Thursday, September 21, 2017

நவராத்திரி திருவிழா கொலுவுடன் தொடங்கியிருக்கின்றது



Image may contain: indoor


நவராத்திரி திருவிழா கொலுவுடன் தொடங்கியிருக்கின்றது, இந்து நண்பர்களுக்கு அடுத்த 9 நாட்களும் முக்கியமான நாட்கள், மகா சிரத்தையாக ஒன்பது நாட்களும் நோன்பிருப்பார்கள், பத்தாம் நாள் விஜயதசமி கொண்டாட்டத்தோடு நிறைவு பெறும்.


ஒன்பது நாட்கள் நோன்புடன் பிரார்த்தித்து, பத்தாம் நாள் ஆசியோடு நிறைவு செய்வது என்பது இந்து மதத்தில் மட்டுமல்ல, பழமையான ஆசிய,ஐரோப்பிய மதங்களிலும் உண்டு, கலாச்சாரங்களிலும் உண்டு.


அவ்வளவு ஏன் ரோமன் கத்தோலிக்க மதத்தில் ஒரு கத்தோலிக்க ஆலய திருவிழாவோ அல்லது சிறப்பு ஜெபங்களோ 9 நாள் தொடர்ந்து பிரார்த்தித்து பத்தாம் நாள் நிறைவு செய்யவேண்டும் என்பது சட்டம்.


அதனை ஆங்கிலத்திலும், லத்தீனிலும் "நவனா" என்றே அழைப்பார்கள், லத்தீனிலும் ஒன்பது என்பதற்கு நவம் என்றே பெயர். தமிழில் நவநாள்.


அதனடிப்படையில் அனைத்து கத்தோலிக்க திருவிழாக்களை பாருங்கள் 9 நாள் ஜெபம், பத்தாம் நாள் கிடா வெட்டி கொண்டாட்டம் + தேர் பவனி என நிறைவு செய்வது, என இதே நவராத்திரியை "நவநாள்" என கொண்டாடுவார்கள். (11ம் நாள் திருவிழா செலவு கணக்கு பார்பார்கள்)


பிரிவினை கிறிஸ்தவர்கள் வேறுமாதிரி, ஆளாளுக்கு ஒரு போதனை, ஆளாளுக்கு ஒரு கொள்கைகளும் பத்திரிகைகளும், இப்பொழுது ஆளாளுக்கு டி.விகள், அதிரடியான மிரட்டல்கள் கூடவே சாபங்கள், அவர்கள் வேறு மாதிரி, மாட்டிகொண்டால் அவ்வளவுதான்,, பிராண்டி எடுத்துவிடுவார்கள்.


இந்தியாவில் தீபாவளி போலவே ஒட்டுமொத்த இந்திய மக்களும் கொண்டாடும் திருவிழா இந்த பூசை திருவிழா, வங்காளத்தில் துர்கா பூஜை, வட இந்தியாவில் காளி பூஜை கூடவே ராவண வதமான ராம்லீலா தென்னிந்தியாவில் தசரா, முத்தாய்ப்பாக ஆயுதபூஜை என கொண்டாடி மகிழும் வேளை இது.


ஒன்பது நாளும் விரதம் இருக்கவேண்டும், விரதம் இருக்கிறேன் என உண்ணாமல் இருக்கிறேன் அதனால் உறங்குகிறேன் என்றால் பராசக்திக்கே பனிமலை உருகும் அளவு கோபம் வருமல்லவா?


விரதம் என்றால் தியானிக்க வேண்டும், உணவை மறந்து இறைசக்தியை நோக்கி மனம் திருப்ப வேண்டும், ஒருவேளை கண்ணோ, மனமோ எங்காவது தறிகெட்டாலும் கூட அதனை கட்டுபடுத்தி இழுத்துவர சில காட்சிகள் வேண்டும், விரத காலம் எனும் நினைவு மனதில் இருந்துகொண்டே இருக்கேவேண்டும், அந்த உணர்வினை ஏற்படுத்தவே அமைக்கபட்டது தான் கொலு அலங்காரம்.


கொலு என்றால் அழகோடு வீற்றிருத்தல் என பொருள், கொலு மேடை அமைப்பதற்கென்றே முன்னோர் அழகான விதிகளை வகுத்தனர், 7 அல்லது 9 அடுக்கில் அமைக்கலாம்,


முதல் அடுக்கில் ஒர் உயிர் அதாவது புல்,தாவர வடிவம், 2ம் அடுக்கில் சங்கு போன்ற ஈருயிர்களின் வடிவம், 3ம் படியில் கரையான் போன்ற மூவுயிர் உருவம்.


4ம் படியில் வண்டு நாலுயிர் உருவம், 5ம் அடுக்கில் விலங்கு,பறவை போன்ற ஐஉயிர் வடிவங்களும், 6ம் அடுக்கில் மனிதன் அதாவது நல்ல மனிதர்கள் அல்லது தலைவர்கள் சிலை என வைத்து


7ம் அடுக்கில் மனிதனிலிருந்து தெய்வ நிலைக்கு சென்ற மகான்கள்,ரிஷிகள் உருவமும், 8ம் அடுக்கில் தேவர்கள்,தேவதைகளும், 9ம் அடுக்கில் மூல கடவுளும் கொண்டு அமைக்கவேண்டும்,


7ம் அடுக்கின் சிலைகள் பஞ்சபூதங்களில் ஒன்றான மணலால் மட்டும் அமைக்கபடவேண்டும் என்பது சாஸ்திர விதி, காரணம் மண்ணில் இருந்து வந்தவன் மனிதன்.


9 நாளும் விரத காலங்களில் இதனை பார்க்கும் பொழுதெல்லாம் மனிதனுக்கு இறைவனின் தத்துவத்தில் தனது நிலை புரியும், தானும் மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு செல்லவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும், மனித நிலையிலிருந்து இறங்கவே கூடாது என்ற வைராக்கியம் உருவாகும், பின்பற்றினால் மனிதன் மனிதனாக இருப்பான், அல்லது தெய்வமாவான்.


மனிதன் அப்படி ஆவானோ இல்லையோ, ஒவ்வொரு வீட்டிலும் வைக்கும் கொலுவிற்கும், கூட்டு பிரார்த்தனை மற்றும் பாடல்களின் மூலம் ஒரு சமூக பிணைப்பும் அதிகமாகும்.


இதுதான் கொலுவின் தத்துவம், நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் சக்தி தேவிக்கும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் பிரதான பூசைகள் நடைபெறும், சர்க்கரை பொங்கல்,சுண்டல் என மாலைபொழுது களைகட்டும்.


மிக மிக சுகமான காலங்கள், மகிழ்வான தருணங்கள், ஒவ்வொரு நாளுக்கும் ஒரு இறை தத்துவங்கள், என இந்து நண்பர்கள் கடவுளை நினைத்து உருகும் காலமிது.
சில விஷயங்கள் மதம் சார்ந்தவை, விஜய தசமி பாரம்பரிய நம்பிக்கை சார்ந்தது, ஆனால் இன்னும் சில விஷயங்கள் மத எல்லைகளையும் தாண்டி எல்லா மக்களுக்கும் போதனைகளை கொடுப்பது.


அதன் சிறப்புகள் மிக உயரமானது, எல்லா வகையிலும் இறைவனை போற்றி நிற்பது, வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் இறைவனை காண்பது எப்படி என்பதை பாரதம் உலகிற்கு சொன்ன பெரும் போதனையின் அடையாளங்கள் அவை.













 

No comments:

Post a Comment