முன்பு ஜப்பானில் ஒரு ஆசாமி சாமியாக இருந்தார், அவர் பெயர் ஷோகா ஆஷகரா. நான் தான் சிவன், இயேசு மற்றும் புத்தனின் மொத்த கலவை என சொல்லி போதித்தார்,
அவரின் அட்டகாசங்கள் ஏராளம், காமெடிகள் பெரும் சுவாரஸ்யம், அதனை எல்லாம் எழுதினால் பல நாட்கள் ஆகும். அதனால் சுருக்கமாக சொல்லிவிடலாம்.
நானே கடவுள் என கஞ்சா கலந்து அவர் கொடுத்த தீர்த்தத்தில் மயங்கி கிடந்தனர் சீடர்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமானார் பின் ஓம் ஷிரிங்யோ எனும் ஆசிரமத்தை தொடங்கினார், காணிக்கை கொட்டிற்று , சாமி தொட்ட பொருளை பல்லாயிரம் டாலர் கொடுத்து வாங்கினார்கள் பக்தர்கள். அவர் தாடி முடியினை கூட குப்பியில் அடைத்து பல கோடிக்கு விற்றுகொண்டிருந்தார்
கோடிகணக்கான பணம் குவிந்தபின் ஒருவனுக்கு அரசியல் ஆசை வரும், அந்த சாமிக்கும் வந்தது. நான் ஜப்பானின் அரசனாக போகின்றேன் என்றார், எதற்கு என பக்தர்கள் கேட்டார்கள்? வாழ்வில் சாமியிடம் அவர்கள் கேட்ட ஒரே கேள்வி அதுதான்
சாமி சுதாரித்தார் அதுவா?, அணுகுண்டை முன்பு வீசிய அமெரிக்கா மறுபடி ஜப்பானை ஆக்கிரமிக்க போகின்றது, என் ஒருவனால்தான் காப்பாற்றமுடியும் என கடவுள் சொல்லிவிட்டார், அதனால் இனி இந்த அரசரை அடித்துவிரட்டிவிட்டு நான் அரசனாக போகின்றேன், இனி ஜப்பான் என்னுடையது என சொல்லிவிட்டு ஆயுதங்களை குவித்த்தார்
ஜப்பானில் ஷரின் எனப்படும் நச்சு வாயு தாக்குதலை நடத்தினார், பின் பல நாசவேலைகளை செய்தார். ஏராளமானோர் பலியாயினர். ஜப்பான் கலவரகாடானது, பங்கு சந்தைகள் கூட நிலைகுத்தியது.
ஜப்பானிய காவல்துறை முதலில் இது தீவிரவாத தாக்குதல் என அஞ்சியது, அப்பொழுதே வடகொரியா இப்படி ஜிமிக்கி கம்மல் ஆடியிருந்தால் அன்றே யுத்தம் வெடித்திருக்கும், ஆனால் அப்பொழுதெல்லாம் வடகொரியா அமைதி
அதன் பின் அது தீவிரமாக விசாரித்ததில் சாமியார் சிக்கினார், பெரும் போராட்டத்திற்கு பின் பிடித்து வைத்து விசாரித்தால் கடுமையாக சாபம் கொடுத்தார், வாயில் 4 குத்து குத்தி கோர்ட்டில் நிறுத்தினார்கள்
அவர் ஆசிரமத்தை சோதித்ததில் கிடைத்த ஆவணமும், ஆயுதங்களும் அவர் உலகை பிடிக்க கிளம்பியதை உணர்த்தின, படுபயங்கர சாமியாருக்கு தூக்குதண்டனை விதித்தார்கள். சாமி இன்னும் தூக்கில் தொங்கவில்லை , பலமுறை ஒத்திபோட்டு இன்னும் விசாரித்துகொண்டே இருக்கின்றார்கள், விரைவில் சாமி முக்தி அடையலாம்
இப்பொழுது இந்த சாமியார் கதை எதற்கென்றால், அந்த ஹரியானா சாமி ராம் ரஹீம் என்பவரும் இதே பாணியில்தான் இருந்திருக்க்கின்றார். அவரின் பெரும் பரப்பிலான ரகசிய பண்ணையில் வெடிமருந்து தொழிற்சாலை இருந்திருக்கின்றது
தன் தோட்டத்து தக்காளி புனிதமானது என இரு தக்காளி ஆயிரம் ரூபாய்க்கும், 100 பட்டாணி 2 ஆயிரம் ரூபாய்க்கும், 1 பப்பாளி 5000 ரூபாய்க்கும் விற்றிருக்கின்றார், வாங்கியவர்கள் நிலை இப்பொழுது எப்படி என தெரியவில்லை.
ஆக இந்த ஹரியானா சாமியும் பெரும் பணம் குவித்துள்ளார், ஆயுதங்களை பதுக்கியுள்ளார் எதற்கு என்பதுதான் தெரியவில்லை
ஜப்பான் சாமியினை முடிந்தளவு விசாரித்துவிட்டு இது மனக்கோளாறு கேஸ் என தூக்கில் போடாமல் வைத்து சாப்பாடு போடுகின்றார்கள்
ஹரியானா சாமி என்ன கேஸ் என முத்திரை குத்தபோகின்றார்களோ தெரியாது. ஆனால் மனிதர் ஏதோ படுபயங்கர திட்டத்தோடு இருந்திருக்கின்றார் என்பது மட்டும் உண்மை. அது என்ன திட்டம் என வெளிவரவா போகின்றது?
சாமி என்றால் நம்ம ஊர் சங்கராச்சாரி மாதிரி அல்லது எஸ்ரா சற்குணம் போல இருக்க வேண்டாமா?
No comments:
Post a Comment