலிகள், பொருளாதாரம் ஏறும் இறங்கும், ஆனால அமைதியாய் வாழ்கின்றோம், நிம்மதியாய் உறங்கி நம்பிக்கையாய் எழுகின்றோம், என்றாவது இங்கு வாழவே முடியாது என்று குடும்பத்தோடு அகதியாய் நாட்டை விட்டு கிளம்பியிருக்கின்றோமா?, இதுதான் சுதந்திர இந்தியாவின் வெற்றி.


எந்த நாட்டில் சிக்கல் இல்லை? இவ்வுலகின் எல்லா நாட்டிலும் சிக்கலும், வறுமையும் உண்டு, இந்தியாவிலும் அப்படி சில சர்ச்சைகளும் பிரச்சினைகளும் இருக்கலாம். அதற்காக இத்தேசம் மகா மோசம் என எவனாவது சொல்வான் ஆனால் அவனை கடலில் தள்ளுதல் நன்று.


அது மோசம், இது மோசம், எல்லாமும் மோசம் எல்லாம் அசிங்கம் என குணா கமலஹாசன் போல மோச ராகம் பாடும் பத்திரிகைகளும், தொலைகாட்சிகளும் ஒன்றை மறந்து விடுகின்றன.


சில நாடுகளில் முகநூல் கூட கிடையாது, சீனாவில் தடைசெய்யபட்ட ஊடகங்கள் சீன பெருஞ்சுவரையும் தாண்டும், இன்னும் சில நாடுகள் செவ்வாய் கிரகத்தில் மனிதனின் நிலைபோல, உலகைவிட்டே துண்டிக்கப்ட்டிருப்பார்கள், ஆனால் இந்தியா அப்படி அல்ல‌


காந்தி முதல் மோடி வரை விளாச முடிகிறது, கார்ட்டூன்கள் போட்டு கலைஞர் வரை கலாய்க்கமுடிகிறது, பெரும் ஊழலை கூட அனாசயமாய் டீகடை பெஞ்சில் விவாதிக்க முடிகிறது, இது எத்தனை நாடுகளில் சாத்தியம்?


ஏராளமான நாடுகளில் இதெல்லாம் நினைத்தே பார்க்கமுடியாத விஷயங்கள். ஒரு வார்த்தை அரசினை விமர்சித்தாலே பிடுங்கி விடுவார்கள். காலத்திற்கும் சிறை அல்லது கல்லறை.


இத்தேசத்தில் எல்லா உரிமையும் மிக அதிகமாகவே கொடுக்கபட்டிருக்கின்றது.


நமது பொது சுதந்திரத்திற்கு கேடு வரும்பொழுது கத்த முடிகிறது, கொடி பிடித்தோ அல்லது ஊர்வலமோ, சில நேரங்களில் வேறுவகையிலோ எதிர்ப்பினை காட்ட முடிகிறது, 5 வருடம் பொறுத்தால் ஆட்சியை தூக்கி எறிய முடிகிறது, காலத்திற்கும் ஆட்சியே மாறாத நாடுகளை நினைத்துபாருங்கள்??


இந்தியா கடந்த 70 ஆண்டுகளில் கடந்தபாதை மிக சிக்கலானது, எவ்வளவு இழப்புகள், எவ்வளவு நெருக்கடிகள், நிறைய துரோகங்கள்,முக்கியமாக பெட்ரோல் முழுதும் இறக்குமதி, அதனையும் தாண்டி வளர்ந்திருக்கின்றோம் அல்லவா? அதுதான் சுதந்திர வெற்றி.


1960களில் ஒரு நுட்பத்தினையும் தரமாட்டேன் அல்லது தரவிடமாட்டேன் என அடம்பிடித்த அமெரிக்கா, தனது செயற்கை கோள்களை ஏவுவதற்கு இந்திய உதவியை நாடுகின்றது அல்லவா? அது வெற்றி.


