Saturday, September 16, 2017

காலத்தினால் வந்தவன், காலத்தை வென்றவன்



Image may contain: one or more people and people sittingகால சூழலுக்கு தக்கவாறே அறிஞர்கள் தோன்றுவார்கள், அக்கால சூழ்நிலைக்கு தக்க அறிவுரைகளை அல்லது போராட்டங்களை நடத்துவார்கள்.


இயேசு கிறிஸ்து இன்று போதித்துகொண்டிருந்தால் நிச்சயம் யூத மதத்தின் காட்டுமிராண்டிதனத்தை சாடமாட்டார், அவர்கள் அதிலிருந்து நிறைய‌ மீண்டு வந்தாயிற்று . ஆனால் பாலஸ்தீன் மீதான அதன் கொடூரத்தை நிச்சயம் அவர் சாடுவார்.


புத்தர் இன்றுவந்தால் மாட்டுகறி தின்னவேண்டாம் எனும் கூட்டத்திலா சேர்வார்? தீண்டாமை போன்ற பாகுபாடுகளை நிச்சயம் கண்டிப்பார், இலங்கையில், பர்மாவில் அட்டகாசம் செய்யும் புத்தமத்தை நிச்சயம் கலைத்தே விட்டு அவர்களை மதமற்றோர் பட்டியலில் சேர்த்துவிடுவார்.


தென் தமிழகத்தை பொறுத்தவரை நாம் கண்ட பெரும் மனித உரிமை போராளி பெரியார்.


ஆயிரம் சர்ச்சைகள் அவர்மேல் இருக்கலாம், ஆனால் மனிதன் மனிதனாக வாழ சாதி கொடுமை தடையானால், அந்த சாதிக்கு மதம்தான் காரணம் என்றால்? ஆண்டவனே வேண்டாம் எனும் தைரியம் அவருக்குத்தான் வந்தது.


அந்தகாலம் விநோதமானது, பிரிட்டிசார் ஆண்டாலும் உண்மையில் இந்தியர்களை நிர்வகித்தது ஒரு உயர்சமூகம், அதுதான் சகல விதங்களில் உயர்ந்தது என்றும், இறைவனின் பிரநிதிகள் நாங்கள் என்பதிலும், அந்த‌ விதத்தில் மற்ற சாதியினர் அறிவுபெற்றுவிட கூடாது என்பதிலும் கவனமாக இருந்தது.


அவர்கள் படிப்பதுதான் கல்வி, அவர்களுக்கு தனி ஆலயம், தனி உணவகம், தனிபாதை, அட்டகாசம், தாளாத அட்டகாசம். கிட்டதட்ட நபிபெருமான் காலத்தில் மற்ற மக்களை யூதர்கள் ஒதுக்கிவைத்த அதே நிலை.


யூதனாவது அவன் மதத்தில் குறுக்கிடும் வரை கொடியவன் அல்ல, ஆனால் இங்கு சாதியின் பெயரால் சக மனிதனை விலங்குகளை விட, அவன் வீட்டில் வளர்க்கும் பசுமாட்டின் சாணத்தைவிட இழிவாக பார்த்த்வர்களை என்ன சொல்வது?


மதத்தை மதத்தால் எதிர்த்தால் அது பெரும் வரலாற்றுபிழை, இன்று உலகில் நடக்கும் மகாகலவரங்களுக்கு காரணம் அதுவே. இதனை அற்புதமாக கண்டுகொண்ட பாமரந்தான் ஈரோட்டு ராமசாமி.


மதத்தை மானுடத்தால் அடிக்கலாம், மனிதன் கல்வி கற்று, மானத்தோடு வாழ்ந்தால் மதத்தின் உண்மை அவனுக்கு தெரியவரும், யாவரும் சமம், மானிட சமூகம் மதத்தால் அல்ல அறிவால் உயரவேண்டியது என்பது அவர்கொள்கை.
கிட்டதட்ட இந்திய எதார்த்தம் அவருக்கு புரிந்தபொழுது வயது 50 நெருங்கிற்று, ஒரு மனிதன் ஒய்வெடுக்கும் வயதில்தான் பெரியார் சமூகத்தை சீர் திருத்த தொடங்கினார்.