இந்தியாவின் உதவியின்றி தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் அமைதி சாத்தியமில்லை என உலகம் கருதுகின்றதல்லவா அது வெற்றி. 1962 போல் அல்ல, நாம் அடித்தால் மறுநொடி இந்திய ஏவுகனைகள் ஷாங்காய் வரை தாக்கும் என சீனா யோசிக்கின்றது அல்லவா? அது வெற்றி.


ஐ.நா சபையில் நிரந்தர உறுப்பினராகலாம் எனும் அளவிற்கு தனது முத்திரையினை உலக அரங்கில் பதித்திருக்கின்றது அல்லவா? இது தான் வளர்ச்சி.


சொன்னால் சொல்லிகொண்டே செல்லலாம், அவ்வளவு குறிப்பிடதக்க முன்னேற்றம். அதனாலதான் 1998ல் நடந்த கிழக்காசிய பொருளாதார வீழ்ச்சி, 2008ல் நடந்த சிக்கல், சமீபத்திய கிரீஸ் திவால் மிரட்டல் இவை எல்லாம் இந்தியாவினை தாக்க முடியவில்லை. காரணம் மெதுவாக நடந்தாலும் பலமிக்க யானை இது.


இந்தியா சில வெளிநாட்டு விஷயங்களில் கண்டும் காணாமலும் செல்லலாம்,அல்லது புத்தர் போல மாபெரும் மவுனம் காக்கலாம், காரணம் சில விஷயங்களில் ஓங்கி அடித்தால் மேற்குலகின் பொருளாராதார தடை எனும் ஆயுதம் இந்தியா மீது வீசபடும்.


அவ்வாறு வீசினால் நவீன அறிவியல் சாதனம்,மருந்து பொருள், வெளிநாட்டு எந்திரங்களின் மாற்றுபாகங்கள், மருந்துகள் என ஏதும் இந்தியாவிற்குள் வராது.
விவசாயத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம், நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளில் அதிக சிரத்தை, பெரும் செலவினை விழுங்கி கொண்டிருக்கும் ராணுவ கருவிகள் இறக்குமதிக்கு பதிலாக உள்நாட்டு தயாரிப்புகள், இன்னும் தொழிலதிபர்கள் மேல் கொஞ்சம் கட்டுப்பாடும் முறையான வரிவிதிப்பு இவைகளில் கவனம் செலுத்தினால் மட்டும் போதும்.


இந்த ஜிஎஸ்டி அந்த வரிவசூலினை சரியாக செய்தால் போதும்.


இன்று மேற்குலகின் பொருளாராதார தடைகளை எல்லாம் டிஷ்யூ பேப்பராக கசக்கி தூக்கி எறிந்து, அனாசயமாக அதிரடியாக‌ விளையாடுகின்றார்களே பலமிக்க ரஷ்யர்கள், வட கொரியர்கள் அவர்களை போல நாமும் உலகை ஆட்டலாம்.


கருப்புகொடி, சிகப்பு கொடி, புறக்கணிப்புகள் எல்லாம் அரசுக்கு செய்யகூடியவையே அன்றி, நாட்டிற்கு எதிராக அல்ல‌


நாடு வேறு, அரசாங்கம் வேறு.


இந்தியா அமைதியான நாடு, அதிலும் நமது பகுதி மிக நிச்சயமாக ஆனந்தமான‌ பகுதி, அந்த அருமையை உண‌ரவேண்டுமானால் சுதந்திர தினத்தன்று டிவியில் 20 வயது நடிகை 120 கோடிமக்களுக்கும் பேட்டியளிப்பார் அல்லது சினிமா குப்பைகள் அல்லது பட்டிமன்ற அரட்டைகள் ஓடிக்கொண்டிருக்கும்


அல்லது சாராய அரசியல்வாதிகள், ஊழல்வாதிகள் உணர்ச்சிமிக்க சுதந்திரதின வாழ்த்துக்களை சொல்வார்கள், உடனே அலைவரிசையை மாற்றிவிட்டு


பல குழப்பமான நாட்டு அரசுகளையும், சிக்கலான வாழ்க்கை வாழும் வடகொரியா போன்ற நாடுகளையும், பலமான அரசுகள் இல்லாததால் கொடூரமான தீவிரவாதத்திற்கு பலியாகும் நாடுகளை பாருங்கள்.