இப்பொழுது சமுதாய நலனை 4 அல்லக்கைகளை கொண்டு கூட்டம் போட்டு சொல்லமுடிகின்றது, பலருக்கு முகநூலிலே கணல் தெறிக்க, விரல்கள் தேய தேய‌ புரட்சி செய்ய முடிகின்றது.


பெரியாரின் காலம் அப்படி அல்ல, கடவுளின் பிரதிநிதிகளை எதிர்த்து "கடவுள் இல்லை மனிதம் உண்டு" என முழங்குவது சாமான்யம் அல்ல (இன்றும் தமிழகதில் டிராபிக் ராமசாமி நிலை தெரியும்), அவர் சிங்கமென முழங்கினார்,
பாமரர்களிடம் பாமர தமிழில் விளக்கினார், வாசிக்க தெரிந்தவருக்கு பத்திரிகை நடத்தி விளங்க வைத்தார். அன்றைய சென்னை ராஜதானியில் அய்யர்,அய்யங்கார்,நம்பூதிரி, சாஸ்திரி என ஆட்டம்போட்ட அனைவருக்கும் சாட்டையடி கொடுத்தார்.


இன்றைய வாசிக்கும் பழக்கம் அவர் கொடுத்தது, இன்று முகநூலிலோ அல்லது எதிலோ சில எதிர்குரல்கள் வருகிறது என்றால் அதனை தொடங்கிவைத்த பிதாமகன் அவர்.


பெண்ணடிமைக்கு எதிராக அணலாய் எழுந்த குரல் அவருடையது, செயல் அவருடையது, தேவதாசி கொடுமைக்காக சட்டமன்றத்தில் அதனை ஆதரித்த காங்கிரஸ் பெரியவரை எதிர்த்து "உங்கள் வீட்டுபெண் அப்படி இருக்கட்டும், எமது பெண்ணக் வாழவிடுங்கள்" என சொன்ன குரலின் அடிநாதம் பெரியார்.


சொன்னால் சொல்லிகொண்டே போகலாம், ஆனால் ஆட்சியை மாற்ற(கைபற்ற) விரும்பியர்களிடம் அவர் சொன்னது, ஆட்சி நமது குறிக்கோள் அல்ல, நாம் விரும்புவது சமூக மாற்றம், அதில் இறுதிவரை நின்றார். (சமூகமாவது மண்ணாவது என ஒரு கும்பல் ஆட்சி பிடித்து பெரியார் பெயரினை கெடுத்தது, இன்னும் கெடுத்துகொண்டிருப்பது வேறுவிஷயம்)


ஆனால் அவர் தள்ளாத வயதிலும் மூத்திர சட்டியை சுமந்து, தமிழக மூலை முடுக்கெல்லாம் போதித்துகொண்டுதான் இருந்தார்.


மேல்நாட்டில் ஒரு சபை உண்டு, அவர்கள் கொள்கை விசித்திரமானது


பைபிளின் ஆதிஆகமத்தில் கடவுள் அறிவுகொடுக்கும் பழத்தை தடை செய்வார், அதாவது மனிதன் அறிவுபெறுவது அவருக்கு பிடிக்கவில்லை,
ஆனால் கொடியவன் என்றாலும் மனிதன் அறிவுபெறட்டும் என கனி கொடுத்தவன் அதாவது மனிதன் அறிவுபெற்வேண்டுமென்று அவன் தான் ஆசைபட்டானாம்.


அப்படியே மனிதன் அறிவுபெற்றான், உலகம் மாறிற்று என அவனை கொண்டாடும் மதமே உண்டு.


அதுவேறு விஷயம்.