எத்தனை கொடூர அரசுகள், எத்தனை காட்டுமிராட்டிதனங்கள், போதை கும்பல்கள் ஆளும் நாடுகள், கற்பனைக்கும் எட்டாத கட்டுப்பாடுகள்,அட்டகாசங்கள்.


அம்மக்களின் அழுகுரலும், பசியால் கதறும் பிஞ்சுகளின் கூக்குரலும் கேளுங்கள் தானாக உங்கள் காதுகளில் தேசிய கீதம் ஒலிக்கும், கைகள் தேசிய கொடியை வணங்கும்.


அப்படி ஒரு அற்புதமான நாடு இது, அகதியாய் சுதந்திர போராட்ட காலத்தில் கூட ஒருவர் வெளியேறாத நாடு இது, இன்றும் சர்வ சுதந்திரமாய் , மகிழ்வாய் நம்மால் வாழமுடிகின்றது.


இந்தியா ஒரு நாடு மட்டுமல்ல, ஒரு மாபெரும் அதிசயமும் கூட, பல இனங்கள், மதங்கள்,கலாச்சாரம் என கலந்து வாழும் அற்புதமான ஒரு அமைப்பு, இந்தியாவினை தவிர உலகில் எந்த நாட்டிற்கும் அது சாத்தியமானதே அல்ல.


அந்த அற்புதமான‌ நாட்டின் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் பெருமை அடைகின்றேன்


இந்நாட்டிற்கு காலம் ஒவ்வொரு தலைவனை கொடுத்துகொண்டே இருக்கின்றது. அன்றைய சிக்கலான காலத்தில் நேரு, ராணுவ‌ போட்டியான காலத்தில் இந்திரா, பொருளாதார சவலான காலத்தில் மன்மோகன் சிங், இன்று ஒரே இந்தியா என்ற உணர்வு வரவேண்டிய நேரத்தில் மோடி என யாராவது வந்து இந்த தேசத்தை தாங்குகின்றார்கள்.


மோடி மீது ஆயிரம் சர்ச்சை இருக்கலாம். ஆனால் மாநில அரசியல் வலுபெற்று அதனால் இந்த தேசமே ஒரு மாதிரி சென்ற நிலையில், காங்கிரஸ் வலுவிழந்த நிலையில் நாடு முழுக்க அறியபடும் தலைவனாக, ஒரே இந்தியாவின் இரும்பு தலைவனாக , பிரதமராக மோடி அமர்ந்திருப்பது இந்நாட்டிற்கு நல்லது.


சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட அந்த தியாகிகளையும், அதன் பின் இத்தேசத்தை காத்து நின்ற நேரு போன்ற தலைவர்களையும், கல்வி கண் திறந்த காமராஜரையும், விஞ்ஞானத்தில் இத்தேசத்தை காத்து நின்ற பாபா, சதீஷ்தவான், அப்துல் கலாம் போன்ற விஞ்ஞானிகளையும்


யுத்தத்தில் இத்தேசத்தை காத்து நின்ற கரியயப்பா, மோனக்ஷா போன்ற தளபதிகளையும் , எல்லை காப்பில் உயிரிழந்த எண்ணற்ற வீரர்களுக்கும் நன்றி கண்ணீர் தெரிவித்தபடி சொல்கின்றோம்.


வந்தே மாதரம், வாழ்க பாரதம்.


உலகின் மாபெரும் அதிசயமும், பெரும் அற்புதமுமான இந்த தேசத்தின் 70ம் சுதந்திரதின விழாவினை இத்தேசம் மிக உற்சாகமாக கொண்டாடட்டும்.


இனிவரும் காலம் இந்தியர் காலமாய் உலகில் மலரட்டும்.


நம் தாயின் மணிக்கொடி கம்பீரமாய் பறக்கட்டும்













 




 



No comments:

Post a Comment