பொல்லாத சாத்தானையே கொண்டாடும் உலகில், மிக‌கொடிய கட்டுபாடுகளால் மதத்தின் பெயரால் மனிதனை மிருகமாக்கிய மத்தினை கண்டித்து மனிதனுக்கு கல்வியும் சிந்தனையும் தேவை என முழங்கிய பாமர மனிதனை கொண்டாடுவதில் என்ன தவறு காணமுடியும்?


சாக்ரடீசும்,லிங்கனும்,லெனினும்,புத்தனும்,மகாவீரரும், பெரியாரும், வேறு அல்ல. எல்லாமே மனிதனை மனிதனை மனிதனாக நடத்துங்கள் என சொல்லிய மகான்கள்.


இன்று நடக்கும் கூத்துகளோ அல்லது சில கீழ்தரமான பெரியார் எதிர்ப்புக்களோ கண்டு உண்மையான பெரியார் விரும்பிகள் சினமடையமாட்டார்கள், காரணம் அவர் கடந்த அவமானமும்,நெருப்பாறும் அப்படியானவை.
ஒருமுறை பெண்ணுரிமை பற்றியும் கற்பு இன்னபிற பெண்கள் நிலைபற்றி அச்சிலேற்றமுடியாத வார்த்தையை அவரிடம் கேட்டார்கள்.


அமைதியாக சொன்னார் "என் வீட்டுபெண் எனக்கு அடிமை அல்ல, அவள் வாழ்க்கையை சுதந்திரமாய் வாழ அனுமதிப்பேன், அது அவள்விருப்பம்",
அக்காலத்தில் இந்தவார்த்தை பெரியாரை தவிர யாருக்கும் சாத்தியமில்லை.


உற்சாகமாக சிலர் இன்று அவரை அவமானபடுத்தலாம், இன்று மதத்தின் பெயரால் அவர் படத்தினை இழிவுபடுத்துபவர் ஒன்றை நினைவு கொள்ளவேண்டும்.


அதாவது இந்தியாவில் இவர்கள் நம்பிகொண்டிருப்பது போல ஒரு மதபுரட்சி நடக்கலாம், அப்பொழுது சாதி இல்லா இந்துமதம் அமைப்பீர்களாயின் அது நிச்சயம் பெரியாரின் வெற்றி.


அப்படி அல்லாமல் சாதியோடு இந்துமதம் அமைப்பீராயின் நிச்சயம் இன்னொருவன் பின்னாளில் போராட வருவான், அவன் படிக்கும் மேஜையின் மீது பெரியார் சிரித்துகொண்டிருப்பார்.


பெரியார் என்பது ஒரு தென்னிந்திய மானிடபுரட்சியின் அடையாளம், அவர் சிந்தனையின் இமயம், பல காட்டாறுகள் அதில் உருவாகுமே தவிர அது அசையாது.
இந்துமதம் சாதியை ஒழித்தாலும் அல்லது எழுச்சிபெற்று ஓளிவீசி சாதியால் சரிந்தாலும் அதில் அந்த தாடிக்கார கிழவன் முகம் நிச்சயம் தெரியும்.


அதனால்தான் உறுதியாக சொல்லமுடியும் அவருக்கு ஒருகாலமும் தோல்வியில்லை, இல்லவே இல்லை.
காரணம் அவர் நேசித்தது ம‌தமோ,பதவியோ,இன துவேஷமோ அல்ல‌ மானுடனத்தினை.


மானுடத்தை நேசிப்பவர்கள் வரலாற்றில் அழியா இடம்பிடித்தவர்கள்,பல மகான்களை சுமந்த இந்த உலகவரலாறு இதனை அழுத்தமாக பதிந்துவைத்திருக்கின்றது.


பெரியாரை பழிப்பவர்கள் ஒன்று அவரை புரிந்து கொள்ளோதார இருக்க முடியும் அல்லது அந்த கோஷ்டியாக மடுமே இருக்க முடியும்.


அந்த கலகக்காரன் காலத்தினால் வந்தவன், காலத்தை வென்றவன், எக்காலமும் இங்கு தேவைபடுபவன்.





 

No comments:

Post a Comment